12/14/10

எனது இந்துத்வம்

சாப விமோசனம்
ஐநூறு அடிக்கு மேலான ஆழ்துளைக் கிணறுகள்
இவ்வளவு அவ்வளவு என்றில்லாமல்
எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் தேக்க
நிலத்தடித் தொட்டிகள்.
எந்த வ ட்சியையும், தண்ணீர் பஞ்சத்தையும் தாங்கும்
வீடுகளிருந்த அந்தத் தெருவில்.. ஒரு தெருக்குழாய்!

தெருக்குழாய்களுக்கு அழகே
அதைச் சுற்றிலும் பிளாஸ்டிக் குடங்களும்
நைலான் சேலைப் பெண்களும்தானே!
அதற்குக் கூட வழியில்லாமல்
அத்தெருக்குழாய் சபிக்கபட்டிருந்தது.
துருப்பிடித்து பல காலமாய் நின்று கொண்டிருந்தது
சாப விமோசனத்திற்கு காத்துக் கொண்டிருந்த அகலிகை மாதிரி..

இன்று காலை வாக்கிங் சென்றபோது
அத்தெருக்குழாயைச் சுற்றிலும்
தமிழல்லாத வேறு பாஷையில் பேசிக்கொண்டு
கொஞ்சம் தள்ளியிருந்த காலி பிளாட்டில்
ரோடு வேலைக்காக வந்து டெண்டடித்துத் தங்கியிருந்த
பீகாரியப் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்...

ஸ்ரீ ராமனால் மட்டுமல்ல
சீதைகளாலும் சில நேரங்களில் சாப விமோசனம் தரமுடியும்

நிலையாமை
அது ஒரு நாலு ரோடு கூடுமிடம்..
6 x 10 என்ற விசாலமான பிளக்சில்
உள்ளூர், தமிழக, தேசிய தலைவர்கள்
மாலையுடன்....
மகுடம் தரித்து உட்கார்ந்திருப்பார்கள்....
கவர்ச்சியாகச் சிரிப்பார்கள்....
கம்பீரமாக நடப்பார்கள்....

பருவத்திற்கு ஏற்றமாதிரி
படங்களும் மாறிவிடும்.

மாறினால்தான் என்ன?

எதைக் கொண்டுவந்தார்கள்
அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட
அவர்கள் அங்கு இல்லாததால்
எதை இழந்துவிட்டது
அந்த நாலு ரோடு சந்திப்பு!

பாண்டிச்சேரியிலிருந்து மதுரை
முன்னொருநாள்
ஆரோவில்லுக்குச் சென்றிருந்தேன்
என் நண்பரின் நண்பர்களாக
பல காலம்
ஆசிரமத்திலும்
ஆரோவில்லிலும் வாழ்ந்துகொண்டிருக்கும்
பலருடன் பக்கத்திலமர்ந்து பேசினேன்.
அரவிந்தரையும் அன்னையையும்
அவர்களிடத்தில் தேடினேன்....

பிறிதொருநாள்
கண் சிகிச்சைக்காக உறவினறொருவரை
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றேன்
அப்பொழுது தான் தெரிந்தது
நோயாளியாகவும்,
நோய் தீர்ப்பவராகவும்
அரவிந்தரும், அன்னையுமே நடமாடிக் கொண்டிருந்தனர்.
அரவிந்தரும், அன்னையும்
பாண்டிச்சேரியிலிருந்து மதுரை வந்து
ஆண்டுகள் பல ஆகிவிட்டனவாம்.

No comments: