12/14/10

எனது இந்துத்வம்

சாப விமோசனம்
ஐநூறு அடிக்கு மேலான ஆழ்துளைக் கிணறுகள்
இவ்வளவு அவ்வளவு என்றில்லாமல்
எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் தேக்க
நிலத்தடித் தொட்டிகள்.
எந்த வ ட்சியையும், தண்ணீர் பஞ்சத்தையும் தாங்கும்
வீடுகளிருந்த அந்தத் தெருவில்.. ஒரு தெருக்குழாய்!

தெருக்குழாய்களுக்கு அழகே
அதைச் சுற்றிலும் பிளாஸ்டிக் குடங்களும்
நைலான் சேலைப் பெண்களும்தானே!
அதற்குக் கூட வழியில்லாமல்
அத்தெருக்குழாய் சபிக்கபட்டிருந்தது.
துருப்பிடித்து பல காலமாய் நின்று கொண்டிருந்தது
சாப விமோசனத்திற்கு காத்துக் கொண்டிருந்த அகலிகை மாதிரி..

இன்று காலை வாக்கிங் சென்றபோது
அத்தெருக்குழாயைச் சுற்றிலும்
தமிழல்லாத வேறு பாஷையில் பேசிக்கொண்டு
கொஞ்சம் தள்ளியிருந்த காலி பிளாட்டில்
ரோடு வேலைக்காக வந்து டெண்டடித்துத் தங்கியிருந்த
பீகாரியப் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்...

ஸ்ரீ ராமனால் மட்டுமல்ல
சீதைகளாலும் சில நேரங்களில் சாப விமோசனம் தரமுடியும்

நிலையாமை
அது ஒரு நாலு ரோடு கூடுமிடம்..
6 x 10 என்ற விசாலமான பிளக்சில்
உள்ளூர், தமிழக, தேசிய தலைவர்கள்
மாலையுடன்....
மகுடம் தரித்து உட்கார்ந்திருப்பார்கள்....
கவர்ச்சியாகச் சிரிப்பார்கள்....
கம்பீரமாக நடப்பார்கள்....

பருவத்திற்கு ஏற்றமாதிரி
படங்களும் மாறிவிடும்.

மாறினால்தான் என்ன?

எதைக் கொண்டுவந்தார்கள்
அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட
அவர்கள் அங்கு இல்லாததால்
எதை இழந்துவிட்டது
அந்த நாலு ரோடு சந்திப்பு!

பாண்டிச்சேரியிலிருந்து மதுரை
முன்னொருநாள்
ஆரோவில்லுக்குச் சென்றிருந்தேன்
என் நண்பரின் நண்பர்களாக
பல காலம்
ஆசிரமத்திலும்
ஆரோவில்லிலும் வாழ்ந்துகொண்டிருக்கும்
பலருடன் பக்கத்திலமர்ந்து பேசினேன்.
அரவிந்தரையும் அன்னையையும்
அவர்களிடத்தில் தேடினேன்....

பிறிதொருநாள்
கண் சிகிச்சைக்காக உறவினறொருவரை
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றேன்
அப்பொழுது தான் தெரிந்தது
நோயாளியாகவும்,
நோய் தீர்ப்பவராகவும்
அரவிந்தரும், அன்னையுமே நடமாடிக் கொண்டிருந்தனர்.
அரவிந்தரும், அன்னையும்
பாண்டிச்சேரியிலிருந்து மதுரை வந்து
ஆண்டுகள் பல ஆகிவிட்டனவாம்.

12/12/10

கோவிந்தநகரம் - ஒரு இந்திய கிராமத்தின் கதை

கதவு கூடப் போடமுடியாமல் வட்டக்குடிசையில் கோவிந்தப்பா தொடங்கிய வாழ்க்கை, அவ்வட்டாரத்திற்கென்றிருந்த சகல இடர்ப்பாடுகளையும் சாமாளித்து, வாய்ப்புக்களை வசப்படுத்தி, எப்படி கோவிந்தநகரமாக, ஒரு மேம்பட்ட நாகரீகமாக வளர்ந்தது என்பதைச் சொல்லும் ஒரு வரலாற்று ஆவணமே- கோவிந்தநகரம் – ஒரு இந்திய கிராமத்தின் கதை.

இந்தியாவின் அறிவுத்தளம் என்பது, மேற்கோள்களாகச் சுருங்கிவிட்டது. நாம் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆய்வுகளைச் செய்யும்போது, மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை. பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா 

வரலாறும் அது தரும் படிப்பினைகளும் நமக்கு வேண்டும்:

வரலாறு என்பது நடந்து முடிந்த கடந்த காலச் சம்பவங்களின் தொகுப்புதானென்றாலும், சம்பவங்கள் தொகுக்கப்பட்டால்தான், அந்தச் சம்பவங்கள் உருவாக்கிய தாக்கத்தை, அதிர்வலைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு மறுவினையாற்றத திட்டமிடமுடியும். அச்சம்பவங்கள் தொகுக்கபடாத பட்சத்தில், கால இடைவெளிகளுக்குள் (past,present,future) உள்ள உயிர்த் தொடர்பு (organic & dynamic continuity) அறுந்துபடும். இந்த உயிர்த் தொடர்ச்சி, அனுபவத் தொடர்ச்சியென்பது பழமையைப் பாதுகாப்பதல்ல. பழமையென்பது தொடர்ச்சியற்றுப் போன, நூலறுந்த நிலை. அனுபவத் தொடர்ச்சியென்பது புதுமைக்கு எதிரானதல்ல. அது புதுமையையை நடைமுறைக்கேற்றவாறு மாற்றியமைக்கும் நுண்ணறிவு. நிலைத்த முன்னேற்றம் (sustainable development) வலியுறுத்தும் தலைமுறைகளுக்கு இடையேயான ஒப்புரவுப் பண்பை (inter generational equity) அடையவேண்டுமென்றால், அது கடந்த தலைமுறையின் வாழ்க்கையை, வழிமுறைகளைத் தொகுப்பதன் மூலமாகவும், ஒப்பீடு செய்யவதன் மூலமாகவுமே சாத்தியப்படும்.
வரலாற்றுப் போக்குகளை முன்னேற்ற முயற்சிகளுக்கு ஏதுவாக உபயோகப்படுத்த வேண்டுமென்றால், அதைப் பெருந்தலைவர்களின் வாழ்க்கையோடும், தலைநகரச் சம்பவங்களோடு மட்டுமல்ல, சாதாரண மக்களின் வாழ்க்கையோடும், சிறு நகரங்கள் மற்றும் கிராமச் சம்பவங்களோடும் சம்பந்தப்படுத்த வேண்டும். மேலிருந்து கீழாகவும், (Top Down தலைவர்கள், தலைநகர்ங்களிலிருந்து சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகள் வரை) கீழிருந்து மேலாகவும் (Bottom up சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து தலைநகரங்கள் வரை) வரலாறு தொகுக்கப் படவேண்டும். இம் முயற்சிகள் பற்றி (Local History, Micro History, History from Below, Decentralized History, Participatory History) பேசப்பட்டாலும், அது இன்னும் பரவலான செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலைநாடுகளில் இம்மாதிரியான முயற்சிகள் நிறுவனமயமாக்கப்பட்டது மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் அதனுடைய பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லுமுகமாக அருங்காட்சியகங்கள் (Museum) கூட வைத்திருக்கின்றார்கள்.
மக்கள் பங்கேற்பு மூலம் கிராம அளவிலான குறுந்திட்டங்கள் (Micro plans) தயாரிக்கும் முயற்சிகளை அரசும், தொண்டுநிறுவனங்களும் பிரபலப்படுத்தியது மாதிரி, நிறுவனப்படுத்தியது (Popularizing & Institutionalizing) மாதிரி, குறுவரலாறுகள் (Micro history) எழுதும் முயற்சிகளை பிரபலப்படுத்தவில்லை. பங்கேற்பு முறைப் பயிற்சிகளில் கிராம அளவிலான வரலாற்றுப் பிரக்ஞயை வெளிக்கொணர்ந்து, அதனடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாலும், இறுதி வடிவம் பெற்ற திட்டவரைவுகள்தான் ஆவணப்படுத்தப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டதேயொழிய, அந்தத் திட்டங்களின் பின்னணியிலிருந்த வரலாற்றுணர்வு, வரலாற்றுத்தேவை ஆவணப்படுத்தபடவில்லை.
கடந்தகாலச் சம்பவங்கள், அச்சம்பவங்கள் உருவாக்கிய அதிர்வலைகள், அதற்கு கிராம அளவில் உருவான எதிர்வினையாக்கம் (incidents, impacts and reaction) பற்றி கிராம அளவில் மக்கள் ஆர்வமாகப் பகிர்ந்து கொண்டாலும், சாமான்ய மக்களின் வரலாற்றுணர்வை, பிரக்ஞயை பதிவுசெய்ய பொறுப்புள்ள தொண்டுநிறுவனங்கள் கூடத் தவறிவிட்டது வருத்ததிற்குரியது. ஏனெனில் தன்னார்வமே இதன் இயக்கு சக்தியாதலால், இதைப் பலகலைக் கழகங்களோ அரசோ செய்ய முன்வராது.. கிராம மக்களின் வரலாற்றுப் பிரக்ஞை, சரியான முறையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், முன்னேற்றப் பணிகளில் எதிர்கொண்ட சவால்கள் பலவற்றை நாம் சுலபமாகக் கையாண்டிருப்போம்.
வரலாற்றுப் படிப்பினைகள்:
மின்சாரம் வந்ததால் ஏற்பட்ட ஓய்வால் ஆண்களிடையே உருவான அரசியல் ஈடுபாடு, பேருந்து வசதிகள் பெருகியதால் (ஆசிர்யர்களால் மட்டுமல்ல) உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட கல்வித்தர மேம்பாடு, மாறுதலடைந்த பிழைப்பாதார வாய்ப்புகள், புதிதாகப் பாலம் கட்டப்பட்டதால் உயர்ந்த நிலமதிப்பு மற்றும் சமூகப்பிணக்குகள், பெருநகரத்தோடு சாலையால் இணைக்கப்பட்டிருந்தாலும், ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரைச்சாலை வந்தபின் எழுந்து நின்ற மீனவக் கிராமம், சாலை விபத்தில் இறந்த கிராமத்து முக்கியஸ்தரால் பல்லாண்டுகள் ஸ்தம்பித்து நின்ற கிராமம், பள்ளி மாணவனாயிருந்த போது ஊருக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியதைப் பார்த்து, நீராதரத்தைப் பெருக்க வழிமுறைதெரிந்து ஊரில் முதன்முதலில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முனைந்ததால் நிலத்தடி நீரில்லாத கிராமத்தில் இருபதாண்டு காலம் வேளாண்மையை நீட்டித்த அதிசயம், ஊரில் கோயில் கட்டியதால் ஊரே பிளவுபட்டது, பின் ஒன்றுபட்டது, தலித்துகளை ஏற்றுக்கொண்டதால் சுகப்பட்ட கிராமங்கள், அவர்களோடு மல்லுக்கட்டி இருதரப்பும் இழந்ததும், பெற்றதும், காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் (Love & intercaste marriages) ஊர்தோரும் உருவாக்கிய விதவிதமான அதிர்வலைகள், திருமணபந்தத்திற்கு அப்பாற்பட்ட உறவுமுறைகள் (extra marital relationship) ஜாதிகளுக்குள்ளே உருவாக்கிய ஒப்புரவு, ஆரம்பப் பள்ளி நடுநிலைப் பள்ளியானால் பட்டதாரி ஆசிரியர்தான் தலைமையாசிரியராக முடியுமென்பதால் அவ்வூரின் ஆரம்பக் கல்வியை சீர்குலைத்த செகண்டரி கிரேடு கிராம ஆசிரியர் என்று நூற்றுக்கணக்கான சம்பவங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும், அதையொட்டி செயல்திட்டங்கள் வகுத்து ஜெயித்த தொண்டு நிறுவன முயற்சிகளோடு நானே நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றேன். இது ஒருபுறம். இன்னொரு புறமோ, தேசியத் திட்டங்களையும், மாநிலத் திட்டங்களையும் ஒவ்வொரு கிராமமும் உள்வாங்கிப் பிரதிபலிக்க முயன்றபோது ஏற்பட்ட சம்பவங்கள், அச்சம்பவங்கள் கிராம அளவில் உருவாக்கிய தாக்கங்கள், அந்தத் தாக்கங்களை குழு (ஜாதி) அளவில் உள்வாங்கிய தனித்தன்மை - கிராம வரலாறு என்பது தேசிய வரலாற்றிற்கு இணையான உள்விரிவாக்கமும் (complexity), சுவாரசியமும், படிப்பினையும் கொண்டதுதான். இப்படிப்பினைகளை நாம் புறக்கணித்ததால்தான், அனுபவத் தொடர்ச்சி அறுந்துபோனதால்தான், நம்மால் ஆண்டுதோறும் வரும் வறட்சி, வெள்ளத்தைச சரியாகக் கையாளத் தெரியாமலும், வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற திட்டங்களால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகின்றது என்றெல்லாம் கருத ஆரம்பித்துவிட்டோம்.
அரசியல் நிர்ணயச் சட்டத்தைத் திருத்தி, (Constitutional Amendment) அதிகாரத்தைப் பரவலாக்கி (Decentralized Democracy), வளர்ச்சிப் பணிகளுக்கென்று கோடிகோடியாக முதலீடு செய்தும், நம்மால் ஒரு கிராமத்திற்கான குறைந்தபட்ச பண்போவியக் குறிப்புகளைக் (Profile &Data base) கூட உருப்படியாக குறித்து வைக்க முடியவில்லை.
பங்கேற்பு முறைகளில் (Participatory Methods-PRA) எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடுமுண்டு என்று என் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியும். பங்கேற்பு முறைகளில் Timeline & Trend change என்ற முறையை எங்கு சென்றாலும் பரீட்சித்துப் பார்ப்போம். காரணம் அதன் மூலம் வரலாற்றுணர்வு கிடைப்பது மட்டுமல்ல, அது மற்ற முறைகளின் மூலமாக சேகரிக்கப்பட்ட தகவல்களை சோதித்தறிய ஒரு அற்புதமான Triangulation Tool கூட.
கோவிந்தநகரம் – ஒரு இந்தியக் கிராமத்தின் கதை:
கிராம வரலாறு பற்றிய என்னுடைய ஏக்கத்தைப் புரிந்துதானென்னவோ, என்னுடன் கல்லூரியில் படித்த, என்மீது சகோதர வாஞ்சை கொண்ட, எங்கள் ஊருக்கு அருகாமையிலிருக்கும் அம்பாசமுத்திரத்திலிருந்து நண்பர் பெருமாள்சாமி, சமீபத்தில், தனக்கு தற்செயலாகக் கிடைத்த “கோவிந்தநகரம் – ஒரு இந்தியக் கிராமத்தின் கதை” என்ற புத்தகத்தை, எனக்கு மிகவும் பிடிக்குமென்று, அனுப்பியிருந்தார். அப் புத்தகம் எனக்குப் பிடித்தது மட்டுமல்ல என் சிந்தனையையும் பல்வேறு கோணங்களில் தூண்டிவிட்டது.
அப்புத்தகத்தைப் படித்த பொழுது எனக்கென்னவோ மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திரா படுகொலை செய்யப்படுவதற்கு முன்னால், ஹிந்து நாளிதழில் குன்றக்குடியில் அடிகளார் செய்துவந்த கிராம முன்னேற்றப் பணிகளைப் படித்துவிட்டு “This is what I wanted for all my villages” (இது மாதிரி இந்தியக் கிராமங்கள் அனைத்திலும் நடைபெற விரும்புகின்றேன்) என்று குறிப்பெழுதியது நினைவுக்கு வர, “கோவிந்தநகரம் – ஒரு இந்திய கிராமத்தின் கதை” என்ற புத்தகத்தை படித்தபோது நானும் இந்திரா காந்தியின் மனநிலையில்தானிருந்தேன் – இது மாதிரி ஒவ்வொரு இந்திய கிராமத்தின் கதையும் எழுதப்படவேண்டுமென்று.
கோவிந்தநகரம் தேனிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம். தேனியிலிருந்து எங்கள் ஊரான கோபாலபுரத்தை (கோனாம்பட்டியை)த் தாண்டி கூப்பிடு தூரத்தில் உள்ள ஊர்தானென்றாலும் இதுவரை நான் அந்த ஊருக்குச் செல்ல வாய்பேற்படவில்லை. இருப்பினும் கல்லூரியில் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த, ஆனால் கோவிந்தநகரத்தில் உறவினர்களைக் கொண்டிருந்த நண்பர் (பெரியாழ்வார் வெங்கட்ராமானுஜம் என்ற பெரி வெங்கட்) ஒருவர் கிடைத்தார். இன்று அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட பெரிவெங்கட்டின் தாய்மாமா, கோவில்பட்டியருகிலுள்ள நாலாட்டின்புதுரிலிருந்து கோவிந்தநகரத்தில் செட்டிலாகியிருந்தார். கோவிந்தநகரம் என் பக்கத்து ஊர் என்ற பாசத்தைவிட, என் பாசத்துக்குரிய நண்பனின் உறவினர்கள் வாழும் ஊர் என்ற அளவுடன் என் பரிச்சயம் நின்றுபோய்விட்டது.
எழுத்தா? தவமா?
அவ்வூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் (திரு. ஆ. கோவிந்தராஜன்) மற்றும் கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்த அதிகாரி (திரு. கி. வெங்கிட்டராமன்) இணைந்து கோவிந்தநகரத்தைப் பற்றி அருமையான வரலாற்று ஆவணம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றார்கள். அப்புத்தகத்தில் எழுதப்பட்ட விசயங்கள், புகைப்படங்கள், ஆதாரங்களையெல்லாம் வைத்துப் பார்த்தால், எழுதியிருக்கின்றார்கள் என்று சொல்வது அவர்களின் முயற்சியை உதாசீனப்படுத்துவது மாதிரி. இருவரும் சேர்ந்து ஊருக்காக தவமியற்றியிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். எழுத்துத் திறமை, பணத்தை வைத்துக்கொண்டு இதையெல்லாம் செய்யமுடியுமென்றால் இந்தநாட்டில் இது மாதிரி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும். மண்மீது கொண்ட பேரபிமானம், இனி வரப்போகின்ற தலைமுறைக்கு சிலவற்றைச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டுமென்ற ஆர்வம், பொறுப்பு இதுதான் இதுமாதிரியான புத்தகங்களை உருவாக்க உணர்வு ரீதியாக அவர்களை உந்தித் தள்ளியிருக்கும். அவர்களுக்கு நன்றி.
கோவிந்தப்பா உருவாக்கிய குடியிருப்பு:
பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு, அவர்கள் விரும்பிய சொத்தை இனாமாக வழங்கும் (கவுல் வாங்குதல்) அன்றைய வழக்கப்படி வாங்கிக்கொண்ட 25 ஏக்கர் நிலத்தில், கோவிந்தப்பா போட்ட வட்டக்குடிசைதான் கோவிந்தநகரம் என்ற கிராமமாக, நாகரீகமாக வளர்ந்துள்ளது. “கேட்டேயாள அண்ணாச்சி! பத்து வீட்டுக்காரணுக இருக்கிற ஊருக்கு நகரமென்னு பேரு வச்சிக்கிட்டாணுக. ஆயிரம் குடும்பங்க வாழ்ர நம்ம ஊரைப் (விருது) பட்டியங்குறோம்! என்று நூறு வருடங்களுக்கு முன்னமயே ஊர் பேரை வைத்து மற்றவர்களைத் திகைக்க வைத்த ஊர்.
ஏறக்குறைய 250 பக்கங்களுக்கு நீளும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு தகவலும், பல இடங்களிலிருந்து குடிபெயர்ந்த குடும்பங்கள் எப்படி தங்களை, ஒருசமூகமாக, ஒரு நாகரீகமாக வார்த்தெடுத்துக்கொண்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. எந்தெந்த ஊர்களிலிருந்தெல்லாம் வந்து குடியேறினார்கள் என்று தகவல்கள் இருந்தாலும், எந்தெந்தக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்திருப்பார்கள் என்ற காரணத்தை அறிய இப்புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. நம் எல்லோருக்கும் ஒரு பூர்வீகம் இருந்திருக்கின்றது. அந்த பூர்வீகத்திலிருந்து நாம் ஏன் பெயர்த்தெடுக்கபட்டோம் என்பதை அறிய நாம் ஆர்வம் காட்டியதில்லை. நம் ஒவ்வொரு குடும்பத்தின் இடப்பெயர்வையும், மறுகுடியேற்றத்தையும் புரிந்து கொண்டிருந்தால் அது நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். இப் புத்தகம் அந்த ஆர்வத்தைத் தூண்டுகின்றது.
1885 ஆம் ஆண்டு கோவிந்தப்பாவால் உருவாக்கப்பட்ட குடியிருப்பு, ஆரம்பத்தில் “பட்டாளத்து நாயக்கன்பட்டி” என்று அழைக்கப்பட்டு, பின்னர் கோவிந்தநகரமானதலிருந்து, முதல் குடிநீர்க் கிணறு எப்பொழுது வெட்டப்பட்டது? யார் வீட்டிற்கு முதலில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது? யார் கிணற்றில் முதலில் மோட்டார் பொருத்தப்பட்டது? உள்ளூர்ப் பள்ளி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது? ஊரின் முதல் பெண் ஆசிரியை யார்? முதல் பட்டதாரி யார்? குழாய் பதித்து பாசன வசதி செய்தவர் யார்? முதலில் வெளிநாடு சென்றவர் யார்? சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர், அதன் பிறகு விவசாயப் போராட்டத்தில் சிறை சென்றவர் யார்? யார்? கதையெழுதியவர்கள், கவிதையெழுதியவர்கள் என்று பல தகவல்களைக் கொடுத்து அவர்களின் புகைப்படங்களையும் இணைத்திருக்கின்றார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்ட விண்வெளி விஞ்ஞானியைப் பற்றிச் சொல்லும்போது கூட “பத்மபூசன் விருது பெற்ற பத்மாவதி கணவர்” என்று குறிப்பிட்டு, தங்கள் ஊரோடு சம்பந்தப்பட்ட அனைவரையும், அனைத்தையும் எழுத்தில் கொண்டாடி மரியாதை செய்திருக்கின்றார்கள்.
அப்புத்தகத்தில் தலைப்பு வாரியாகத் தொகுக்கப்பட்ட பல சம்பவங்களைப் படிப்பவர்களுக்கு கிராம வாழ்வைப் பற்றிய தெளிவு கிடைக்கும். இப்புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும், "இது நம் ஊரில் எப்படியிருந்தது, இப்பொழுது எப்படியிருக்கின்றது என்று ஒப்புமைப்படுத்திப் புரிந்துகொள்ளத் தூண்டும். இந்தத் தூண்டுதலுணர்வுதான் இப்புத்தகத்தின் மிகப் பெரிய வெற்றி.
வீடுகளின் பரிணாமம்
ஊர் உருவாகிய 150 கால வரலாற்றில், இப்பொழுதைய (1991) கணக்குப்படி 792 வீடுகள் இருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களில் தெரியும் வீடுகளைப் பார்த்தால் நவீனமாகக் கட்டப்பட்ட மாடிவீடுகளாகத் தெரிகின்றது.
கதவில்லாமல் கட்டப்பட்ட மண்ணாலான வட்டக்குடிசைகள் தொடங்கி, செவ்வக வடிவில் கட்டப்பட்ட மண்வீடுகள், கூரைவேய பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கால்நடைகளுக்கென்று வீட்டிற்குள்ளும், வீட்டையொட்டியும் கட்டப்பட்ட தொழுவம், விவசாயக் கருவிகள் வைத்துக்கொள்ள, தானியங்களைச் சேமிக்க, சாமான்கள் வைத்துக்கொள்ள தனித்தனி இடங்கள், சமையலறையின் அமைப்பு, காலந்தோறும் மாறிவந்த கட்டுமானப் பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றது. வீட்டுக் கூரைகளும், வீட்டடிக் கிணறுகளும் எப்படி சமூக அடையாளங்களாக பரிணாமம் அடைந்தது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு காலகட்டம் வரைக்கும் உள்ளூரில் கிடைத்த கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளை, சிறிது சிறிதாக வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களை வைத்துக் கட்டும்படியான தேவை ஏன் ஏற்பட்டது? எப்பொழுது, எதற்காக ஏற்பட்டது? போன்ற கேள்விகளுக்கான விடையைத் தேட இப்புத்தகம் ஆர்வமுள்ளவர்களைத் தூண்டலாம். வெளியிடப் பொருட்களின் (External inputs) ஆதிக்கம் வேளாண்மையில் இருப்பதைப் பற்றி கடுமையான விமர்சனங்களும், பரவலான விழிப்புணர்வும் உருவாகி, இயற்கை வழி வேளாண்மையைப் (Organic Agriculture) பற்றி பேசி வருகின்றோம். கட்டுமானத் துறையில் நமது கிராமங்கள் சுயதேவைப் பூர்த்தி இழந்தது பற்றி யாரும் பேசுவதில்லை. வாழ்க்கை என்பது ஒன்றுதான். ஒன்றில் முழுக்க, முழுக்க சார்புத்தன்மையும் இன்னொன்றில் இயற்கை வழி சுயதேவைப் பூர்த்தியென்பதும் சிந்திக்க வேண்டிய செய்திகள். இப்புத்தகம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.
கிராம நிதியிலிருந்து கிராமத் தொழிலாளர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள், வசூலிக்கப்பட்ட வாடகை, காலனி வீடுகள் என்று சொல்லப்படும் விவரங்களிலிருந்து ஒரு கிராமம் அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டது தெரியவருகின்றது.
கிராம நிர்வாகம்.
ஒவ்வொரு கிராமமும் தனித்தன்மை கொண்ட சமூகக் கலாசார, பொருளாதார, அரசியல் பின்னனி கொண்டது. அரசுத் துறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்கள் என்று இருந்தாலும், இவையெல்லாம் Monolithic organization என்று சொல்லப்படுகின்ற வேறுபாடின்றி எங்கும் ஒரே சீராக இயங்கக்கூடிய வரையறைக்குட்ட்பட்ட நிறுவனங்கள். இந்த அமைப்புகளால் கிராமத்தின் பிரத்யேகத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, இந்த அமைப்புகள் திறனுடன் செயல்பட சமூக மூலதனம் (Social Capital) என்று சொல்லப்படுகின்ற தன்னார்வ சமூக அமைப்புகளோ (Civil Society organization) அல்லது பரம்பரியத் தலைவர்களோ (Leaders with ascribed status) அல்லது வலுவுடைய/ செல்வாக்கு மிக்க தலைவர்களோ (Charismatic Leaders) தேவை. இந்த அமைப்புகள்தாம் ஒருகிராமத்தை மற்றொரு கிராமத்திலிருந்து மாறுபடுத்திக் காட்டுபவை.
பாரம்பரிய நாட்டாண்மைப் பொறுப்புடன், நாட்டாண்மையே ரெவின்யூ நாட்டாண்மையாக இருந்து ஊரை நிர்வகித்த நிலை மாறி, பின் நாட்டாண்மை, டெவைதாரர்கள், வாசினியார் போன்ற பாரம்பரிய அமைப்பு சிறிதுகாலம் செயல்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, தனிமனிதரை மையப்படுத்தியிருந்த பொறுப்புக்கள் குழுவிடம் வந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக கிராம நிர்வாகம் ஜனநாயகப் படுத்தப்பட்டு வந்துள்ளது தெரியவருகின்றது.
கிராமத்திற்கான நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு, 1946 ஆம் வருடத்திலிருந்து யார் யார் கிராமச் செயலர்களாக இருந்தார்கள், கிராம நிர்வாகக் குழுவின் மூலமாக செய்யப்பட்ட காரியங்கள் என்னென்ன போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆரமபக் கல்விக்கு அரசு நிதியுதவி இல்லாத காலத்திலே பள்ளி உருவாகவும், ஆசிரியர்களுக்கு மாதம் 12 ரூபாயிலிருந்து 17 ரூபாய் வரை சம்பளம் கொடுத்ததையும், மேல்நிலைப் பள்ளி துவங்க முயற்சியும் வைப்புத் தொகையும் செலுத்தியதையும், வாசகசாலை கட்ட இடம் நன்கொடை வாங்கியதையும் ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள். முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்த ஒரு சமூகத்தில், யாரோ ஒரு தனவந்தர் கருணையடிப்படையில் கல்வி தந்தார் என்றில்லாமல், ஒரு சமூகமே தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைத் தருவதை தன் கடமையாக எடுத்துச் செயல்பட்டது தெரியவருகின்றது. It takes a whole village to raise a child என்ற பழமொழியை ஆயிரம் தடவை படித்திருக்கின்றேன். அதனுடைய உண்மையான அர்த்தம் இப் புத்தகத்தைப் படிக்கும் போதுதான் புரிந்தது. நமது கிராமப்பள்ளிகளின் வரலாற்றை, பாரம்பரியத்தை அறிந்துகொள்ள நமது வரலாற்றாசிரியர்கள் போதுமான அக்கறையையோ மாதிரிகளையோ உருவாக்கத் தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கடந்த காலத்தில் ஒவ்வொரு கிராமமும், தன்னுடைய குழந்தைகளுக்கு கல்விதர எடுத்துக்கொண்ட முயற்சிகளை நாம் ஆவணப்படுத்த தவறிவிட்டோம். வணிகத்தாலோ, வேறு விதமான பொருளீட்டல் வாய்ப்புகளற்ற வேளாண்மை சார்ந்த கோவிந்தநகரம் மாதிரியான கிராமங்களில், கல்வியில் முதலீடு செய்வதென்பது அபூர்வம். இம்மாதிரியான சமூக முயற்சிகளை சரிவர ஆவணப்படுத்தத் தவறியதால்தான் இன்று ஆரம்பக் கல்வியின் தரம் மேம்படுத்துவதென்பது சிரமமான காரியமாக இருக்கின்றது.
கிராம நிர்வாகக் குழு என்ற விதையிலிருந்து, பள்ளி நிர்வாகக் குழு, பழைய மாணவர் சங்கம், நேதாஜி வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் உருவாகி, ஒவ்வொரு அமைப்பும் ஏதாவது ஒருவகையில் முன்னேற்றப் பணிகளை அடுத்த கட்டடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்கள்.
கிராம நிர்வாகம் பற்றிய தகவல்களில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஒன்றியப் பெருந்தலைவர்களாக இருந்திருந்ததைப் பெருமையுடன் குறிப்பிட்டாலும், அவர்கள் தலைமைப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் கிராமச் செயல்பாடுகள் அவர்களைச் சார்ந்ததாக இருந்த மாதிரி குறிப்பிடப்படவில்லை.
பாரம்பரியத் தலைமையாலும் (Leaders with ascribed status) வலிவுடைய/ செல்வாக்கு மிக்க (Charismatic Leaders) தலைமையாலும் கிராமங்கள் பயன்பெற்றதை மறுக்கமுடியாதுதான். இருப்பினும் ஜனநாயகப் பண்புகள் கொண்ட கிராம அமைப்புகளே சிறந்தது; நிலைத்திருக்கக் கூடியது. அதுமாதிரியான அமைப்புகள் கோவிந்தநகரத்தில் இருப்பது புத்தகத்திலிருந்து தெரிய வருகின்றது. இந்த மாதிரியான ஆவணங்களைப் படிக்கும்போது, கிராமப் பின்னணியிலிருந்து வரும் என்னைப் போன்ற வாசகர்களை நமது கிராமத்தில் கிராம நிர்வாகம் எப்படியிருந்தது, இப்பொழுது எப்படியிருக்கின்றது என்று ஒப்புமைப்படுத்தத் தூண்டுகின்றது
வேளாண்மை
புத்தகத்தில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, கோவிந்தநகரம் மற்றும் அந்த வட்டார விவசாயத்தைப் பற்றிய காலந்தோறும் நடைமுறையிலிருந்த கோட்பாடுகளைப் (Policy Issues & Practices) பற்றித் தெரிந்துகொள்ள முடிகின்றது. கோவிந்தநகரமும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் கண்டமனூர் ஜமீனைச் சேர்ந்தது. கண்டமனூர் ஜமீன் எல்லைக்குட்பட்டிருந்த வருசநாட்டு மலையிலிருந்தே வைகையாறு தோன்றுகிறது. தமிழகக் கலாச்சாரத்தோடிணைந்த, பாண்டி மண்ணிற்கு பெருமை சேர்த்த வைகை இன்று ஓரிரு மாதங்கள் மட்டும் நீர்வரத்துள்ள காட்டாறாக மாறிப்போனது. பெரியாறு அணை கட்டப்பட்டு நீர்மின்சாரத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் சுருளி ஆற்றின் மூலமாக வைகையில் கலப்பதும், வைகையணை கட்டப்பட்டதும், வைகையை உயிரோட்டமுள்ள நதியாகக் காண்பித்தாலும், பெரியாறு நீர் சுருளியாற்றின் மூலமாக வைகையில் கலக்குமுன்னுள்ள மேல்பகுதிதான் பூர்வ வைகை / தாய் வைகை ஆகும். தாய் வைகை முற்றிலும் கைவிடப்பட்டது என்பதுதான் உண்மை. சுருக்காகமாகச் சொன்னால் தாய் வைகையின் நீர்ப்பிடி நிலங்கள்தான் கண்டமனூர் ஜாமீன்.
நல்லவரென்று சொல்லப்பட்டாலும், ஜமீனுக்குரிய சூதுவாதும், பொறுப்பும் இல்லாததால், ஜாமீன் நிர்வாகம் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்ள, ஜமீனைப் பிடித்த சிக்கல், ஜமீன் குடிகளையும் பல்லாண்டுகள் பிடித்து உலுப்பி வந்திருக்கின்றது. "கடவுளால் கைவிடப்பட்ட கண்டமனூர் ஜமீன்" என்று சொல்லும்படி மக்கள் பல சிரமங்களை அனுபவித்துள்ளனர். வரிகட்ட முடியாத ஜமீன் நிர்வாகத்தை, ஆங்கில அரசே எடுத்துக்கொண்டு குர்த் எனும் ஆங்கிலேயரை அரசு நிர்வாகியாக்குகின்றது.
ஆங்கிலேய அரசு அவ்வட்டாரத்தை வளப்படுத்த முதலீடு செய்ய முன்வராது என்பதைப் புரிந்துகொண்ட குர்த் துரை, அப்பகுதியில் பாண்டியர் காலத்துப் புதையல்களும், பொக்கிசங்களும் இருப்பதாகக் கூறி, ஏழு கிராமங்களையும், வளமான மலை நிலங்களையும் ஐந்தரை இலட்சம் ரூபாய்க்கு பம்பாய் சேட்களை (பட்டேல் சகோதரர்கள்) ஏலத்தில் எடுக்க வைக்கின்றார். நிலங்களை அளந்து குர்த் துரை முறைப்படுத்திக் கொடுக்க, கொஞ்ச நிலங்களை உள்ளூர் வாசிகள் வாங்குகின்றார்கள். மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளை பென்னி குயிக் பாணியில் கிழக்கே திருப்பி நீராதரங்களை வளப்படுத்த குர்த் சொன்ன யோசனைகளை சேட்டுக்கள் ஏற்காததால், மனமுடைந்து போகிறார்.
பட்டேல் சகோதரர்களிடமிருந்து பின் கோவை பி.எஸ்.ஜி சகோதரர்கள் நிலத்தை வாங்குகின்றனர். மனிதாபிமானமும், நவீனத்துவமும் கலந்த அவர்களின் நிர்வாக முறைகள் விவசாயத்திற்கு உந்துவிசை தர ஆரம்பித்தது.
குர்த் துரை யோசனைப்படி (தாய்) வைகையில் தடுப்பணைகள் கட்டி, ஆங்காங்கே குளங்களும், கண்மாய்களும் தோண்டப்பட்டிருந்தால், நிலத்தடி நீராதரம் பெருகி வட்டாரம் வளப்பட்டிருக்கலாம். வைகை அணையைக் கட்டி ஆயக்கட்டுப் பரப்பை அதிகப்படுத்திய அரசும், வைகையின் நீர்ப்பிடிப் பரப்பை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஊரையொட்டி ஓடும் வைகையாறு. ஆனால் பயிரிடப்பட்ட பயிர்களோ...சாமை, குதிரைவாலி, வரகு, கேள்வரகு, கம்பு, சோளம், மானாவரிப் பருத்தி, மிளகாய், வெங்காயம், பூண்டு, புகையிலை, சீரகம்...அரிசிச் சோறு சாப்பிட நினைத்த விவசாயிகள் சீப்பாலக்கோட்டையில் வயல் வாங்கி நெல் பயிரிட்டிருக்கின்றார்கள். வைகை மூலம் யார்யாரோ வளம் பெற, தங்கள் காலடியில் ஓடிய வைகையை எத்தனை நாளைக்கு குடிக்க, குளிக்க, குண்டிகழுவ மட்டும் ஒரு சமூகம் பயன்படுத்திக்கொண்டு சும்மா இருக்கும்.
வைகையை வசப்படுத்த வெறிகொண்டனர் போலும். ஆற்றில் துரவு கிணறுகள் அமைத்து, மோட்டார் பொருத்தி, குழாய்கள் மூலம் தங்கள் நிலங்களுக்கு நீரைக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர். அவர்களின் இந்த மதிநுட்பத்தோடு பசுமைப் புரட்சி முயற்சிகளும் கலந்தடிக்க, கடவுளால் கைவிடப்பட்ட கண்டமனூர் ஜமீன் பகுதியை சாமான்ய விவசாயிகள் தங்கள் முயற்சியால் வென்றெடுத்திருக்கின்றார்கள். அது சாதாரண வெற்றியல்ல என்பது மட்டும் அவ்வட்டார வாசிகளுக்கு தெரியும்
பாண்டியர் காலத்துப் புதையலும், பொக்கிசமும் இருப்பதாகக் கூறித்தான் குர்த் துரை, பம்பாய் பட்டேல் சகோதரர்களுக்கு ஐந்தரை இலட்சம் ரூபாய்க்கு இவ்வட்டாரத்தை விற்றிருக்கின்றார். குர்த் துரை சொன்ன புதையல், பொக்கிஷத்தின் உண்மையான அர்த்ததைப் புரிந்துகொண்ட, இப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு பிடிமண்ணிலிருந்தும் அள்ள அள்ளக் குறையாத பொக்கிசங்களை எடுத்திருக்கின்றார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான தேனி வேளாண்சந்தையை, ஒருகாலத்தில் ஏலத்திற்கு விடப்பட்ட பகுதி நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களால் நிரப்பி வியக்க வைத்திருக்கின்றார்கள். கோவிந்தநகர விவசாயிகள் இதில் முக்கிய பங்கு வகித்தார்கள். கோவிந்தநகரம், விவசாயத்திற்காக தமிழகத்திலே அதிக மின்சாரம் பயன்படுத்திய முன்னுதாரனக் கிராமமாகின்றது.
கோவிந்தநகரத்தின் வேளாண்மையை ஆவணப்படுத்திய முறையிலிருந்து, அதுவும் read between the lines என்று சொல்வார்களே அதுமாதிரி படித்து புரிந்துகொள்ளும் போது நாம் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகின்றது. வேளாண்மைக்காக அரசுசெய்த முதலீட்டைவிட ஒவ்வொரு விவசாயியும், நீர்ப்பாசன உத்திரவாதத்தைப் பெற தனித்தனியே அல்லல் பட்டிருக்கின்றார்கள். மற்ற எந்த கட்டமைப்பையும்விட மின்சாரமும், தொழில்நுட்பமுமே (மின்சார மோட்டார்) அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாயிறுந்த்திருக்கின்றது. வைகை ஆற்றின் குறுக்கே ஆரம்பத்திலே பாலம் கட்டப்பட்டிருந்தால், மணல்மேட்டுப் பகுதியிலும், வருசநாட்டுப் பகுதியிலும் அவர்களின் விவசாய விரிவாக்கம் சிரமமில்லாமல் இருந்திருக்கும். வைகை ஆற்றின் நீர்ப்பிடி பிரதேசம் சரியான முறையில் பாராமரிக்கப் பட்டிருந்தால், வைகை ஆற்றில் நீரோடும் (Runoff) காலம், அதிகரித்து, நிலத்தடி நீராதாரம் ஓரளவாவது பாதுகாக்கப் பட்டிருக்கும். (தாய்) வைகையில் தடுப்பணைகள் என்ற பெயரில் அரசு செய்த சொதப்பல்களும், முல்லைப் பெரியாற்றுத் தண்ணீர் PT ராஜன் கால்வாய் மூலமாக இப்பகுதிக்குக் கொண்டு வரச் செய்த முயற்சிகளில் அரசின் அக்கறையின்மை – அனைத்தும் சேர்த்தே இவ்வட்டார விவசாயிகளுக்கு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தத் தனித்துவத்தை உள்வாங்காத எந்த அரசின் கொள்கை நடைமுறைகளையும், இங்கே பிரயத்தனத்தின் பேரில்தான் கொண்டுசெலுத்தமுடியும்.



பாகம் இரண்டு தொடரும்