7/25/11

மன்னார் (வளைகுடா) தந்த ஞானம்-III

மன்னாரின் தரைப்பாலம்:
மன்னார் தீவையும், இலங்கையின் பிரதான நிலப்பரப்பையும் இணைத்திருக்கும் கடலின் ஊடாக போடப்பட்டிருக்கும் அந்த நீளமான தரைப்பாலத்தில் நின்றிருந்தபோது என்னை ஒரு பரவச உணர்வு ஆட்கொண்டது. பாம்பன் பாலம் ஒரு அதிசயமென்றால், இந்தத் தரைப் பாலமும் அதிசயம்தான். கடலால் பிரிக்கப்பட்ட இரண்டு நிலப்பரப்புகளை மன்னார் தீவு -தரைப்பாலம் இணைக்கும் பணியைத்தான் பாம்பன் பாலமும், மன்னார் பாலமும் செய்கிறது. பாம்பன் பாலம் பார்ப்பவர்களை மிரள வைக்கும். ஆனால் மன்னார் பாலம், “நின்று பாரேன், நடந்து பாரேன், கொஞ்சம் உட்கார்ந்துதான் பாரேன்” என்று நம்மை  நட்புடன் தோழமையுடன் ஆசுவாசப்படுத்துகிறது. ஆழமேயில்லாத அந்தக் கடல்பகுதியைக் கடந்துதான் புராணகாலத்தில்  இராமபிரானும், வானரப்  படைகளும்  இலங்கைக்குள்  நுழைந்திருப்பார்கள். இராமனின் காலடித்தடங்கள் பட்ட இடத்தில், பாண்டிய, சோழர்களின் குதிரைகளின் குளம்படி பட்ட இடத்தில், சமீப காலத்தில் இனப்போரில் தங்கள் இன்னுயிர் நீத்த  எத்தனையோ வீரர்களின்  காலடித் தடங்கள் பட்ட இடத்தில் நிற்பதாக என்னுள் ஒரு உணர்வு.
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கும் சேதுபாலம் (Adams Bridge) கடல்பகுதி, புராண காலத்தில் இப்படித்தான் ஆழமற்று இருந்திருக்கவேண்டும். இப்பொழுது கூட பாம்பன் சின்னபாலத்திலிருந்து அலை வற்றிய நேரங்களில் அருகாமைத் தீவிற்கு முழங்கால் தண்ணீரில் நடந்து செல்ல முடிகின்ற மாதிரி, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நடந்தே செல்லும் படிதான் புராணகாலக் கடல் இருந்திருக்கும்.                                         
சில வரலாற்றுப் புரிதல்கள் நமக்கு ஏற்பட வேண்டுமென்றால் சில இடங்களை நாம் பார்த்தே ஆகவேண்டும். அலையடிக்கும் ஆர்ப்பரிக்கும் கடலை விட ஆழமற்ற அமைதியான கடல் உருவாக்கும் தோழமையுணர்வை சொல்ல வார்த்தையில்லை. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலுள்ள தமிழர்கள் ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டவர்கள். ஆனால் இலங்கைத் தமிழர்கள் அதிலும் குறிப்பாக மன்னாரை நுழைவிடமாக்கி வந்தவர்கள் கடல் தந்த தோழமையுணர்வினால் தான் சென்றிருப்பார்கள். அது பாண்டியர் கடலாய் இருந்திருக்கலாம். அது முத்துக்கள் கிடைத்த தென்கடல். சமீபகாலத்து வரை மீன்பிடித்து விட்டு மன்னார் வளைகுடாத் தீவுகளில் மீனவர்கள் ஓய்வெடுத்ததைப் போல, முத்துக் குளித்துவிட்டு மன்னார் தீவில் ஓய்வெடுத்திருப்பார்கள். அவர்கள் அந்நிய பூமிக்குச் செல்வதுமாதிரி கூட உணர்ந்திருக்கமாட்டார்கள். காலநிலை மாற்றங்களால் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்காத பட்சத்தில் “சேதுவை மேடுறித்தி வீதி சமைப்போம்” என்ற பாரதியின் கனவு நனவாயிருக்கும்.
இந்தியா இலங்கை என்று இரு நாடுகளாக உருவானபின்னும், இராமேஷ்வரம் மீனவர்களும் மன்னார் மீனவர்களும் சொல்லிய மாதிரி “நினைச்சா இங்கிருந்து அங்கே போவோம் அங்கிருந்து இங்கே வருவாங்க. அருகருகே வலை இறக்கிக் கொண்டிருப்போம். புதுப் படம் ரிலீசானது தெரிந்து எங்க கூடவே வந்து மீனைப் போட்டுட்டு படம் பாத்துட்டுப் போவாங்க நாங்களும் அவங்க கூடப் போய் நாலு டம்ளர் சரக்கை ஊத்திட்டு வருவோம்”. இரு நாடுகளுக்கு மத்தியில் அப்போதும் எல்லைகள் இருக்கத்தான் செய்தன எல்லைகளில் துப்பாக்கிகள் முளைத்தது இப்பொழுதுதானே?
சுதர்ஸிணி
என் மாணவி ஏஞ்சலின் அகல்யா மூலமாக அறிமுகமான மன்னாரைச் சேர்ந்த யோகேஷ்வரி மற்றும் சுதர்சினி கொழும்பு  National Institute of Social Development-ல் BSW  படிக்கும் மாணவிகள் நான் சமூகப் பணி பேராசிரியர் என்பதால் அவர்களுக்கும் என்னிடம் சட்டென்று ஒரு ஓட்டுதல் ஏற்பட்டது.
சுதர்சினியிடம் மன்னாருக்குச் செல்ல வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னபோது, “மன்னார் சுற்றுலாத்தலம் இல்லையே!, அங்கே செல்ல வேண்டுமென்கிற உங்கள் விருப்பம் வித்தியாசமாக இருக்கின்றதே” என்று ஆச்சரியப்பட்டார். “உலகின் உயிர்ச் செறிவு மிக்க மன்னார் வளைகுடாப் பகுதியில் PAD  நிறுவனம் பணியாற்றுகின்றது. ஒரு வளமையான கடலுக்கு பெயர் தந்த மண்ணைப் பார்க்க வேண்டும். அந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும்” என்று நான் சொன்ன போது, “அதற்கு ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும்? இந்த வார இறுதியில் மன்னாருக்குச் செல்கிறேன். அங்கிருந்து மண் எடுத்து வருகின்றேன். ஆசை தீரப் பாருங்கள். இந்தியாவுக்கும் எடுத்துச் செல்லுங்கள்” என்றே கிண்டலடித்தார்.
“கொழும்பிலிருந்து 450 கிலோ மீட்டர் தூரம். ஏறக்குறைய  9 மணிநேரப் பயணம், இரவுப்பயணம் என்றால் கூடப் பரவாயில்லை. பகல் நேரத்தில்தான் பயணம் செய்ய வேண்டுமென்கின்றீர்கள். பஸ்ஸை நிறுத்தி ஆட்களை ஏற்றுவார்கள். பயணநேரம் கூடலாம்” என்று பயமுறுத்தியும் கூட நான் பிடிவதமாகப் போய் வரலாம் என்று சொன்ன போது, மன்னாரை வாழ்விடமாகக் கொண்ட அவருக்கு என்மீது மேலும் அபிமானமும், மரியாதையும் ஏற்பட்டது.
சுதர்ஷினி ஐந்துமாதக் குழந்தையாக இருந்தபோது, தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து, எல்லாவற்றையும் போட்டுவிட்டு, இரவோடிரவாக இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தார்கள் ஏறக்குறைய 15 வருடம் தமிழ்நாட்டில் அகதி வாழ்க்கை. மீண்டும் UNHCR (United Nations High Commission for Refugees)  உதவியுடன் மன்னார் திரும்பி இழந்த வாழ்க்கையை எடுத்துக்கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கைப் பிரச்னை சுதர்ஷினி குடும்பத்தைப் போல மன்னார் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை நிர்க்கதியாக நிற்க வைத்திருக்கின்றது.. அவர்களின் பூர்வீக கிராமமான முள்ளிக்குளம் இன்று இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்.
அருடதந்தை தந்தை இராயப்பா, சுதர்சிணி குடும்பம் எல்லாவற்றையும் இழந்திருந்தாலும் இழந்ததைப் பற்றிய புலம்பல் ஏதுமில்லை. நான் மன்னாரில் சந்தித்த தமிழக் குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்தபின்பும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. மன்னார் பேசாலையில் நான் சந்தித்த பள்ளி முதல்வர் “எல்லாவற்றையும் போட்டுவிட்டு இரவோடிரவாக படகேறி உயிர் தப்பிய போது, கல்வியைத் தவிர, கல்வி தந்த ஆற்றலைத் தவிர வேறெதையும் எடுத்துச் செல்ல முடியாது என்று புரிந்தபோது, மீண்டும் திரும்பிய பின், எங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகிறோம்” என்று அவர் அமைதியாகச் சொன்னபோது நான் கலங்கிவிட்டேன். இலங்கை இனப் பிரச்சனை தமிழர்கள் மத்தியில் புது உத்வேகத்தை உருவாகியிருக்கின்றது. அவர்களின் உத்வேகம் உலகை வசப்படுத்தும்.
இலங்கையில் நடப்பதற்கு மாறாகத் தமிழ் நாட்டில் நடந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வந்தது. தென்மாவட்டங்களில் நடந்த ஜாதிக் கலவரங்களை விசாரிக்க நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட, அந்தக் கமிசனின் வேண்டுகோளின்படி, கலவரத்தின் போது ஒரு குறிப்பிட்ட குடியிருப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மதுரை சமூகப் பணிக் கல்லூரியை வேண்டிக்கொள்ள, அதற்காக அந்தக் குடியிருப்பிற்கு நான் செல்ல நேர்ந்தது. இழப்புக்களை மிகைப்படுத்தி ஒருசாரார் சொல்ல, அவர் களைச் .சேர்ந்த இன்னொரு சாராரோ, “என்னங்கட டன் கணக்கில் தங்கம் பறிபோனதாயும், மந்தைமந்தையாய் ஆடுமாடுகள் தீக்கீரையானதாயும் சொன்னால் எப்படி? கேட்பவர்கள் நம்பும்படி சொல்லுங்கள்” என்று கடிந்து கொண்டனர். இதற்கு மாறாக இலங்கைத் தமிழரின் மனோபாவம் இருந்தது.
அருட் தந்தை இராயப்பா   
தங்களுடைய வீட்டில் என்னை வசதியாகத் தங்க வைக்க முடியாது என்று கருதிய சுதர்ஷினி குடும்பத்தார், என்னை அருட்தந்தை ராயப்பாவுடன் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். கத்தோலிக்க திருச்சபை சுனாமியாலும், போரினாலும் அனாதைகளாக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளை அரவணைத்து, அவர்கள் கல்வி கற்பதற்கான எல்லா வசதிகளையும் செய்து தர மன்னாரில் “தூய வளனார் இல்லம்” என்ற விடுதி நடத்தி வருகின்றது. சமூகப் பணித் துறையிலிருந்தாலும் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்க அங்கிருந்த அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதியைப் போல்  தமிழ்நாட்டில்கூட நான் பார்த்ததில்லை. மெத்தையுடன் கூடிய தனித்தனி கட்டில், தனித்தனி மேஜைகள், அலமாரிகள் என்று இங்கே நடுத்தரக் குடும்பங்கள் கூட செய்துகொடுக்க முடியாத வசதிகள்.  நான் அங்கு தங்கியிருந்த ஞாயிற்றுக் கிழமையில், எனக்குக் கிடத்த நேரத்தில் மாணவர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும், அவர்களின் பாடப்புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் பார்க்க வாய்ப்பேற்பட்டது. அங்கே தமிழ்க் குழந்தைகள் முழுக்க முழுக்கத் தமிழில் படிக்கிறார்கள். பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்ட நேர்த்தி, முக்கியமானவற்றை வண்ணக்கட்டங்களில் எடுத்துக்காட்டும். அழகு ஏற்க்குறைய ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் தரத்திற்கு ஒப்ப இருந்தது. நான் மாதிரிக்குப் பார்த்த நோட்டுப் புத்தகங்களில் மாணவர்களின் கையெழுத்து அழகாக இருந்தது. மாணவர்களின் முன்னேற்றத்தைக் குறிக்கும் பாடசாலை மட்ட தேர்ச்சிக் குறிப்பேடுகள (Monitoring Card), மாணவர்களின் முன்னேற்ற்த்தை அறிந்து கொள்ளும்படி விரிவாக இருந்தது.
இலங்கையில் பள்ளிக்கல்வி:
இலங்கையிலுள்ள பள்ளிக்கல்வியின் தரத்தை எட்ட இந்தியாவிற்கும், தழ்நாட்டிற்கும் இன்னும் பல காலம் ஆகலாம். இலங்கையில் 90 சதவீத மாணவர்களுக்கு சமச்சீர் கல்விதான்.  தரமான பள்ளிக்கல்விதான் இலங்கையின் வலிமை. தமிழ் சிங்களம் பிரதான போதனா மொழி. பிரச்சனைக்குப் பிறகு இப்பொழுது மும்மொழி (தாய் மொழி, ஆங்கிலம், சிங்கள / தமிழ்) நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ் மாணவர்கள் சிங்களத்தை உள்வாங்குமளவு, சிங்கள மாணவர்களால் தமிழை உள்வாங்க முடியாத நிலை. தமிழும் சிங்களமும் மட்டுமல்ல உல்கெங்கும் வியாபித்து, உலக மொழிகள் பல தெரிந்த ஒரு தமிழ் தலைமுறை இலங்கையில் உருவாகி வருகின்றது. இலங்கைத் தமிழன் கட்டாயமாக ஜெயிப்பான்.
இலங்கைத் தமிழர்களின் வலிமையே அவர்களுக்குக் கிடைக்கும் தரமான தாய்மொழிக் கல்விதான். அங்கே மொழிஎன்பது பிழைக்கும் உத்தியல்ல. அது கற்றலுக்கான கருவி, பெரும்பாலான இலங்கைத் தமிழ் மாணவர்களால் தாங்கள் நினைத்தை தமிழில் பிழையின்றி எழுதுவதற்கும் பேசுவதற்கும்  முடியும். இங்கே தமிழில் பள்ளிக்கல்வி முடித்துவிட்டு முதுகலை படிக்கும் பெரும்பாலான மாணவர்களால் கூட தமிழில் பிழையின்றி எழுத முடியாது. இதை நான் பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. என்னுடைய ஆசிரியப் பணியின் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
நம்மிடையே Centers of Excellence இருக்கின்றன. சர்வதேசத் தரமுடைய பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் அதில் படிப்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. ஆனால் இலங்கையில் அனைவருக்கும் சத்தியமானது நம்முடைய சராசரித் தரத்தைவிட  பன்மடங்கு உயர்ந்ததாக இருக்கின்றது.
அருட்தந்தை ராயப்பாவின் அன்பும் கரிசனமும் என்னை நெகிழவைத்தது. தமிழ்நாட்டில் அருளனந்தர் கல்லூரியில் படித்ததால் அவருக்கு நிறைய நண்பர்கள் தமிழ்நாட்டில்  இருக்கின்றார்கள். இனப்போரின் போது ஒரு நள்ளிரவில் சிங்கள இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக் குள்ளாகியிருக்கிறார். “அங்கி அணிந்த என்னையே ஆர்மீக்காரன் அந்த அடி அடிச்சான்ன, எங்க பிள்ளைகளையெல்லாம் எப்படி அடிச்சிருப்பான். எம் பிள்ளைகளெல்லாம் எப்படித்தான் தாங்கிக் கொண்டார்களோ” என்று அவர் சொன்னபோது எனக்குச் சுரீர் என்றது. பிறகு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் முறையிட்டதன் பேரில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் என்றால் இந்துக்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் உள்ளடங்குகிறார்கள். முஸ்லீம்கள் தமிழ் பேசினாலும் முஸ்லீம் அடையாளத்துடனே வாழ்கின்றார்கள்.
கிறிஸ்தவ மதம் தமிழ் இனப்பிரச்சனையில் இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களை அரவணைத்துக் கொண்டுள்ளது. என்னுடைய மாணவர்களில் ஒருவரான அருட்சகோதரர் சவரிமுத்து, இத்தாலியில் அகதிகளாக வாழும் தமிழரிடையே பணியாற்றுவதற்காக இத்தாலிக்கு அனுப்பபட்டிருக்கின்றார். எங்கெங்கே இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் அவர்களுக்கு உதவவும், தமிழில் திருப்பலி கொடுக்கவும் முறையான ஏற்பாடுகளை அனைத்து திருச்சபைகளும் செய்து வைத்திருக்கின்றது. சிங்களவர்களிலுள்ள கிறிஸ்தவர்கள், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கத் தொடர்ந்து குரலெலுப்பி வருகின்றார்கள். பெளத்தக் குருமார்கள் தான் சிங்களப்பேரின  வாதத்தைத் தூண்டுகின்றார்கள் என்றுதான் நமக்குச் சொல்லப்பட்டு வருகின்றது.. ஆனால் இலங்கையில் பெரும்பாலான பேருந்துகளில் புத்தர் உருவப்படத்தோடு இந்துக் கடவுளர்களின் உருவப்படங்களையும் காணலாம். சில பேருந்துகளில் இந்துக் கடவுளர்களின் பெரிய உருவப் படங்களைக்கூட காணமுடிகின்றது. இந்துக் கோயில்களுகு சிங்களர்களின் வருகை அதிகரித்த வண்ணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அருட்தந்தை ராயப்பாவுடன் இருந்த பொழுது ஆரம்ப பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஒரு(கிறிஸ்தவர்) ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தேன். அங்கே ஆசிரியர்கள் பணியில் சேரும் போது இலங்கை ரூபாயில் 12-15 ஆயிரம் வரை வாங்குகிறார்கள். ஆனால் கொத்தனாருக்கு தினச் சம்பளம் ரூபாய் 1200. குறைந்த சம்பளத்தில் எப்படி திருப்தியாகப் பணியாற்றமுடிகிறது என்று கேட்ட போது, “ஆசிரியப் பணி புனிதமான பணி என்பதாக நாங்கள் வளர்த்தெடுக்கப்பட்டோம்” என்று கூற, “கிறிஸ்தவப் பின்னனியில் இருந்து வருவதால் இப்படிச் சொல்கிறார்களா? இல்லை எல்லா மதத்தினரும் இப்படித்தான் நினைப்பார்களா? என்று கேட்டதற்கு, “இங்கே இந்து நல்ல இந்துவாகவும், முஸ்லீம் நல்ல முஸ்லீமாகவும் பெள்த்தர் நல்ல பெளத்தராகவும் தான் வளர்க்கப்படுகின்றோம்” என்றார். ந்ம்மை மாதிரி ஜாதி, மத துவேஷங்க்ளூக்குப் பழக்கப்பட்டவர்களுக்கு ஜாதி, மத துவேஷமில்லாமல், இனத்துவேஷத்திற்கு ஆட்பட்ட இலங்கைப் பிரச்சனையை சட்டென்று புரிய முடியவில்லை.
நான் மன்னார் பகுதிக்கு விரும்பி வந்ததையறிந்ததும் மன்னாரின் மூலைமுடுக்கெல்லாம் காண்பிப்பதில் அருட்தந்தை ஆர்வம் காட்டினார். மன்னாரிலுள்ள பெருக்குமரம், 450 கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையின் பொருட்டு சங்கிலி அரசனால் கொல்லப்பட்ட தேவசாட்சி என்ற இடம், இலங்கையின் மிகப்பெரிய பேசாலை சர்ச், தலைமன்னார் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
450 வருடங்களுக்கு முன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது மாதிரி, பேசாலை சர்ச்சில் மக்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்த போது சிங்கள இராணுவம் குண்டுவீசித் தாக்கியது. இன்று அந்த சர்ச்சை இலங்கையின் மிகப்பெரிய சர்ச்சாகக் கட்டி பதில் சொல்லிவிட்டார்கள்.
பேசாலை சர்ச்:
பேசாலை சர்ச்சின் அலுவலக மாடியில் பேசிக்கொண்டிருந்த போது, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பதை பற்றி பேசியபோது பல உண்மைகள் புரிய வந்தது. “தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். அவர்களின் மீன்பிடி முறைகளும் உபயோகிக்கும் வலைகளும் ஆட்சேபத்திற்குரியது’ என்றனர். இராமநாதபுரம் கடல்பகுதியில்  மூன்று கடல் (வாரத்திற்கு மூன்று நாட்கள் இயந்திரப் படகுகள் மீன் பிடிக்க அனுமதி) அமலில் உள்ளதைப் போன்று இலங்கைக் கடல்பகுதியிலும் தமிழக மீனவர்களுக்காக மூன்று கடலை அரசாணை ஏதுமில்லாமல் இலங்கை அரசு அமல்படுத்துகிறது. நாளை(திங்கள்) இரவு வந்து பாருங்கள், கடலுக்குள் ஒரு நகரமே இருப்பதுபோல், தமிழ் நாட்டுப் படகுகள் இங்கே மீன் பிடிப்பதை” என்று அவர்கள் சொன்னபோது என்னால் மெளனமாகத்தான் இருக்க முடிந்தது.
தமிழக மீனவர்கள்:
தமிழ் நாட்டுக் கடல் பகுதியில் மீன்வளம் குன்றி வருவதால் இலங்கைக் கடல் பகுதிக்கு நாம் மீனவர்கள் செல்கின்றார்கள் என்பதே உண்மை. உயிர்ச் செறிவுமிக்க மன்னார் கடல் பகுதியில் மீன்வளம் குன்றுவதற்கான பல காரணங்களில், வளைகுடாப் பகுதியிலுள்ள தரவைகளை நாம் சரியாகப் பராமரிக்காததும் ஒரு காரணம். மன்னார் தீவில் தரவைகள் பாழாக்கப்படவில்லை. கடலையொட்டிய தரவைகளுக்கும், (Coastal Wetlands), அதாவது ஈர நிலங்களுக்கும், கடலின் உயிர்ச்செறிவிற்கும் சம்பந்தமுண்டு. மன்னார் தீவில் தரவைகளில் திரியும் கணக்கற்ற கழுதைகளே, அங்கு தரவைகள் அதன் தன்மை மாறாமல் இருப்பதைக் காட்டுகின்றது. தமிழ் நாட்டுக் கடலில் மீன்வளம் குன்றிவருவது நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால். இதை விட்டுவிட்டு இனஉணர்வைத் தூண்டினால் மீன் வளம் பெருகிவிடுமா என்ன? தமிழ்நாட்டுக் கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக தேவையான அறிவியல் மற்றும் நிர்வாக ரீதியான முயற்சிகளை அரசு எடுத்துச் செய்ய நாம் வற்புறுத்த வேண்டும்.
பேசாலையிலிருந்து தலைமன்னாருக்குச் சென்றோம். தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து இருந்த காலத்தில் கட்டப்பட்ட சிறு துறைமுகத்தை பியரடி என்கிறார்கள்; அந்தப் பியரடி இன்று இலங்கைக் கப்பல் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பியரடியிலிருந்து Adams bridge ஐ  பார்ப்பதற்கு, படகில் உல்லாசப்பயண ஏற்பாடுகளும் இருக்கின்றது.
தனுஷ்கோடியும் தலைமன்னாரும்:
இயற்கைச் சீற்றங்களாலும் உள்நாட்டுப் போரினாலும் எப்படி பழமை வாய்ந்த குடியிருப்புகள் நலிவடைகின்றன என்பதற்கு தனுஷ்கோடியும் தலைமன்னாரும் நல்ல உதாரணங்கள்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பம்பாயிலிருந்து கொழும்புக்கு இரயிலில் பயுணச்சீட்டு வாங்கிக் கொண்டு தனுஷ்கோடி வரை இரயிலிலும், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்குக் கப்பலிலும் பின் அங்கிருந்து கொழும்புவிற்கு மீண்டும் இரயிலிலும் பயணம செய்ய முடிந்தது. அந்தக் காலத்தில் வாங்கப்பட்ட இரயில் பயணச்சீட்டை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தார்கள்.
இப்பொழுது மாதிரியான நிலை இருக்கும் பட்சத்தில் தனுஷ்கோடி புயலைக் காரணம் காட்டி மக்களை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கமுடியாது. இன்றும் கூட தனுஷ்கோடியில் மீனவர் குடியிருப்பு அடிப்படை வசதிக்ள் இல்லாமல் அல்லோல்படுகின்றது. தனுஷ்கோடியைப் போன்று முற்றிலும் அப்புறப்படுத்தபடாவிட்டாலும் போரினால் மன்னாருக்கும் தலைமன்னாருக்கும் வந்து கொண்டிருந்த இரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் தன்னுடைய பழைய பொழிவை மீட்டெடுக்க இன்னும் சிறிது காலமாகும்.
அருட் தந்தை இராயப்பாவுடன் தேவதோட்டம் என்ற இடத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களில் 450 பேருக்கும் அதிகமானோர் சங்கிலி அரசனால் கொல்லப்பட்டது பழைய வரலாற்றுச் செய்தி. அந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்ட அடித்தளம் தோண்டிய போது குவியல் குவியலாக எலும்புக்கூடுகள் தென்பட்டு, அந்த எலும்புகளின் காலத்தைக் கணிக்க ஆய்விற்கு அனுப்ப, அந்த இடமே இப்பொழுது கிறிஸ்தவர்கள் அதிகம் வந்து பிரார்த்திவிட்டுச் செல்லும் புனிதத் தலமாகிவிட்டது.
அந்தக் கட்டிட வேலையை சுதர்ஷ்னியின் தகப்பனார் ஒப்பந்த அடிப்படையில் செய்வதால், கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்காக உயிர்துறந்தவர்களின் எலும்புகளைப் புனிதமாகப் பாதுகாப்பது தெரிந்தது.
நாம் இன்னும்  பண்பட வேண்டும்:
மன்னார் அழகிய, மிக அமைதியான சிறு நகரம். ஞாயிற்றுக்கிழமையென்றால் ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி தெருக்களில் மக்கள் நடமாடடமில்லாமல் அமைதியாகி விடுகின்றது.
இலங்கையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். ஞாயிறு இரவு, சுதர்ஷினியின் வீட்டிலிருந்து புனித வளனார் இல்லம் செல்ல புறப்பட்டபோது, இரவு பதினொரு மணி. எனக்கும் பகலில் செய்த மாதிரி, ஒரு ஹெல்மெட் (தலைக்கவசம்) கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார்கள். இந்த நேரத்தில் கூடவா? என்று கேட்ட போது நம்முடைய நன்மைக்குத்தானே சொல்கிறார்கள் என்று சொன்னபோது சட்டத்தை மதிக்கும் அவர்களுடைய மனோபாவம் என்னை வியக்க செய்தது.
இனத்தால், மொழியால் நாம் இருவரும் ஒருவரே என்று இலங்கைத் தமிழரின் தோளில் நாம் கைபோடவேண்டுமென்றால் நாம் இன்னும் கொஞ்சம் பண்பட வேண்டும் போல் எனக்குப் பட்டது.(தொடரும்)

No comments: