6/16/11

விதையாய் விழுந்த பத்ரி சேஷாத்ரி

People can do it –மக்களால் செய்ய முடியும்
People can be trained to do it –மக்கள் செய்யமுடியுமாறு அவர்களைப் பயிற்றுவிக்க முடியும்
Conditions can be created to do it – அவ்வாறு செய்வதற்கான சூழலை உருவாக்க முடியும்
இதுதான் சமுதாய முன்னேற்றப் பணியின் ஆதார நம்பிக்கை. இந்த நம்பிக்கையினடிப்படையில்தான் முன்னேற்றப் பணியாளர்கள் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். இந்த நம்பிக்கையில்தான் ஒரு புதிய பணிக்காக, கிழக்குப் பதிப்பக பத்ரியவர்களை ஒரு பயிற்சியில் ஈடுபடுத்தினோம். பத்ரியவர்கள் எதிர்பார்த்த வேகத்தில் காரியங்கள் நடக்காதபோது அவரே “என்ன எதுவும் நடக்கின்ற மாதிரி தெரியவில்லையே” என்று ஆதங்கப்பட வேண்டிய சூழ்நிலை கூட உருவானது. அந்தச் சூழ்நிலையும் மாறியது.

சமீபத்தில், அடுத்து வருகின்ற மூன்றாண்டுகளுக்கு இராமேஷ்வரம் பகுதியில் PAD செய்ய வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற பங்கேற்பு பயிலரங்கத்தில் கலந்து கொள்ள வாய்ப்பேற்பட்டது.

வடிவேலு ஒருபடத்தில் “இப்பொழுதெல்லாம் துவைச்சு தொங்கப்போடுவது மட்டுமல்ல: கிளிப்பையும் மாட்டிவிட்டுப் போறாங்களே” என்று புலம்புவது மாதிரி, அரசு நிர்வாகத்தைப் பற்றிய மக்களுடைய கண்ணோட்டம் மாறிவருகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய கடுமையான விமர்சனங்களில், கோபத்தைவிட நியாயமே மேலோங்கியிருக்கின்றது.

ஒரு படத்தில் அலர்ட் ஆறுமுகம் என்ற பாத்திரத்தில் ஹோட்டலுக்குப் போகும் வடிவேலு, சாப்பாட்டில் பூச்சி இருப்பதாக ரகளை செய்யும் நபரை, “ஏண்டா! ஒரு ஆடு செத்துக்கிடக்கு! கோழி செத்துக்கிடக்கு! நண்டு செத்துக்கிடக்கு இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலே! பூச்சி மட்டும் தெரியுதாக்கும்” என்று மொத்தும் அந்தக் காட்சியை உதாரணம் காட்டி, கடலுக்குள் ஆயிரம் போகின்றது. ஆலைக் கழிவுகள், முனிசிபாலிட்டிகளின் பீக் கழிவுகள், ஆயில் கழிவுகள் என்று எத்தனையோ போய் பவளப் பாறைகளைச் சாகடிக்கின்றது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு, மீனவன் தீவுப் பக்கம் போறதுதான் கண்ணுக்குத் தெரிகின்றது. அவனால் தான் பவளப் பாறைகளே அழிவதாக அடித்து விரட்டுகின்றார்கள். வடிவேலு மொத்துன மாதிரி மொத்துனாத்தான் சரிப்பட்டு வருவார்கள். அவர்கள் ஆதங்கத்திலும் ஒரு நையாண்டி.

இந்த அனுபவங்களை எல்லாம் ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில், அந்தப் பொறுப்பை கல்லூரிப் பக்கம் கால்வைக்காத ஒரு பணியாளரிடம் ஒப்படைக்க, அவரிடமிருந்து கைப்பிரதியான அறிக்கையை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவரிடமிருந்து மின்னஞ்சலில் வந்த அறிக்கையைப் பார்த்து நானே வியந்து போனேன். கம்ப்யூட்டரில் அந்தப் பணியாளர் உட்கார்திருந்ததைப் பார்த்தரியாத நான் அவரிடம் “இது எப்படிச் சாத்தியமாயிற்று?” என்று கேட்டபோதுதான், “NHM writer” என்று பத்ரி சார் சொன்னாரே அதை டவுண்லோட் செய்து நானே கணனியில் தட்டச்சு செய்தேன் என்றார். அதற்கு முன் அவர்கள் உபயோகப்படுத்திய தமிழ் மென்பொருள் user friendly ஆக இல்லாததால், ஆங்கிலம் தெரியாத பணியாளர்களை கம்ப்யூட்டர் பக்கம் செல்லவிடாமல் தடுத்திருக்கின்றது. உருப்படியான ஒரு தமிழ் மென்பொருள் எப்படியெல்லாம் ஒரு சாதாரணத் தமிழனுக்கு, விடுதலை உணர்வைத் தரும் என்பது புரிந்த போது, தமிழ் இனக் காவலர்கள் என்று சொல்லிக்கொண்டு, எது தமிழை வளர்க்கும், தமிழைக் கொண்டே தமிழருக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது என்று தெரியாமல், தேவையற்ற பிரச்ச்னைகளில் நம் எல்லோருடைய நேரத்தையும், பொருளாதாரங்களையும் வீணடிக்கத் தூண்டுகின்றார்களே என்ற ஆதங்கம் தலைதூக்கியது. கோடிக்கணக்கான பணம் சம்பாதித்திருக்கின்றார்கள். அதில் சில லட்சங்களைச் செலவழித்திருந்தால், தமிழுக்கான மென்பொருள்கள் சாதாரணத் தமிழனைச் சென்று அடைந்திருக்கும். தமிழிலில் தட்டச்சு செய்ய உதவும், இலவசமான, உபயோகத்திற்கு எளிதான மென்பொருள், ஆங்கிலம் தெரியாத தமிழனுக்கு ஒரு வரப்பிரசாதம். விடுதலையுணர்வு. பத்ரி சார்ந்த நிறுவனம் செய்ததை, இனக் காவலர்களும், கலாச்சாரக் காவலர்களும் செய்திருக்க முடியாதா என்ன?

விழுவாய் தமிழா நெருப்பாய் என்று அறைகூவல் விடுபவர்களின் ஆதங்கம் புரிகின்றது. சில நேரங்களில் நாம் நெருப்பாக விழத்தான் வேண்டும். அதற்கு முன்னாள் நமக்கு விதையாக விழவும் தெரிந்திருக்க வேண்டும்.

பத்ரி சேஷாத்ரி என்னும் தமிழருக்கு விதையாக விழத் தெரிந்திருக்கின்றது. நன்றி

நான் மேல குறிப்பட்ட பணியாளர் (ஜெ.ஜெயராஜ்) தயாரித்த ஆவணம் குறைந்த பட்ச திருத்தங்களுடன் வெளியிடப்பட்டிருக்கின்றது. Scribd wePapers