11/7/19

இணையம் பழகுவோம்

MISS CD வாட்சப் குழு முன்னெடுத்த ஆவணப்படுத்தல் முயற்சிகளைத் தொடர்ந்து, நண்பர்களால் ஆவணப்படுத்தப்படும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாட்சப்பின் வடிவமைப்பும், அதிலிருக்கும் வசதிகளும் பொருத்தமாக இருக்காது என்று கருதியதால், பகிரப்படும் ஆவணங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுசெல்ல வேறுவகையான சமூக ஊடகத் தளங்களைக் குழு சிந்திக்கவேண்டிய கட்டாயமேற்பட்டது.

Blogger, Scribd, Slideshare, Issuu, Face Book போன்ற சமூக ஊடகங்களையும், ஆவணப்பகிர்வுத் தளங்களையும் பயன்படுத்திய அனுபவம் இருந்தாலும், 2013 க்குப் பிறகு, சமூகப்பணி பொருளாகராதி தயாரிப்பில் நான் ஆர்வமடைந்ததாலும், அதன் பின் MISS CD குழுவில் ஆர்வமெடுத்துக்கொண்டதாலும், சிலநேரங்களில் அத்தளங்களைப் பார்வையிடுவதைத் தவிர அதை தொடர்ந்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. சிலவற்றின் ID, Password கூட மறந்து விட்டிருந்தது. நண்பர்களின் ஆவணப்படுத்தலுக்காக அத்தளங்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று அதில் மீள் கவனம் செலுத்திய பொழுது, கடந்த காலத்தில் இருந்தது போன்று இல்லாமல், அத்தளங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் இலவசமாகப் பயன்படுத்த முடிந்த third party plugins களை உப்யோகப்படுத்த நிபந்தனைகள் போடப்பட்டிருந்ததை அறிய நேர்ந்தது. என்னுடைய பயன்பாட்டிற்கேற்ப அத்தளங்களில் நான் இணைத்திருந்த widgets, plugins களை ப் புரிந்துகொள்ளவே சிரமப்படவேண்டியிருந்தது. பணம் செலுத்தும் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டும் user friendly ஆக மாற்றப்பட்டிருப்பது தெரிந்தது.

வலைப்பூ (blog) பதிவுகளின் தோற்றத்தில் மாற்றங்கள் செய்யவேண்டினால் html code ஐ எடிட் செய்யவேண்டும். இலவசமாகக் கிடைத்த third party widgets, plugins களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாற்றங்கள் செய்திருந்ததால் என்னுடைய வலைப்பூவில் சில காணொளிகளும், links ம் செயல்படவில்லை. அப்பொழுது java script ல் embed செய்ததை upgrade செய்யாததால் பல காணொளிகள்  இப்பொழுது செயல்படவில்லை. இது மாதிரியான விசயங்களில் எனக்கு வழிகாட்டும் நண்பர் சேகரின் உதவியையும் சட்டென்று பெறமுடியவில்லை. ஆகையால் நானே நேரம் செலவழித்து,  தட்டுத்தடுமாறி சிலவற்றைப் புரிந்துகொண்டு செயல்பட மீள்கற்றல் தேவைப்பட்டது. MISS CD குழுவின் தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்தவேண்டுமென்றால் அதிகக் கற்றலும், பயிற்சியும் தேவைப்படுவதை உணர்ந்தேன். அப்படியான சுயகற்றலுக்கு கடந்த காலத்தில் இருந்தது போன்ற விடாமுயற்சி இப்பொழுது என்னுள் பழுது பட்டிருப்பதையும் உணரமுடிந்தது.

என்னுடைய பாடக்குறிப்பு ஆவணங்களைப் பதிவேற்றப் பயன்படுத்திய Slide Share தளத்தை மீண்டும் ஆர்வமுடன் கவனித்துப் பார்த்தபோது எனக்கே பிரமிப்பாக இருந்தது. Aug 2010 இல் நான் பதிவேற்றியிருந்த என்னுடைய பாடக்குறிப்பு ஆவணமான Theories of Social Work  6,72,321 பேரால் பார்வையிடப்பட்டும் 10521 பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுமிருந்தது. Jan 2011 ல் பதிவேற்றியிருந்த Social Case Work எனும் ஆவணம் 2,30,192 பேரால் பார்வையிடப்பட்டும் 5158 பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டும், Feb 2011ல் பதிவேற்றியிருந்த Social Group Work என்ற ஆவணம் 2,97,023 பேரால் பார்வையிடப்பட்டும் 5819 பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுமிருந்ததைப் (2.11.2019) பார்க்கமுடிந்தது, ஏறக்குறைய எழெட்டு ஆவணங்கள் இலட்சத்திற்கு அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டிருந்தது. தினந்தோறும் சராசரியாக 500 பார்வையாளர்களை அது ஈர்த்துக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

Scribd ஆவணப் பகிர்வு தளம் பெருமளவு subscription சார்ந்ததாக ஆகியிருந்தாலும், அதனுடைய analytics இரண்டு மூன்று தடவை
மாற்றப்பட்டிருந்தாலும், ஆவணங்களை இலவசமாகப் பார்க்க, பதிவிறக்க அத்தளம் போட்ட கட்டுப்பாடுகள் எரிச்சலூட்டினாலும், ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய அவர்கள் கட்டணம் கேட்டாலும், அதையும் மீறி அத்தளத்தில் என்னுடைய கணனிமயமாக்கப்பட்டு இணையமாக்கப்பட்ட அறிக்கைகள் ஆவணங்களுக்குத் தொடர்ந்து வரவேற்பு இருந்திருக்கின்றது.  நான்
பணியாற்றிய கல்லூரியும், என்னுடன் பணிபுரிந்த சக பேராசிரியர்களும் இதை அங்கீகரிக்க மறுத்தாலும், அந்த ஆவணங்கள் உலகெங்கிலுமுள்ள சமூகப் பணியாளர்களால் வரவேற்கப்பட்டிருப்பதும், பயன்படுத்தப்பட்டிருப்பதும் மிகப்பெரிய மன ஆறுதலைத் தந்தது.

அதைவிட மகிழ்ச்சியான அனுபவம் என் மாணவர்களின் முயற்சி சார்ந்தது. சமூகப்பணி மாணவர்களின் களப்பணி அறிக்கைகளை கணனிமயப்படுத்த வேண்டும், இணையமயப்படுத்தவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது வந்தது. அதை எப்படிச் செய்வதென்ற வழிமுறைகள் தெரியாதிருந்தது. எனக்கிருந்த சொற்ப இணையப் பரிச்சயம், பதிவேற்றப்பட்ட என்னுடைய பாடக்குறிப்பு ஆவணங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, அதை எப்படிச் செய்யலாம் என்று ஓரளவு புரிய வைத்தது. நான் புரிந்திருந்ததை கல்லூரி அளவில் நிறுவனமயப்படுத்திச் செய்யும் சூழ்நிலை அப்போது கல்லூரியில் இல்லை. என்னுடைய நிலை அதைவிடப் பரிதாபம். என் மூலமாக வரும் எதற்கும் பாராமுகம் காட்டும் சில ஆசிரியர்கள் இருந்ததை நானறிந்திருந்ததால், என்னுடைய ஆர்வத்தை தேவையற்ற விவாதங்களுக்கு உட்படுத்த விரும்பாமல், களப்பணியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சின்ன சின்ன மாற்றங்கள் செய்வதன் மூலமே முன்னெடுக்கலாம் என்று நினைத்தேன்.

முதலாண்டு சமூகப்பணியில், முதல் பருவத்தில், orientation visit என்று சமூகநலத் தளத்தில் பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், குறைந்த வருவாய்ப் பிரிவினரின் வாழ்வியல் நிலையைப் புரிந்துகொள்ளவும், அது தொடர்புடைய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். குறிப்பாக, நிறுவனமயப்படுத்தாத, open setting என்றழைக்கப்பட்ட குறைந்த வருவாய்ப் பிரிவினரின் (Slums) குடியிருப்புகளுக்கு மாணவர்களை நான் ஆர்வமுடன் அழைத்துச் செல்வேன்.  மேலவாசல், சுப்ரமணியபுரம், கீழ்மதுரை, கரும்பாலை போன்ற குடியிருப்புகளில் எனக்கிருந்த தொடர்புகளைக் கொண்டு அக்குடியிருப்புகளுக்கு மாறி மாறி அழைத்துச் செல்வேன். நிறுவனமயப்படுத்தப்பட்ட இடங்களில் மாணவர்களுக்கு சம்பிரதாயமான தகவல்களைத் தர ஆட்களிருப்பார்கள். ஆனால் குடிசைப் பகுதிகளில் அப்படி ஏற்பாடு செய்யமுடியாது. அக்குடியிருப்புகளில் எவையெவையெல்லாம் பார்வையிடப்படவேண்டும், அதற்கான விளக்கங்களை அங்கிருக்கும் மக்களுடன் எப்படி உரையாடிப் பெறவேண்டும் என்று மாணவர்களுக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டாலும், தகவல் சேகரிப்பிற்கு மக்களுடன் உரையாட புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு  பழக்கமில்லாதிருந்ததால், தகவல் சேகரிக்கவும், அதை அறிக்கையாக்கவும் சிரமப்படுவார்கள். மாணவர்களால் பலவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அவர்களின் புரிதலை, அதுவும் ஆங்கிலத்தில் அறிக்கையாக்க முடியாமல் சிரமப்படுவார்கள். நன்றாக அறிக்கைகள் எழுதும் மாணவர்களின் அறிக்கைகளைத் தழுவியே பிற மாணவர்களின் அறிக்கைகள் அமையும்.

"திறந்த வீட்டில் ஏதோ நுழைந்த மாதிரி இத்தனை பேரை கூட்டி வருகிறீர்களே....நாங்கள் என்ன காட்சிப்பொருளா? என்று ஒரு குடியிருப்புவாசி ஒருமுறை செவிட்டிலறைந்தது மாதிரி கேட்டது, என்னை சிந்திக்க வைத்தது. ஒரு வகுப்பு முழுமையையும் திமுதிமுவென்று கூட்டமாக ஒரே குடியிருப்பிற்கு அழைத்துச் செல்லாமல் மாணவர்களை 6-7 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, எழெட்டு குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுப்பினால் மாணவர்களின் பிரசன்னம் குடியிருப்பு வாசிகளின் கவனத்தை அவ்வளவாக சங்கடப்படுத்தாது என்ற அனுமானத்தின் அடிப்படையில் மாணவர்களை சிறு குழுவாக அனுப்பும் முறையைப் பின்பற்ற ஆரம்பித்தேன். குழுவாகச் சென்றாலும் அவர்களுடைய களப்பணி அறிக்கைகளைத் தனித்தனியாகத்தான் சமர்பிக்க வேண்டும். சின்னக் குழுக்களாகச் சென்றதால் அவர்கள் சாகவாசமாக உரையாடி தகவல் சேகரிக்க முடிந்ததால் மாணவர்களின் புரிதல் மேம்பட்டது என்பதை அவர்களின் feedback மற்றும் அறிக்கைகளிலிருந்து அறிய முடிந்தது. இந்தக் குழு முறை (Team based visit)  ஓரளவு நான் எதிர்பார்த்த பலனைத் தந்தது. ஆனால் மற்ற இடங்களுக்கு அழைத்துப் போவது மாதிரி இல்லாமல் இதற்கு திட்டமிடவேண்டியிருந்தது. வேலைப்பளு மிக்கதாயிருந்தது.

மாணவர்களின் அறிக்கைகளை கணனிமயப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்த பிறகு, இந்தக் குழுமுறையைப் பின்பற்றி, தனித்தனியாக அறிக்கைகள் சமர்பிக்காமல், குழு அறிக்கையாக, அதுவும் ppt presentation ஆக தரச் சொல்லி அதைக் கணனிமயப்படுத்தலாம், முடிந்தால் பிறகு அதை இணையமயப்படுத்தலாம் என்று முடிவெடுத்தேன். இந்தப் பணிக்காக சில வழிகாட்டுதல்களை வகுத்துக்கொண்டேன். இதன்படி

1. 7-8 நபர்கள் கொண்ட குழுவாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, அக்குழுவிற்குச் சொல்லப்பட்ட குடியிருப்பு பகுதிக்குச் செல்ல வேண்டும். அக்குழுவில் ஒன்றிரண்டு பேர்களுக்காவது கணனி கையாளவும், அதில் ppt தயாரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  .
2. அக்குழு செல்லும் குடியிருப்புப் பகுதி மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் விதமாக குறைந்த பட்சம் 20 புகைப்படங்கள் எடுக்கவேண்டும். அவர்கள் எடுக்கும் புகைப்படங்களைப் பற்றி 20 -40 சொற்களில் விளக்கம் தரவேண்டும்.
3. புகைப்படம் எடுக்க கைபேசிகளையோ அல்லது கேமிராக்களையோ பயன்படுத்திக்கொள்ளலாம். குழுவினர் எடுத்த புகைப்படங்களைக்கொண்டு ppt தயார் செய்து, அதை வகுப்பில் பகிர வேண்டும்.
4.குழுவிற்குப் பொதுவான மதிப்பென்னும், களப்பணி மற்றும் ppt தயாரிப்பில் ஆர்வம் காட்டிய மாணவர்களுக்கு குழுவின் பரிந்துரையின் படி சிறிது கூடுதல் மதிப்பென்னும் தரப்பட்டு மாணவர்களின் தனிதிறன் அங்கீகரிக்கப்படும்.

2008 ல் இப்பரிசோதனை முயற்சி தொடங்கப்பட்ட போது, மாணவர்களிடம் கைபேசிகள் பழக்கத்தில் இருந்தது. கைபேசிகள் மூலமோ அல்லது கேமிரா மூலமோ அவர்கள் புகைப்படங்கள் எடுக்கலாம் என்றாலும், பின்னால் வரவிருந்த தொழிநுட்பச் சிக்கலை நான் உணரவில்லை. அப்பொழுதிருந்த கைபேசிகளிலும், கேமிராக்களிலும் படமெடுக்க முடிந்தாலும், அதை எளிதாகப் பகிர வசதி இல்லை. ppt தயார் செய்ய தேவைப்பட்ட கணனி  வசதி பல குழுக்களில் இருந்த மாணவர்களிடம் இல்லை. சில குழுக்கள் browsing மையம் சென்று அதைச் செய்ய வேண்டியிருந்தது. ppt தயாரிப்பில் அனுபவம் இல்லாததால் அதிக நேரமும் பொருள் விரயமும் சில குழுக்களுக்கு ஏற்பட்டது. அறிக்கைகள் சமர்பிக்க கால தாமதமானது. எடுத்த புகைப்படங்கள் data transfer செய்யும்போது அழிந்துவிட்டதால், சில குழுக்களால் அறிக்கைகளைக் கொடுக்க முடியாமலே போய்விட்டது. இறுதியில் இரண்டு குழுவினரின் ppt மட்டும் கிடைத்தது. சிரமங்கள் பல எதிர்கொண்டாலும் அச் சிரமங்களிலிருந்து கற்றுக்கொண்டது ஏராளம். வகுப்பறையில் மாணவர்கள் அறிக்கைகளை சமர்பித்ததால், எல்லாக் குடிசைப் பகுதிகளைப் பற்றியும் அவர்களுக்குப் பொதுவான புரிதல் ஏற்பட்டது.   

அடுத்த ஆண்டு 2019 இல் இப்பரிசோதனையைத் தொடர்ந்த போது, வீட்டிலோ நண்பர்களிடத்திலோ கணனி வசதி இருந்து, யாருக்கெல்லாம் ppt  தயாரிப்பில் அனுபவம் இருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு அவர்களெல்லாம் எல்லாக் குழுக்களிலும் இடம் பெறுமாறு பார்த்துக் கொண்டேன். சிறிது காலதாமதமானாலும் ஒன்றிரண்டு குழுக்கள் தவிர அனைவரும் ppt அறிக்கைகள் சமர்பிக்க முடிந்தது.


2010 கைபேசிகளின் தொழில்நுட்பம் மேம்பட்டது. தரம் உயர்ந்த கேமிராக்களைக் கொண்ட கைபேசிகளை மாணவர்களில் பலர் வைத்திருந்தனர். கேமிராக்களை உபயோகிக்காமல் கைபேசிகளைக் கொண்டே மாணவர்கள் புகைப்படம் எடுத்தார்கள். ஆனால் எல்லா மாணவர்களிடமும் தொழிநுட்பமும், திறனும் ஒரு சேர இருந்ததாகச் சொல்லமுடியாது. சில மாணவர்களுக்குத் தங்கள் UG படிப்பின் போதே ppt தயாரிப்பு போன்ற செயல்களைச் செய்வதில் அனுபவமும் திறனும் கைவரப் பெற்றிருந்ததால், களப்பணி ppt அறிக்கைகளை குறித்த காலத்தில் பெற முடிந்தது. மாணவர்களின் presentation ஒரு நாள் முழுக்க நடந்தது. ஒரு குழு ஒரு குடியிருப்புக்கு மட்டுமே சென்றிருந்தாலும், ppt மூலம் காட்சிப்படுத்தியதால் அவர்களுக்கு மதுரை நகர சேரிப் பகுதிகளைப் பற்றிய புரிதல் ஏற்பட அந்த முயற்சி உதவியது.

மாணவர்களின் வகுப்பறை presentation முடிந்ததும் அதை என்னுடைய ஆவணங்களைப் பதிவேற்றியிருந்த Slideshare தளத்தில் பதிவேற்றி மாணவர்களுக்கும் தெரியப்படுத்தினேன்.

இவ்வாறு மூன்று ஆண்டுகளில் (2008 - 2010) மாணவர்கள் தயாரித்த 12 ppt ஆவணங்களை Slide share தளத்தில் பதிவேற்றியிருந்தேன். இந்த ஆவணங்கள் இதுவரை ஏறக்குறைய 35,000 பேர்களால் பார்க்கப்படும், 650 பேர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுமுள்ளதாக Slideshare Analytics தெரிவிக்கிறது. இதில் என்னை ஆச்சரியப்படவைத்த விஷயம் என்னவென்றால் இந்த ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்தவர்களில் பெரும்பாலோர் Architect படித்த, படிக்கும் மாணவர்கள் தாம்.

களப்பணி என்பது சமூகப்பணிக்கல்வியின்ன் signature pedagogy. ஆனால் அதை எப்படி பயனுள்ள கற்றல் முறையாக்குவது என்பதில் இந்திய சமூகப்பணிக் கல்வியாளர்களுக்குத் தெளிவில்லை. களப்பணி அறிக்கைக்கள் ஆங்கிலத்தில்தான், அதுவும் எழுத்து வடிவில்தான் இருக்கவேண்டும் என்ற மொன்னையான போக்கினால், தாங்கள் பார்த்ததை, உணர்ந்ததை எழுத முடியாததால் களப்பணி அறிக்கைகள் ஜீவனற்றுப் போய்விட்டது. எல்லா சமூகப்பணிக் கல்வி நிலையங்களிலும் இதுதான் நிலை. களப்பணி என்பது ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து விளையாடும் ஒரு கண்ணாமூச்சு விளையாட்டாகி, மாணவர்களுக்கு மதிப்பெண். ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் வெளிவேலைகள், சொந்த வேலைகளைப் பார்க்க அவகாசம் என்றாகிவிட்டது.

இப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்தேன் என்பதை முதல்வர் நாராயண ராஜா அவர்களைத் தவிர வேறு எந்த ஆசிரியருக்கும் நான் சம்பிரதாயமாகக் கூட தெரிவிக்கவில்லை. நான் சொல்லாவிட்டாலும், அந்த முயற்சிகளின் பின்னிருந்த நியாயத்தை விமர்சிக்க முடியாமல், சக ஆசிரியர்கள் ஒரு சிலர் வெளிப்படுத்திய sarcastic comments, ஆர்வமான மாணவர்களின் உற்சாகத்தை மட்டுப்படுத்தியது என்று அதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அப்போதே தெரிவித்தனர்.

மாணவர்களின் எல்லாக் களப்பணி அறிக்கைகளையும் கணனிமயப்படுத்த இயலாதென்றாலும், அதற்கான முயற்சிகளை நிறுவனமயப்படுத்தி தொடர்ந்திருந்தால், அது மதுரை நகர் பற்றிய அருமையான காலப்பெட்டகமாக வருங்காலத்தில் போற்றப்பட்டிருக்கும். வருங்காலத்தில் என்ன இப்பொழுதே போற்றப்பட்டிருக்கும். இப்படியெல்லாம் செய்யலாம் என்று எனக்குப் புரிய வந்தபோது, அதை செய்வதற்கான தொழில்நுட்பம் கைகொடுத்த போது, நானும் நண்பர் நாராயண ராஜாவும் ஓய்வு பெரும் வயதை (2010) நெருங்கிவிட்டோம். அதற்கு முன்னதாக கல்லூரி சார்ந்த 5000 புகைப்படங்களை scan செய்து கணனிமயப்படுத்தி இருந்தோம். சமூகப்பணியின் 12 மூல இலக்கியங்களை scan செய்து கணனிமயப்படுத்தினோம், இந்திய திட்டக்கமிசன் 1960 களில் வெளியிட்டு, ஒரு பதிப்போடு நின்று, மீண்டும் பிரசுரிக்கப்படாத Encylopedia of Social Work in India என்ற ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட வரலாற்று ஆவணத்தை scan செய்து கணனிமயப்படுத்தினோம். அவ்வாறு கணனிமயமாக்கப்பட்டு, இணையமயமாக்கப்பட்ட Encylopedia of Social Work in India கலைக் களஞ்சியதின் மூன்று பகுதிகள் (volume) எங்களுடைய முயற்சியால் இணையத்தில் கிடைக்கிறது. அது எப்பொழுதும் கிடைக்கும். அது சாகாவரம் பெற்றுவிட்ட இலக்கியமானது. அதையெல்லாம் இப்பொழுது நினைத்தால் உடல் சிலிர்க்கிறது.

இந்த அனுபவங்களின் அடிப்படையில், கணனி, இணையம் சார்ந்த தகவல் தொழில்நுட்ப அறிவியலைக் (ICT) கொண்டு MSW Self Finance Course ஐ MSW (IT) என்று மாற்றலாமா என்று கூட நானும் நாராயண ராஜாவும் சிந்தித்தோம். ஆனால், அந்த எண்ணத்தை, ஓய்விற்குப் பிறகு, கல்லூரிப் பணியில் நாங்கள் தொடர முயற்சிப்பதாக நிர்வாகமும், சக ஆசிரியர்களும் தவறாகப் புரிந்துகொண்டால் அது எங்களின் சுயமரியாதைக்கு இழுக்கு என்று நினைத்து, கல்லூரியிலிருந்து முழுமையாக வெளியேறுவதுதான் மரியாதை என்று  மவுனமாகி வெளியேறிக்கொண்டோம்.

பத்து ஆண்டுகள் கடந்து விட்டது. நான் ஓய்வு பெற்றுவிட்டேன். 86 ஆம் ஆண்டிலிருந்து CD படித்த பல மாணவர்களுடன் தொடர்பிலிருக்கிறேன். அவர்களில் பலரின் கள அனுபவங்கள் என்னை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது. சமுதாய மேம்பாட்டுப் பணி தொடர்புடைய ஆவணங்களில், எந்தக் கற்றலையோ, சிந்தனைத் தாக்கத்தையோ உருவாக்காத பல அனுபவங்களைப் படித்திருக்கின்றேன். அதை ஆவணப்படுத்தியவர் உயரதிகாரத்தில் இருப்பவராகவோ, ஆங்கிலப் புலமை மிக்கவராகவோ இருப்பதால் அந்த அனுபவங்கள் எளிதாக ஆவணப்படுத்தப்பட்டு, எழுதியவர்கள் பிரபலமானவர்களாதாலால் அது பலருடைய கவனத்தையும் பெறுகிறது. என்னுடைய மாணவர்களின் அனுபவங்கள் அதைவிட மேலானது என்று எவரிடமும் நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன். ஆனால் அது உலகின் பார்வைக்கு வராததன் காரணம் அதை ஆவணப்படுத்தப்படுத்தத் தவறியதால்தான். அது எந்த மொழியில் ஆவணப்படுத்தப்பட்டாலும், அதில் உறைந்துள்ள உள்ளார்ந்த உண்மையால் அது தன்னைத்தானே உலகோரின் பார்வைக்கு கொண்டு செல்லும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. அது பலருக்கும் பெரிய சிந்தனைத் திறப்பாக, பல பிரச்சனைக்களுக்கு தீர்வு கண்டறிய உதவும். அந்த நம்பிக்கையினடிப்படையில் தான் MISS கல்லூரியில் CD படித்து பல களங்களில் பணியாற்றும் நண்பர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த ஆவணங்கள், எழுத்தாக, குரலாக, காணொளிகளாக, கருத்துப்படங்களாக பல வடிவங்களில் இணையமாக்கப்படும் போது, அது சமூக மாற்றுருவாக்கத்திற்கான புது நம்பிக்கைகளை விதைக்கும்.

அதற்காகவே எம் மாணவர்கள் இணையம் பழகுகிறார்கள். அவர்கள் எழுத்தாக, குரலாக, காணொளிகளாக, படங்களாக இணையத்தில் இருப்பார்கள். அதற்கான முன்னெடுப்பே இணையம் பழகுதல்  

No comments: