4/4/13

நல்லாட்சியும் சமூக மூலதனமும்–Good Governance and Social Capital

பத்ரி கொடுத்த புத்தகம்.
ஓரிரு மாதங்களுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆங்கிலத்தில் எழுதியிருந்த Swaraj என்ற புத்தகத்தின் தமிழாக்கமான “தன்னாட்சி – வளமான இந்தியாவை உருவாக்க” (தமிழில் கே.ஜி. ஜவர்லால் - கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தைத் திரு. பத்ரியவர்கள் படிக்கக் கொடுத்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் நாடறிந்த சமூக ஆர்வலர். தகவல் அறியும் உரிமைச்சட்டம் இந்தியாவில் நிறைவேற அவரின் பங்களிப்பிற்காக ராமோன் மக்ஸாசே விருதும் பெற்றவர். பன்முக அனுபவம் கொண்ட அவருடைய கருத்துக்களைப் பரவலாகக் கொண்டு சேர்ப்பதும் கூட ஒருவிதமான சமூக அக்கறையே. அந்த வகையில் கிழக்கு பதிப்பகத்தின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
அந்த புத்தகத்தைப் படித்தபோது எனக்குள்ளே பல சிந்தனைகள். தன்னாட்சியே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை. ஆதாரம். மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டுமென்பதில் சமரசத்திற்கு இடமில்லையாதலால், தன்னாட்சி என்ற கருத்தாக்கத்தை யாராலும் வெளிப்படையாக விமர்சிக்க முடியாது. ஆனால் நம் முன்னுள்ள சவாலே தன்னாட்சியை அடைவது பற்றியல்ல; ஏற்கெனவே ஓரளவு கைகூடியிருக்கும் தன்னாட்சியை (புதிய பஞ்சாயத்து அமைப்பு) எப்படி அர்த்தமுள்ளதாக்குவது என்பது பற்றித்தான். தன்னாட்சி என்பது சர்வரோக நிவாரணியல்லவென்றாலும், சர்வரோக நிவாரணத்திற்கான மூலப்பொருள் அதில் உள்ளதென்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு நிவாரணியை சரியாக உபயோகிக்கத் தெரிந்தால்தான் (மருந்தின் அளவு, எத்தனைவேளைகள், எத்தனை நாட்கள், பாதுகாக்கும் முறை), நோயிலிருந்து நிவாரணம் பெறமுடியும். மருந்து நன்றாகச் செயல்படவும், அதன் பக்க விளைவுகளைத் தடுக்கவும் சில நேரங்களில் துணை மருந்துகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த users Intelligence மாதிரி, தன்னாட்சி சரியாகச் செயல்படவேண்டுமென்றால், அதற்குத் துணைபுரிய ஒத்திசைவான சூழலும் வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் தன்னாட்சிக்கு வலுசேர்க்கக் கையாண்ட உதாரணங்களிலெல்லாம், தன்னாட்சியைவிட இந்த ஒத்திசைவான சூழலே மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தன்னாட்சிக்கு வலுசேர்க்கவும், தன்னாட்சி தவறிழைக்காமல் பார்த்துக்கொள்ளவும் ஒத்திசைவான சூழல் முக்கியம்.
தன்னாட்சியும் சமூக மூலதனமும்
இந்த ஒத்திசைவான சூழலை “சமூக மூலதனம்” என்று சொல்லலாம். சமூகம் செயல்பட பல்வேறு அமைப்புகள்/நிறுவனங்கள், மதிப்பீடுகள், விதிமுறைகள் பெரிய அளவு உதவுகின்றன. ஆனால் இவையெல்லாம் மூலதன அந்தஸ்தை அதன் போக்கில் பெற்றுவிட முடியாது. சமூகமென்பது மானிட உறவுகளின் வலைப்பின்னல் (Society is web of social relationships). அந்த உறவுகளில் ஸ்திரத்தன்மையும், நம்பகத்தன்மையும் ஏற்படும்போது அது மூலதன அந்தஸ்தைப் பெற்று, முன்னேற்றத்திற்கான மூலப் பொருளாகின்றது. ஒரு தரிசு நிலம், நீர்ப்பாசன வசதி பெரும்போது எப்படி அதனுடைய உற்பத்தி பெருகுகின்றதோ, அது மாதிரி சமூக மூலதனம் உள்ள இடங்களில், மற்ற மூலதனங்களான இயற்கை மூலதனம் (Natural Capital), மனித மூலதனம் (Human Capital), நிதி மூலதனம் (Financial Capital), கட்டுமான மூலதனம் (Physical Capital) போன்றவை உயிர்த்தெழும். மேலும் இந்த மூலதனங்கள் ஒன்றோடொன்று ஒத்திசைந்து செயல்படும் தன்மை கொண்டவை.
தன்னாட்சி/ ஊராட்சி கூட ஒரு மூலதனம்தான். இன்றைய தன்னாட்சி சட்டபூர்வமான ஸ்திரத் தன்மையை அடைந்திருந்தாலும், துரதிருஷ்டவசமாக அதைக் கொண்டுசெலுத்துபவர்களின் நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகிவிட்டதால், அது சமூகமூலதனம் என்ற அந்தஸ்திலிருந்து பெருமளவு நீர்த்துப்போய்விட்டது. அது சிலரின் கழுத்திலும், விரல்களிலும் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கின்ற தங்கநகை போன்று ஒரு Non Performing Asset.
சமூக மூலதனம் – சில உதாரணங்கள்
நமது பிரச்சனைகளான பொறுப்பற்ற மக்கள் பிரதிநிதிகள், அவர்களின் ஊழல், அதனால் ஏற்படும் திறமையின்மை போன்றவை சமூக மூலதனம் நீர்த்துப் போனதன் விளைவே. ஒரு சமூகம் தன்னைத்தானே புனரமைத்துக்கொள்ள நீர்த்துப்போன சமூக மூலதனங்களை மீண்டும் கட்டமைக்கலாம். அல்லது புது மாதிரியான சமூக மூலதனங்களை உருவாக்கலாம். ஊழலுக்கு எதிரான அண்ணாவின் அமைப்புக்கூட தேசிய அளவில் அப்படி உருவான சமூக மூலதனம்தான். பெண்கள், குழந்தைகள், தலித்துகள், பாலியல் சிறுபான்மையினர் போன்றோர் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் செயல்படும் நிறுவனங்கள் சமூக மூலதானத்திற்கு எடுத்துக்காட்டுக்களே. ஈழத்தமிழர்களுக்காகப் போராடும் மாணவர் அமைப்பும் கூட சமூக மூலதனமே. இந்த மாதிரியான Macro Examples-ஐ உதாரணம் காட்டினால், இவைகளைக் கவர்ச்சியும், அர்ப்பணிப்பும், செல்வாக்குமிக்க தலைவர்கள் தோற்றுவித்து நடத்துவதால், இதற்கெல்லாம் பெருமுயற்சியும், பேராற்றலும் தேவை என்று நினைத்து நம்மில் பலர் சோர்வடைந்து விடுகின்றோம். ஆகையால் கிராம அளவில், ஒரு சிறிய எல்லைக்குள் நடக்கும் Micro Examples-ஐ உதாரணமாகக் கொண்டால், நம்முடைய புரிதல் இன்னும் சற்று அர்த்தமுள்ளதாகும்.
கிராமங்களில் மாறிவரும் சமூக மூலதனம் I.
என்னுடைய கிராமத்தையே எடுத்துக்கொள்வோம். 70 ஆண்டுக்களுக்கு முன்னரே ஒரு ஆரம்பப்பள்ளி உருவானது. உள்ளூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் முனைப்பாக செயல்பட்டு, ஒரு துணை தபால்நிலையம் கொண்டுவந்தார். நான் பள்ளிப்படிப்பு முடித்த அந்த காலகட்டத்தில், எங்கள் ஊருக்கு கிடைத்த அந்த பின்கோடே என்னை மனவெழுச்சிக்கு உள்ளாக்கியது. என்பெயர், ஊர்ப்பெயர், பின்கோடு இருந்தாலே இந்ததேசத்தில் எங்கிருந்தும் என்னை அடையாளம் காணமுடியும் என்ற பெருமையை அந்த இலக்கங்கள் கொடுத்தது.
நான்கு உட்கடை கிராமங்களைக் கொண்ட பஞ்சாயத்தில், பல்வேறு சமன்பாடுகளால் (Equations) எங்கள் ஊரைச்சேர்ந்த யாரும் ஆரம்பத்தில் ஊராட்சி தலைவராக முடியவில்லை. அரசுத் திட்டங்களெல்லாம் (சமூகநலக் கூடம், துணை சுகாதார நிலையம் என்று) பக்கத்து ஊருக்கே சென்றது. பொதுவான கட்டமைப்பு வசதிகளைத்தவிர பிரத்தியேகமான அரசு முதலீடுகள் எதுவும் எங்கள் ஊருக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் ஊரிலிருந்த மூன்று ஜாதியினரும் பல இலட்சங்களைச் செலவழித்து புதிய வழிபாட்டுத் தலங்களை, கல்யாண மண்டபங்களைக் கட்டிக்கொண்டனர். ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளியானது. ஆனால் அதை நிர்வகித்த குழுவால் தரத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
கடந்த காலத்தில் ஜாதிகளுக்குள்ளும், ஜாதிகளுக்கிடையேயும் இருந்த சௌஜன்யம் இப்போது இல்லை. இதனால் பிரச்சனை ஏதுமில்லாவிட்டாலும், கூட்டு முயற்சிகள் பெரிதளவு நின்றுவிட்டது. சமீபத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், எங்கள் ஊரிலுள்ள அனைத்து முதியோர்களும் முதியோர் பென்ஷன் பெறுகின்றார்கள். “கொள்ள காசு பென்சனாக நம் ஊருக்கு வருகின்றது” என்று சொன்னவரிடம், “எல்லாத்தையும் தொலைச்சுட்டோம். இதுல மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது?” என்று கேட்டேன். அவர் இரண்டுமூன்று நபர்களின் பெயரைச் சொல்லி “அவங்க ஏற்பாடுதான். 1200 லிருந்து 1500 வரை செலவாகும். பென்ஷன் வாங்கித்தந்து விடுவார்கள்” என்றார். இந்த ஏற்பாட்டை நம்மில் பெரும்பாலோர் ஊழல்/இடைத் தரகு (in collusion with govt staff) என்பார்கள். எனக்கு அப்படிப் படவில்லை. அது ஒரு சேவை (service provision). மக்களை அலைக்களிக்காமல் ஒரு அரசுத் திட்டத்தை அவர்களிடம் கொண்டுசேர்ப்பது. அவர்கள் இடைத்தரகர்கள் அல்ல. (They are not power brokers. Instead they are bridges/ bridging social capital) அவர்கள் நம்பிக்கையானவர்கள். கடந்த காலத்தில் சமூக மூலதனம் வலிமையாக இருந்தபோது, ஊராரால் பள்ளி போன்ற அமைப்புகளை அரசுடன் தொடர்பு கொண்டு ஏற்படுத்தமுடிந்தது. இன்று அந்த வலிமை நீர்த்துவிட்டது. அவர்களால் பள்ளியின் தரத்தை கட்டிக்காப்பாற்றக்கூட முடியவில்லை. அதற்கு இன்னும் அதிக ஒருங்கிணைப்பு தேவை. அது இல்லை. இருந்தாலும் அவர்களால் பென்ஷன் வாங்கிக்கொடுக்க முடிகின்றது.
கிராமங்களில் மாறிவரும் சமூக மூலதனம் II.
பல ஊர்களிலும் இதே நிலைதான். சமூக மூலதனம் தரத்திலும், அளவிலும் மாறி விட்டது. இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு உள்ளடங்கிய மீனவ கிராமம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஊரில் மீனவர்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் மூலமாக இருபத்தைந்து வீடுகளை அவ்வூர்த் தலைவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அது மாதிரியான தலைமை இப்போது இல்லாததால், சுனாமி வீடுகளைப் பெறுவதில் கூட அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்தது. மாறாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லாத காலங்களுக்கு, அரசு காப்பீட்டுத்/ ஈட்டுத் தொகை (lean period insurance) வழங்குகின்றது. அதைப் பெற மீனவர்கள், அடையாள அட்டை பெற்று கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகி பிரீமியமும் செலுத்தவேண்டும். அந்தப் பணத்துடன் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பும் சேர்ந்து கடலுக்குச் செல்லாத நான்கு மாதங்களுக்கு கணிசமான ஈட்டுத்தொகை வழங்கப்படுகின்றது. சற்றுத் தொலைவிலிருந்த அலுவலகத்தில் சென்று பிரீமியம் செலுத்துவதில் தொய்வு ஏற்பட, ஆரம்பத்தில் பலகுடும்பங்களால் ஈட்டுத்தொகையைச் சரியாகப் பெறமுடியவில்லை. மீன் வளத்துறையுடன் நெருக்கமாக இருந்த ஒருசிலர், அந்தப்பிரீமியத்தை வசூலித்து கட்ட ஆரம்பித்தார்கள். இரசீதுகளையும் பத்திரமாக வைத்திருப்பார்கள். சிலருக்கு பிரீமியம் கட்ட முடியாதபோது அவர்களே கட்டி, பின் அந்த பணத்தை வாங்கிக் கொள்வார்கள். இதற்கு குறைந்த சேவைக்கட்டணமாக மாதம் ரூபாய் ஐந்து பெற்றுக்கொள்வார்கள். பிரீமியம் கட்டவும், ஈட்டுத்தொகை பெரும்போது மீனவர்கள் கொடுக்கும் வெகுமதி என்று இந்த சேவையில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் எத்துணை பேருக்கு சேவை செய்கின்றார்களோ அதைப்பொருத்து மாதம் குறைந்த பட்சம், 1200-1500 வரை வருமானமீட்டமுடியும். இது அவர்களுக்கு ஒரு (துணை) ஜீவனோபாய உத்தி.
“சார் நாங்க அலையவேண்டியதில்லை. பிரீமியம் கட்டவேண்டிய கெடுவுக்கு ஒரு வாரத்திற்கு முன் சொல்வார்கள். பிரிமியத்தோடு அஞ்சு ரூபாய் சேத்துக் கொடுக்கணும். பணத்துக்கு தட்டுப்பாடு என்றால், இருப்பதை வாங்கிக் கொண்டு அவர்களே மீதிப் பணத்தைப் போட்டு கட்டிவிடுவார்கள். மீதியை எங்கள் கணக்கில் பற்று எழுதிக்கொள்வார்கள். வேறு வழியற்ற முதியோர்களுக்கும், விதவைகளுக்கும் அவர்களே கட்டி விடுவார்கள். ஈட்டுத் தொகையில் அதைப்பிடித்துக் கொள்வார்கள். அவர்களே வயதிற்கு வந்த எல்லோருக்கும் அடையாள அட்டை வாங்கி உறுப்பினராக சேர்த்துவிடுவார்கள்” என்று விளக்கமளித்தார். இதைச் செய்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளல்ல. அவர்கள் Service Providers. இதில் வேறொரு கோணம் இருப்பதை மீனவர்களே உணர்ந்திருக்கின்றார்கள். மீனவர்கள் அல்லாதோருக்கும் அடையாள அட்டை வாங்கி அவர்கள் பெயரில் பிரிமியம் செலுத்தி, ஈட்டுத்தொகையை மீன்வளத் துறை அதிகாரிகளும் இவர்களும் பங்கு போட்டுக்கொள்வார்கள். “அதனால் எங்களுக்கென்ன நஷ்டம்” என்று சொல்லும் மீனவர்களுக்கு இதில் ethical issues இருப்பதாகப் படவில்லை.
இந்த மாதிரியான ஏற்பாடுகள் நமக்கு சிலவற்றை புரியவைக்கின்றது. உள்ளூர் அரசியல்வாதிகளிடம் எதற்குச் செல்ல வேண்டும், உள்ளூர் Service Providers களிடம் எதற்குச் செல்லவேண்டும் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களில் கூட இந்த மாதிரியான மாற்றங்களைக் காணலாம். சமூக மூலதனம் இன்று individual மற்றும் community assets ஆக பரிணாமம் அடைந்திருக்கின்றது. மாறிவரும் இந்தப் பரிணாம மாற்றத்தில் நிறைகள் இருப்பது மாதிரி குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இது ஒருவகையான Bridging Social Capital. இன்னும் சில எடுத்துக்காட்டுகளை பகிர்ந்துகொண்டாள் சமூக மூலதானத்தின் பல்வேறு கோணங்களைப் புரிந்து கொள்ளலாம்.
நாடார் உறவின்முறை கற்றுத் தரும் பாடங்கள்
சமூக மூலதனத்தை நான் புரிந்துகொண்டதை இன்னொரு கோணத்தில் இப்படி விளக்கலாம்.
நாடார் உறவின்முறை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அது ஒரு ஜாதிச் சங்கம். பத்து பதினைந்து நாடார்கள் ஒரு ஊரில் குடியிருந்தாலே அவர்கள் ஒரு உறவின் முறை ஏற்படுத்திக் கொள்வார்கள். பின் மெதுவாக அவ்வூரில் உறவின் முறைக்கு பொதுச்சொத்துக்கள் உருவாகும். அது ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவோ, ஒரு ஆரம்பப் பள்ளியாகவோ கூட இருக்கலாம். ஏதோ நாடார்கள்தான் ஜாதி அடிப்படையில் ஒன்றுகூடுவதாகவும், அங்கிருக்கும் மற்றவர்களுக்கெல்லாம் ஜாதிய உணர்வே இல்லாதது மாதிரியும் “நாடானுக நாலு பேர் இருந்தாக் கூட, அவங்களுக்குள்ளே எப்படி கட்டுப்பாடா, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு ஒரு வழியாக எந்திரிச்சிராணுங்க” என்று அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மை சமூகம் ஒரு மாதிரி புழுக்கமடையும். ஆனால் கூர்ந்து கவனித்தால், அந்த ஊரைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினரில் பலர், அந்த வட்டாரத்திலே மிகவும் செல்வந்தர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவ்வளவு செல்வமில்லாத, பிரபலமில்லாத ஒரு சிறிய நாடார் குழு சாதிப்பதை, மற்ற சமூகத்தினர் எண்ணிக்கையையும், செல்வத்தையும், பிரபலத்தையும் வைத்து சாதிக்கமுடியாது. “காமராஜர் இல்லாவிட்டால் இவர்களெல்லாம் இப்படி வந்திருக்கமுடியுமா? என்று பேசி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் உண்மை என்னவாக இருக்குமென்றால், அந்த சிறிய உறவின்முறையில் கணிசமானோர் திராவிட இயக்கச் சார்புடையவர்களாக இருப்பார்கள்.
அவ்வளவாக மனமுதிர்ச்சி அடையாத காலத்தில், என்னுடைய புரிதலும் இந்த பொதுக்கருத்தை ஒட்டியே இருந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள, பாலமேடு பாத்திரகாளியம்மன் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு சென்று வந்த பிறகு என்னுடைய புரிதல் மாற்றுருவாக்கமடைந்தது.
பாலமேடு நாடார் உறவின் முறையும் பத்ரகாளியம்மன் பால்பண்ணையும்
பாலமேடு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய பேரூராட்சி. மிகச் சிறிய குடியிருப்பாக இருந்த கடந்த காலத்தில், அங்கு ஐம்பதுக்கும் குறைவான நாடார் தலைக்கட்டுக்களே இருந்திருக்கின்றது. அந்த ஐம்பது தலைக்கட்டுகள் ஒன்றிணைந்து ஒரு உறவின் முறையை ஏற்படுத்திக் கொண்டார்கள். உறவின் முறை வளர, வளர, உறவின்முறைக்கென்று தனியாக கடைத்தெரு, நந்தவனம், ஆரம்பப் பள்ளி, பால்வாடி, மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, சினிமா தியேட்டர், இளைஞர்கள், பெண்களுக்கென்று தனியாக அமைப்புகள், அந்த அமைப்புகளுக்கென்று வருமான வாய்ப்புக்கள், நாள்தோறும் 10000 லிட்டர் பாலை பதப்படுத்தி, சந்தைப்படுத்த வசதிகள், 600க்கும் மேலான பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பு, தொழில் கல்வி பயில வாய்ப்புக் கிடைக்கும் நாடார் மாணவர்களுக்கு கணிசமான ஊக்கத் தொகை, மேற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி என்று உறவின் முறையின் செயல்பாடுகள் பிரமிக்க வைத்தன. பாலமேடு உறவின் முறை உருவாக்கிய பொதுச்சொத்துக்களின் மதிப்பே குறைவாக மதிப்பிட்டாலும் 10 -15 கோடிக்கு மேல் தேறும். இத்தனைக்கும் அந்த ஊரில் நாடார்கள் பெரும்பான்மையினரல்ல. எண்ணிக்கையில் அதிகமாயுள்ள, அதிகச் சொத்துவைத்திருக்கின்ற, அதிகம் படித்திருக்கின்ற பிற ஜாதியினர் சாதிக்க முடியாததை ஒரு சிறுபான்மை குழுவால் எப்படிச் சாதிக்க முடிந்தது? தென்மாவட்ட நாடார்கள் எதைத் தொடங்கினாலும், பத்ர காளியம்மன் பெயரில்தான் தொடங்குகின்றார்கள். அவர்களின் சாதனை அம்மனின் ஆசீர்வாதமாக இருக்குமோ? அந்த மாதிரி ஒரு துடியான தெய்வத்தின் அருள் மற்ற ஜாதியினருக்குக் கிடைக்கவில்லையோ என்னமோ?
அவர்களின் சாதனைக்கான காரணம் பத்ரகாளியம்மன் பால்பண்ணையில் அப்போது செயலாராக இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்த போது புரிந்தது. நாங்கள் நான்கைந்து பேர் சென்றிருந்தோம். சங்கச் செயலாளர் எங்களுக்கு தேநீர் வரவழைத்தார். அவருக்கு முன்னாள் தேநீர் டம்ளர் ஏதும் வைக்கப்படவில்லை. தேநீர் குடிக்கும்முன், மரியாதையின் பொருட்டு “அண்ணாச்சி உங்களுக்கு” என்று லேசாக இழுத்தேன். “உங்களுக்கு டீ வாங்கித் தரத்தான் எனக்கு அனுமதி. சங்கச் செலவில் டீ குடிப்பதற்கு எனக்கு அனுமதியில்லை” என்று சிரித்துக்கொண்டே கூறியபோது, பள்ளிவகுப்பே முடித்திருந்த, ஒரு தலைவனுக்குரிய தோற்றப்பொலிவு ஏதுமில்லாதிருந்த, சுருக்கம் விழுந்த பாலியஸ்டர் சட்டையை அணிந்திருந்த அந்த எளிமையான மனிதர், விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றார். அப்பொழுது கிடைத்த ஞானம். “வொக்........ளி. புரிஞ்சிக்கிட்டாயா. இது காமராஜரின் ஆதரவு அல்ல. சொல்லப்போனால் பத்ரகாளியம்மன் ஆசிகூட அல்ல. இவர்களின் சமூக ஒழுக்கம். அந்த ஒழுக்கம் காலப்போக்கில் உருவாக்கிய பரஸ்பர நம்பகத்தன்மை. அதுதான் நாடார் உறவின் முறையின் வலிமை. ஜாதி என்பது ஒரு அடையாளம். அந்த அடையாளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நிறுவன ஒழுகலாறுகள். பொதுவான விதிமுறைகள், உறுப்பினர்களிடையே சமத்துவம், விதிமுறைகளை அட்சரம் பிசகாமல் பின்பற்றுவது,....நாடார் உறவின் முறையை இன்னும் நன்றாகப் பார். காமராஜர் தான் காரணம் என்று சொல்லித்திரிந்ததாலேதான் பலருடைய கற்றல் நின்றுவிட்டது. அவர்களோடு நீயும் சேர்ந்துவிடாதே”. பொட்டில் அறைந்த மாதிரி பாலமேடு பலவற்றை எனக்குப் புரியவைத்தது.
உலக வங்கியும் சமூக மூலதனமும்.
சமூக மூலதனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்ற உலகவங்கி, தன்னுடைய திட்டங்களிலெல்லாம் மக்கள் அமைப்புகளைக் கட்டி அதை சமூக மூலதனமாக வளர்த்தெடுக்க முனைப்பு காட்டுகின்றது, திட்டச் செலவில் கணிசமான பங்கையும் அதற்கென்று ஒதுக்கீடு செய்கின்றது. சமூக மூலதனம் பற்றி விளக்க வந்த உலகவங்கி, “சமூக செயல்பாடுகளின் பண்பையும்(Quality-தரம்), அளவையும்(Quantity) தீர்மானிக்கும் நிறுவனங்கள்/அமைப்புகள், உறவுமுறைகள்/தொடர்புகள், மற்றும் விதிமுறைகளை சமூக மூலதனம் எனலாம்.. சமூக மூலதனத்தை ஒரு சமூகத்தில் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையை வைத்தல்ல, மாறாக அவைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்திருக்கும் சக்தியை வைத்தே மதிப்பிடவேண்டும்” என்கிறது. ('Social capital refers to the institutions, relationships, and norms that shape the quality and quantity of a society's social interactions... Social capital is not just the sum of the institutions which underpin a society – it is the glue that holds them together') மனிதர்கள் ஒருவரோடொருவரை, மற்றும் நிறுவனங்களோடு பிணைப்பதில் நம்பிக்கை (Trust) முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நம்பிக்கையை உருவாக்க செயல் மற்றும் வாக்குச் சுத்தம் தேவை. அப்படி உருவாகும் நம்பிக்கை பசை (Glue)/ பெவிகால் போன்றது. அதுதான் மனிதர்களைப் பிணைத்து வைக்கும் மந்திரம். சமூக உறவுகளில் பரஸ்பர நம்பிக்கை உருவாகும் போது, அது பயனுள்ள காரியங்களைச் செய்ய தூண்டுகோலாயிருக்கும். .
சமூக மூலதனத்திற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். பேஸ்புக், டிவிட்டார் கூட சமூக மூலதனம் தான். ஆனால் எனக்கென்னவோ சமூக மூலதானத்திற்கு நாமெல்லாம் சட்டென்று புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நல்ல முன்னுதாரணமாக நாடார் உறவின்முறை படுகின்றது. பாலமேட்டில் மட்டுமல்ல...இன்னும் பல ஊர்களில் செயல்பட்டுவரும் உறவின்முறைகளைச் சொல்லலாம். தரமான பள்ளிகள், சின்னச் சின்னதாக மருத்துவ மனைகள், ஆங்காங்கே நடைபெறும் ஜீவனோபாய மேம்பாட்டு முயற்சிகள் (பால் பண்ணைகள் போல – தங்குமிட வசதிகள்), அவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பயன்படும்படியான ஏற்பாடுகள். Bonding/ Bridging/ Linking Social Capital என்று வகைப்படுத்தப்படும் சமூக மூலதனத்தை உறவின்முறை உதாரணம் கொண்டே விளக்கலாம்.
சமூக மூலதனத்தை ஏன் உருவாக்க முடியவில்லை.
நாடார் உறவின் முறை செய்தது மாதிரி ஏன் பிற ஜாதியினரால் பரவலாகச் செய்யமுடியவில்லை?.
குலதெய்வ வழிபாடு இந்துக்களுக்கு முக்கியமான ஒன்று. கடவுளை நம்பாதவர்கள் கூட குலதெய்வ வழிபாட்டை விமர்சிக்க மாட்டார்கள். எனக்கும் ஒரு குலதெய்வம் உண்டு. சமாளிக்க முடியாத சங்கடங்கள் வரும்போது, “ஆத்தா நீதான் கைகொடுக்கவேண்டும்” என்று, பெரும் தெய்வங்களைக்கூட அல்ல, குலதெய்வத்தை நோக்கியே கைதொழும். வெட்டவெளியில், மேற்கூரை இல்லாமல், சூலாயுதத்தையும், ஒரு விளக்குக் கம்பத்தையும் குறியீடாகக் கொண்டதே எங்கள் குலதெய்வம். மகாசிவராத்திரியன்று ஆயிரக்கணக்கில் எங்கிருந்தெல்லாமோ வந்து நம்பிக்கையுடன் கூடுவார்கள். அமைப்பாளர்கள் என்று யாரும் ஆரம்பத்தில் இருந்ததில்லை. காலம் செல்லச்செல்ல, பக்தர்களுக்கு சில வசதிகள் செய்துகொடுக்க சில முக்கியஸ்தர்கள் முடிவெடுத்து சில வசதிகள் செய்தார்கள். பின் காலப்போக்கில் இந்தப்பணிகளில் ஈடுபட்ட சிலர் தங்களை நிர்வாகஸ்தர்களாக காட்டிக்கொண்டார்கள். ஒவ்வொரு வருடமும் சிவராத்திரிக்கு முன் நிர்வாகஸ்தர்கள் ஆண்டறிக்கை அனுப்புவார்கள். அதில் பல லட்சங்களில் வரவு செலவு நடைபெற்றதாக காட்டப்பட்டிருக்கும். இந்த நல்லபணிக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்து, ஒரு கணிசமான தொகையை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதாக வேண்டிக்கொண்டோம்.
எங்களின் காணிக்கையை காசோலையாகக் கொடுக்க நினைத்து, அந்த காசோலையை எப்படி எழுதுவது என்று கேட்டபோதுதான், கோவில் பெயரில் வங்கிக் கணக்கு கூட அந்த நிர்வாகிகள் தொடங்காதது தெரியவந்தது. அதில் ஒரு நிர்வாகஸ்தர், “என் பெயரிலே செக் கொடுத்திருங்க’ என்று சொன்னபோது, நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பல இலட்சங்களில் ஆண்டு தோறும் காணிக்கைகள் வரும் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு வங்கிக் கணக்கு இல்லாதது என்னவோ போலிருந்தது. கோவில் காரியங்களை முன்னின்று செய்யும் அவர்கள் மீது சந்தேகம் கொள்வது கூட தெய்வகுற்றமாகி விடுமென்பதால், நான் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. ஆனால் அவர்களின் செயல்பாடு, குலதெய்வத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, எனது உறவு முறைகளின் மீதான நம்பிக்கையை அசைத்துவிட்டது. அடிப்படை விதிமுறைகள் பின்பற்றப்படாதபோது, எந்தவொரு அமைப்பிலிருந்தும் நம்மை அன்னியப்படுத்திக் கொள்ளவே தோன்றும். ஆனால் நாம் விலகி இருப்பது நிர்வாகத்திற்கு நல்லதல்ல. நம்மை அவர்களை நோக்கி கவர்ந்திழுக்க, பல்வேறு உத்திகளைக் கையாள்வார்கள். கோவிலுக்கு வங்கிக் கணக்கு தொடங்காமல், கோவிலுக்கென்று இணையதளம் தொடங்கவிருப்பதாக மகாசிவராத்திரியன்று அவர்கள் ஒலிபெருக்கியில் மீண்டும், மீண்டும் சொன்னதுகூட அந்தமாதிரியான உத்திதான். தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் தன்முனைப்பான செயல்பாடுகளே அவர்களின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன. இதுமாதிரியான தலைமையை நான் கவனித்த அளவு நாடார் உறவின்முறையில் இல்லை.
சமூக மூலதனம் உருவாக கையாளப்படும் உத்திகள்.
சமூக அமைப்புக்களின்/நிறுவனங்களின் மீதான நம்பிக்கை நீர்த்துப் போகும் போது மக்கள் அதிலிருந்து விலகி நிற்கத் தொடங்குகின்றார்கள். மக்கள் பங்கெடுத்தால்தானே அமைப்புகள் உயிர்பெறும். மக்கள் பங்கெடுத்தால்தானே பணம், அதிகாரம், பேரம் பேசும் திறனை அதிகரிக்க முடியும். விலகி நிற்கும் சாதாரண மக்களை அமைப்புகள் நோக்கி இழுக்க, பயத்தையோ, ஜாதி/மத/மொழி வெறியையோ, வாக்குறுதிகளையோ உருவாக்க வேண்டியுள்ளது. இந்த கண்ணோட்டத்தில்தான் இப்போதைய பல அமைப்புகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பஞ்சாயத்து/ஊராட்சி கூட ஒரு சமூக மூலதனம்தான். அதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மக்கள் பங்கெடுக்காமல் அது உயிர் பெறாது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் மக்கள் பங்கேற்றால்தான் அது உயிர்பெறும். அந்த பங்கேற்பை பெறுவதற்காக என்னென்ன தகிடுதத்தங்கள் நடைபெறுகின்றன. வாக்குறுதிகளும், பணமும், ஆரோக்கியமற்ற முறையில் தூண்டப்படும் வேறு சில உணர்வுகளே மக்களை தேர்தலில் பங்கெடுக்க வைக்கின்றது.
மக்களின் நம்பிக்கையை வைத்து இன்றைய ஊராட்சிகள் செயல்படவில்லை. மாறாக அரசு நிதி ஒதுக்கீட்டில்தான் உயிர் வாழ்கின்றது. அரசாங்கத்தின் நிதியுதவி இருக்கும்போது மக்களாவது. மண்ணாங்கட்டியாவது. மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்காமல் தன்னாட்சியை அர்த்தமுள்ளதாக்குவது சற்று சிரமம் தான்.
நம்து தவறான அனுமானங்களே தன்னாட்சிக்கு தடைக்கல்.
மேலிருந்து ஆள்வோர்தான் தன்னாட்சிக்கு தடையாக இருக்கின்றார்கள் என்பது ஓரளவிற்குத்தான் உண்மை. மாறாக, நாம் ஒவ்வொருவரும்தான் நம்மையறியாமலே தன்னாட்சிக்குத் தடையாக இருக்கின்றோம். கீழ்மட்டத்திலிருப்பவர்கள் எல்லாம் மந்த புத்தியுடனும், சுயநலத்துடனும், பொறுப்பற்றவர்களாகவும் இருப்பார்கள் என்பதே நம்மில் பெரும்பாலோருடைய அனுமானம். இது ஆரம்பப்பள்ளி ஆசிரியரைப் பற்றிய நம்முடைய கணிப்பில் வெளிப்படுவதைப் பார்க்கலாம். அவர்கள் பொறுப்பற்றவர்கள். பள்ளிக்குத் தாமதமாக வருவார்கள். மேஜையில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு தூங்குவார்கள். இதற்குமேல் நம் எல்லோருக்கும் பரிச்சயமான கதையும் ஒன்றுண்டு. பள்ளிக்கு வந்த ஆய்வாளர் மாணவர்களின் கற்றலை மதிப்பீடு செய்ய “ஜனகனின் வில்லை யார் ஒடித்தது? என்று கேட்க, “ஜனகன் என்ற பெயரில் இந்த வகுப்பில், பள்ளியில் யாரும் படிக்கவில்லையென்றும், அப்படி யாரேனும் தவறுதலாக உடைத்திருந்தால் அதற்கான தண்டத் தொகையை மாணவர்களுக்குப் பதிலாக தானே கட்டிவிடுவதாக” அசட்டுத்தனமான பதில் சொல்லும் நபராகவே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் காலமெல்லாம் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றார். அதற்கு மாறாக உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கொஞ்சம் புத்திசாலி. அவரைவிட கல்லூரி ஆசிரியர் புத்திசாலி. அவரையும்விட பலகலைக்கழக ஆசிரியர் அதி புத்திசாலி போன்ற அனுமானங்களால் நம் மூளையை நிரப்பி வைத்திருக்கின்றோம். ஒவ்வொரு நிலையிலும் புத்திசாலித்தனமும், அசட்டுத்தனமும் நிறைந்திருந்தாலும், கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் அசட்டுத்தனமே பகிரங்கப்படுத்தப்படுகின்றது.
இதே அனுமானம்தான் ஆட்சியாளர்களைப் பற்றியும் நமக்கிருக்கின்றது. ஒரு ஊராட்சி தலைவர் மந்த புத்திக்காரராக, சுயநலக்காரராக, ஜாதி, மதவெறி கொண்டவராக, பெண்பித்தராக, உள்ளூர் வளங்களைப் பற்றி போதுமான அறிவில்லாதவராக சித்தரிக்கப்படுகின்றார். ஆனால் அதற்கு மாறாக ஒரு சட்டமன்ற உறுப்பினரை மனமுதிர்ச்சி கொண்டவராகவும், அதற்குமேல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எல்லாம் தெரிந்த ஞானவானாகவும் நாம் உருவகப்படுத்தி வைத்துள்ளோம். நம் நாட்டை, மாநிலத்தை பொறுப்பற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று யாரிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம். அதனால் ஆபத்தில்லை. ஆனால் இந்தியா கிராமங்களில் வாழ்வதால் அதை எப்படி பொறுப்பற்றவர்களிடம் ஒப்படைக்க முடியும்? அதனால்தான் கிராமங்களுக்குத் தன்னாட்சி கொடுக்க தயங்குகின்றோமோ?
நமது நாட்டில் பஞ்சாயத்து அமைப்பு அறிமுகமாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. கடந்த காலத்தில் பஞ்சாயத்து அமைப்புகளை வைத்து பல சாதனைகளைச் செய்துள்ளோம். செய்யத் தவறியுமிருக்கின்றோம். அவைகளின் சாதனைகள்தாம் அவைகளை மீண்டும் உயிர்பிக்க உதவியது. அவைகளின் தவறுகளே அவைகளை இடையில் சிறுதுகாலம் செயல்படவிடாமலும், இப்பொழுது அரசியல் சட்டப்படி அவை நித்தியமாகிவிட்டாலும், அவைகளுக்கு முழுஅதிகாரம் கிடைத்து விடாதபடி முட்டுக்கட்டையாகவும் நிற்கின்றது.
.தொடக்க காலத்தில், ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், வேளாண்மை போன்ற பல பணிகள் பஞ்சாயத்து அமைப்பின் நிர்வாகக் கட்டுபாட்டிற்குள்ளேதான் இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சில குறைபாடுகளால், அத்துறைகளை பஞ்சாயத்து அமைப்புகளிலிருந்து பிரித்தெடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நமது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி பிரதானிகள் பல தவறுகளை செய்து வந்தாலும், அவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதில்லை. மாறாக அதைச் சுட்டிக்காட்டினாலே அது உரிமைப் பிரச்சனையாகி விடுகின்றது. ஆனால் கிராம பஞ்சாயத்துக்கள், நகரசபைகள் தவறு செய்யக்கூடாது. தவறு செய்தால் அவர்களுடைய அதிகாரத்தைப் பறிக்கலாம். அவர்களைப் பதவிநீக்கம் செய்யலாம்.
நமது கிராமங்களுக்குத் தன்னாட்சியை அதன் உண்மையான அர்த்தத்தில் கிடைக்கச் செய்ய நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் முன்வரமாட்டார்கள். கிராம தன்னாட்சி சரியான முறையில் நடந்தால், ஆங்காங்கே மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மக்கள் தலைவர்கள் உருவாகிவிடுவார்கள். இந்த மாதிரியான தலைவர்கள், சில மதிப்பீடுகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருதேர்தலிலும் போட்டியிட விரும்புகின்றவர்கள் இவர்களிடம் வோட்டுபிச்சை கேட்கவேண்டிவரும். அதற்கு மாறாக மதிப்பீடுகளையும், விதிமுறைகளையும் நீர்த்துப் போகச் செய்தால், மக்களை அணுகுவது--பணத்தை வைத்தோ, பொய்யான வாக்குறிதிகளை வைத்தோ அணுகுவது எளிதாக இருக்கும். “முன்னத்தி ஏர் போற சாலை ஒட்டித்தான் பின்னத்தி ஏர் போகும்” என்பது பழமொழி. பாராளுமன்றம், சட்டமன்றம் போலவே நம்து ஊராட்சிகளையும் நாம் வார்த்தெடுத்துவிட்டோம். ஊராட்சிகள் அப்படி இருப்பதுதான் நம்முடைய அரசியல் வாதிகளுக்கு வசதியானது.
இதற்கு மாற்று வழி என்ன?
பஞ்சாயத்துக்கள் செயல்படாமிலிருந்த கடந்த கால்த்தில் ஒரு கிராமத்தில் சில முயற்சிகளை முன்னெடுத்தேன். நமது நாட்டை வழிநடத்த பாராளுமன்றம். மாநிலத்தை வழிநடத்த சட்டமன்றம் போன்று ஏன் கிராமங்களை நிர்வாகிக்க கிராமப் பாராளுமன்றம் கூடாது என்று நினைத்து கிராமப் பாராளுமன்றம் தொடங்க முனைந்தோம். சில பிரச்சனைகள் வந்தது. அதைக்கையாள சில முயற்சிகள்.....அந்த ஊர் மக்களுக்கு பிடிக்காத பாரம்பரியத் தலைமையை செயலற்றதாக்க ஒரு கோவிலைக் கட்டினோம். கோவிலின் குடமுழுக்கை ஒட்டி பிரச்சனை பூதாகரமாகி, சட்ட ஒழுங்குப் பிரச்சனையானது. இதில் தலையிட்டு சமரசம் செய்து வைத்த குன்றக்குடி அடிகளார், ”நீங்கள் செய்த முயற்சி பாராட்டுதலுக்குரியது. சமூக மாற்றத்திற்காக நீங்கள் காய்களை நகர்த்திய விதம் அறிவு பூர்வமானது. இருந்தாலும் ஆரம்பத்திலே ஒரு தவறைச் செய்துவிட்டீர்கள். நீங்கள் கிராமப் பாராளுமன்றம் என்ற வார்த்தையை உபயோகித்திருக்கக்கூடாது. பாராளுமன்றம், சட்டமன்றம் என்ற வார்த்தைகளை மக்கள் எப்போதும் அதிகாரத்தோடு தொடர்பு வைத்தே புரிந்து கொள்கின்றார்கள். கிராமப் பாராளுமன்றம் என்ற வார்த்தை அவர்களுக்கு போதை ஏற்றிவீட்டது போலும். அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட ஆரம்பிக்க உங்கள் நோக்கம் பாழாகிவிட்டது. பாராளுமன்றம் என்ற வார்த்தைக்குப் பதிலாக கிராம திட்டக்குழு என்ற வார்த்தையை உபயோகித்திருந்தால் அதிகாரப் போட்டி வந்திருக்காது. திட்டமிடுதல் என்ற வார்த்தை எதிர்காலத்தைப் பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்டியிருக்கும். அதிகாரத்தை கைப்பற்ற அல்ல மாறாக தங்களுக்கு எது தேவை என்று கற்பனை செய்ய தூண்டப்பட்டிருப்பார்கள்.” என்றார். அதுதான் உண்மை.
ஜனநாயகம்/அதிகாரப் பரவல் என்ற பெயரில், பாராளுமன்றத்திலிருந்தும், சட்டமன்றத்திலிருந்தும் அதிகார போதையை, பொறுப்பின்மையை, சுயநலப் போக்கை நமது ஊராட்சி அமைப்புகளுக்கும் பரவலாக்கிவிட்டோமோ என்று தற்போதைய நிலைமை நம்மை எண்ணவைக்கின்றது.
சமூக மாற்றங்களும் சமூக மூலதனமும்.
அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றதா என்று நாம் கண்காணிக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு திட்டமும் சமூக உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி நாம் கவலைகொள்வதில்லை. குடிமராமத்து முறையில் நிர்வகிக்கப்பட்டு வந்த நம் நீராதாரங்களை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைத்தோம். அதனால் நீராதாரம் எப்படி உயர்ந்தது என்பதை புள்ளிவிவரங்களுடன் நிரூபித்தோம். ஆனால் இந்த அதிகார மாற்றத்தால் சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்தை கணக்கிலெடுக்கத் தவறிவிட்டோம். சிறு, குறு விவசாயிகள் என்ற கருத்தாக்கமும் அதையொட்டி வழங்கப்பட்ட அரசு சலுகைகளும் எப்படி மாற்றங்களை ஏற்படுத்தின எனபதை ஒரு கிராமத்தில் அழகாக எடுத்துச் சொன்னார்கள். “முன்னெல்லாம் சொத்து பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட பத்திரங்களில் இன்னார் இன்னாரென்று குறிப்பிட்டு விவசாயிகளெல்லாம் சுகஜீவனம் என்றே எழுதுவார்கள். இப்பொழுதெல்லாம் சுகஜீவனத்தை தவிர்த்துவிட்டு இன்ன ஜாதி, விவசாயம் எனறு குறிப்பிடுகின்றார்கள். நிலச்சுவான்தார், நிலக்கிழார் என்ற பிரயோகம் கல்யாணப் பத்திரிகைகளோடு நின்றுவிட்டது. பரிவர்த்தனைப் பத்திரங்களில் அதை மறந்தும் குறிப்பிடுவதில்லை” என்றனர்.
அரசின் கொள்கை வரைவுகள், கட்டமைப்பு வசதிகள் மனித உறவுகளில், அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. “தொழு நிறைய மாடு நின்னுச்சி. வண்டிவண்டியா குப்பை அடிச்சோம்” என்று பெருமை பேசுபவர்கள், இயற்கை உரத்தின் அருமை பேசுபவர்கள், இன்றைக்கு ஏன் அதையெல்லாம் விட்டார்கள்?. ஏன்னா அன்னைக்கு எத்தனை மாடு வச்சிருந்தாலும் குடிகஞ்சிக்கு மாங்கு மாங்கென்று வேலை பார்க்க ஒரு ஏழைக்கூட்டம் இருந்திச்சி. இன்னைக்கு அது மாறிறிச்சி” பசுமைப் புரட்சி நிலத்தையும் நீரையும் பாழ்படுத்திவிட்டது என்று கவலைப்படுபவர்கள், பசுமைப்புரட்சி சமூக உறவுகளில் கொண்டுவந்த மாற்றங்களை மறந்துவிடுகின்றார்கள்”. நாம் கறித்துக்கொட்டும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உருவாக்கிய தாக்கத்தைவிட, பசுமைப் புரட்சி சமூக உறவுகளிலும், சமூக அமைப்புகளிலும் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
ஒரு டிராக்டர் ஒரு ஊரில் அறிமுகமானால், அங்கே பதினெட்டு விவசாயத் தொழிலாளர்கள் படிப்படியாக வேலை இழப்பார்கள் என்று ஆரம்பத்தில் என் பட்டப்படிப்பின் போது படித்தேன். பின் அலுவலகங்கள் கணனி மயமான காலகட்டத்தில் எத்துணையோ பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்று புள்ளிவிவரங்களைக்காட்டி வாதிட்டோம். இப்பொழுதுகூட அந்நியநேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டால் எத்தனையோ சிறு வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று புள்ளிவிவரங்களின் துணைகொண்டுதானே எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றோம். ஆனால் அதுவெல்லாம் சமூக உறவுகளில், சமூக அமைப்புகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதைப் பற்றி பிரக்ஞையும் நமக்கில்லை.
மின்சாரம், போக்குவரத்து, சொல்லப்போனால் நமக்குத் தெரிந்து அறிமுகமான வயது வந்தோர் கல்வி, பெண்கள் சுய உதவிக் குழுக்கள், தொலைக்காட்சி, மினிபஸ், ஷேர்ஆட்டோ, ரேஷன் அரிசி, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று....ஏன் டாட்டாவின் சின்னயானை கூட சமூக உறவுகளை, சமூக அமைப்புகளை புரட்டிப் போட்டிருக்கின்றது. அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் நீர்த்துப் போன சமூக மூலதனத்தை நம்மால் புனரமைக்க முடியாது. முன்னேற்றத்திற்கு துணை புரியும் புதிய சமூகமூலதனங்களை நம்மால் உருவாக்கமுடியாது.
செயல்படாமல் இருக்கின்ற பழைய சமூக மூலதனங்களை செயல்படவைக்கவும், புதிய சமூக மூலதனங்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றது. என்னென்ன மாதிரியெல்லாம் நாம் திட்டமிட்டால் இதைச் சிறப்பாகச் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

No comments: