11/12/19

ஒரு சொம்புத் தண்ணீர்.....ஒரு சிறு பொறி...போதும்

MISS CD மாணவர்களின் கள அனுபவங்களை ஆவணப்படுத்த, அம்மாணவர்களடங்கிய வாட்சப் குழுவில், ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட போது, 2008,2009,2010 ஆகிய ஆண்டுகளில், முதலாம் பருவ மாணவர்களின் ஒரு கள (Slum Visit) அனுபவ அறிக்கைகள் கணனிமயமாக்கப்பட்டு, அதுவே பின் இணையமயமாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதால், சம்பந்தப்பட்ட மாணவரும், அவருடைய களப்பணி மேற்பார்வையாளர் மட்டுமே அதுகாறும் பார்த்திருந்த அந்த அறிக்கைகளை (ஆவணங்களை), ஏறக்குறைய 35,000 பேர்கள் பார்த்தும், 650 பேர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகக் (Slideshare Analytics) குறித்து, ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருந்தேன். மாணவர்கள் அப்பொழுது சமர்ப்பித்திருந்த, இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்த ppt ஆவணங்களின் link ஐயும் பகிர்ந்திருந்தேன்.
அதைப் பார்த்த நமது நண்பர் தயாளன்,  பத்து வருடங்களுக்கு முன்னர் பதிவேற்றப்பட்ட அந்த ppt கள், அதிலிருக்கும் படங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து, அதை மதுரையின் காலப்பெட்டகமாக உணர்வதாகக் குறிப்பிட்டார். மேலும், அப்பொழுது powerpoint மென்பொருளில் இருந்த வசதிகளை (tools) விட, தற்போது அதிக வசதிகள் தரப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த ppt களுக்கு விளக்கம் (script) எழுதி, குரல் இணைத்து, காணொளியாக்கினால் அது இன்னும் பலரைச் சென்றடையுமென்றும், அதைத் தானே செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். ஒரு சின்ன பொறி. அவரை மேலும் சிந்திக்க வைத்து, செயல்படத் தூண்டியிருக்கிறது.

அதே போன்று, சென்ற வருடம் CD மாணவர்களின் கூடுகையின் போது, நண்பர் முத்துசாமி IPS அவர்கள், அவருடைய ஜூனியரான பெருமாளைப் பற்றி விசாரிக்க, பெருமாள் அகால மரணமடைந்த செய்தியைத் தெரிவித்தோம். பெருமாள் அனைவராலும் நினைவுகூற இயலாத, எளிமையான, படித்த காலத்தில் அடையாளமற்றவராக இருந்தவர்தான்.  ஆனால் எங்களில் சிலருக்கு, முத்துசாமி உட்பட, அவர் பிரியமானவர். கூடுகையின் போது நடந்த கலந்துரையாடல்களில், பணகுடி எனும் நண்பர், Prime Minister Jeevan Jothi Yojana, (PMJJY - 330 ரூபாய்), Prime Minister Suraksha Bima Yojana (PMSBJ 13 ரூபாய்) காப்பீடு திட்டங்களை CD மாணவர்கள் தங்கள் பணிகளில் எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்று ஒரு பொறியைத் தட்டிவிட்டார். ஒரு சொம்புத் தண்ணீரை ஊற்றினார். அது பெருமாள் போன்ற நண்பர்களை இந்தக் காப்பீடு திட்டத்தில் சேர்த்திருந்தால், அவரின் குடுபத்தாருக்கு 2 இலட்சம் ரூபாய் உதவி கிடைத்திருக்குமே என்று எண்ணத்தை முத்துசாமி மனதில் விதைத்தது. அதுவே நண்பர் முத்துசாமி அவர்களைத் தன் சரகத்தில் பணியாற்றிய ஏறக்குறைய 1200 காவலர்களுக்கு, அந்த இரண்டு காப்பீடுகளையும் உறுதி செய்ய வைத்து, தேசிய முன்னுதாரம் படைக்கக் காரணமாயிருந்தது. அதைத் தொடர்ந்து Freedom Fund என்ற சர்வதேச தொண்டுநிறுவனத்தில் பணியாற்றும் நண்பர் பாலமுருகன், அவர்கள் பணியாற்றும் 400 கிராமாங்களில், 50 ஆயிரம் பேர்களுக்கு காப்பீடு உறுதி செய்யக் குறிக்கோள் நிச்சயித்து, இதுவரை 20000 பேர்களுக்கு அந்தக் காப்பீடு வசதிகளை கொண்டுசேர்க்க உத்வேகம் அளித்திருக்கிறது. கூடுகையின் போது காப்பீடு திட்டங்களைப் பற்றி விதைக்கப்பட்ட பொறி, CD மாணவர்களைப் பற்றிக்கொண்டு, ஆயுஷ்மான் பாரத், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் என்று பலரையும் சிந்திக்க வைத்து செயல்படத் தூண்டி, பலருக்கும் சமூகப் பாதுகாப்பு கவசத்தைத் தந்தது மட்டுமல்ல, அது பல நண்பர்களின் தொடர் செயல்பாடாகவும்  மாறியிருக்கிறது.

Dr. Narayana Raja - Dayalan 
இன்று (12.11.2019) நமது நண்பர், முன்னாள் முதல்வர் நாராயண ராஜா அவர்கள், பேரா. கண்ணன் அவர்களின் மகனுக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றியும், கடந்த 125 நாட்களாக நினைவற்று இருப்பதைப் பற்றியும்  முதலில் CD குழுவில் பகிர்ந்து, கண்ணன் சாரின் மகன் நலமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று மாணவார்களை வேண்டிக்கொண்ட செய்தியைப் பார்த்து, அவரிடம் நான் தொடர்பு கொள்ள, எனக்கு முன்னே அவரைத் தொடர்பு கொண்ட தயாளன் அவர்கள், ஒரு நேரம் குறித்து நமது வாட்சப் குழுவில் உள்ள நண்பர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். நேரம் குறிப்பிட்டு தயாளனே அதை அறிவித்தால், அந்த நேரத்தில் எல்லோரும் பிரார்த்திக்கலாம் என்று குழு முடிவெடுத்தது. பிரார்த்தனை முடியும் மட்டும், பேரா. கண்ணன் அவர்களின் மகன்
நலமடைய வேண்டி பகிரும் செய்திகளைத் தவிர வேறு செய்திகளைப் பகிரவேண்டாம் என்று குழுவில் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். தயாளன் அதற்கான நேரத்தை பின்னர் அறிவித்தார். 
நண்பர் தயாளன் அவர்களிடமிருந்து உருவான ஒரு சிறு பொறி, மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்ந்த அனைத்துக்குழுக்களிலும் பகிரப்பட, பல நாடுகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான நமது மாணவர்களை, விக்னேஸ்வரன் நலமடைய பிரார்த்திக்க ஒன்றிணைத்திருக்கிறது. இந்த நல்ல வாய்ப்பை உருவாக்கிய நண்பர்கள் நாராயண ராஜா, தயாளன் அவர்களை தலை வணங்கி பாராட்டுகிறேன். இந்தக்கோணத்தில் சிந்திக்கும் மாணவர்களை CD குழு பெற்றிருப்பது குறித்து பெருமை. கூட்டுப் பிரார்த்தனைக்கு வழிவகுத்ததோடு அல்லாமல், Faith healing என்ற சிகிச்சை முறையை சமூகப்பணியாளர்கள் அங்கீகரித்து, அது  NASW நிறுவனம் வெளியிட்ட சமூகப்பணியாளர்களின் அதிகாரபூர்வமான The Social Work Dictionary  அகராதியில் இந்தக் கருத்து இணைக்கப்பட்டிருக்கிறது. அதை நான் மொழிபெயர்த்திருந்த சமூகப்பணி பொருளாகராதியின், android app குறுஞ்செயலியின் வாட்சப் பகிர்வுக்காக வடிவமைத்திருந்த சொல்லறிவோம் பொருளறிவோம் link ஐயும் தயாளன் பகிர்ந்திருந்தார்.
https://bit.ly/2QnQwAs

நீங்கள் தளும்பத் தயாராக நிறைந்துள்ளீர்கள். ஒரு சொம்புத் தண்ணீர் போதும் நீங்கள் சுற்றிலும் வழிந்தோடி, வறண்டு போயிருக்கும் எளிய மக்களின் வாழ்வு மலரும்படி அவர்களின் மனதை ஈரமாக்குவீர்கள் என்று CD மாணவர்களிடம் நான் சொல்வதுண்டு. கூடுகையின் போது ஊற்றப்பட்ட  ஒரு சொம்புத் தண்ணீர் முத்துசாமி, பாலமுருகன் போன்றோரை வழிந்தோட வைத்தது, இன்று பலரின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றியிருக்கிறது.
.
இன்று நண்பர் நாராயண ராஜா மற்றும் தயாளன் உருவாக்கிய சிறு பொறி நம் எல்லோரையும் விக்னேஸ்வரனுக்காக பிராத்தனை செய்ய வைத்திருக்கிறது. 

நம்முடைய நம்பிக்கையால் பேரா. கண்ணன் மகன் நினைவு திரும்பி எழட்டும். அவர் எழுந்து அவரிடமிருந்து இது மாதிரியான ஆயிரம் பொறிகள் உருவாகட்டும். 

No comments: