3/15/13

நம்பிக்கைகளின் மீது ஊற்றப்பட்ட ஆசிட்

எண்பதுகளின் (1980) தொடக்கத்தில் வைகையாற்றில் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட, மதுரை நகரில் ஆற்றங்கரையோரமிருந்த குடிசைகள் அடித்துச் செல்லப்படுவது தொடர்கதையானது. இதைத் தவிர்க்க வைகைக் கரையோரமிருந்த குடிசைவாசிகளுக்கு பாதுகாப்பான மாற்றிடக் குடியிருப்புகளைத் (Resettlement) தர அரசு திட்டமிட, அதன்படி 2000 குடியிருப்புகளைக் கட்ட தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவனியாபுரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த, சாமநத்தம் கிராமத்தில் கண்மாய் புறம்போக்கு இதற்காக தேர்வு செய்யப்பட்ட்டது. வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, ஏற்கனெவே தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருந்த பயனாளிகளுக்கு 1989 ஆண்டு வாக்கில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி ஆரம்பமானது. (ஒரு வீட்டின் மதிப்பு 11500 ரூபாயென்று நினைவு. 500 ரூபாய் முன்பணம் செலுத்தி ஒதுக்கீட்டை உத்தரவாதம் செய்துகொண்டு மாதம் 80 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு தவணைமுறையில் பணம் கட்டவேண்டும்) தகவல் தெரிவித்தும், வீடுகளைப் பெற்றுக்கொள்ள பெரும்பாலான பயனாளிகள் ஆர்வம் காட்டவில்லை. அப்பொழுது குடிசைமாற்று வாரியத்தில் களப்பணிக்காகச் சென்றிருந்த மாணவர்களிடம், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை ஏற்கும்படி (Convince) செய்ய வேண்டிக் கொள்ளப்பட்டார்கள்.
clip_image002
பயனாளிகள் வீடற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை ஏற்றுக்கொள்ள முன்வராதாதற்கு பல்வேறு காரணங்கள். புதிய குடியிருப்பு அவர்களின் அன்றாட வாழ்வாதார மையங்களிலிருந்து மிகத் தொலைவில் அமைந்திருந்தது. பெயருக்கென்று அமைக்கப்பட்ட சாலையும், ஓரிரு முறை வந்து செல்லக்கூடிய பஸ் வசதியும் அவர்களுக்கு திருப்தி தருவதாக இல்லை. நிலத்தடி நீர் இருந்தாலும், அதைக் குடிக்க உபயோகிக்க முடியாது. மார்க்கெட், மருத்துவமனை என்று எந்த வசதியும் அருகில் இல்லை. அப்பொழுது நானே மதுரையில் சொந்த வீடில்லாமல்தான் இருந்தேன். ஆகையால் “வசதிகள் இல்லைதான். அங்கு செல்வதில் பல கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். 11500 ரூபாய்தான். மாதம் 80 ரூபாய் தவணை. இருபது வருடங்களுக்கு கட்டலாம். குடியிருக்கக் கூட வேண்டாம். எதிர்காலத்திற்காகும் முதலீடு என்றாவது இந்த அதிர்ஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று ஒரு முப்பது பயனாளிகள் வரை ஓடியாடி கன்வின்ஸ் செய்தோம். சில பயனாளிகளை மாணவர்களும் நானும் சைக்கிளில் அழைத்துச் சென்ற அனுபவமும் உண்டு.
அந்த பருவ (Semester) களப்பணி முடிந்தது. அதன் பிறகு அங்கு செல்ல வாய்ப்பேற்படவில்லை. இருந்தாலும் கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில் பளிச்சென்று இருந்த பெரியார் நகர் என் மனதை விட்டு அகல மறுத்தது. 60 அடி அகலமுள்ள பிரதானச் சாலை. 40 அடி அகலமுள்ள துணைச் சாலை. 30 அடி அகல குறுக்குச் சாலை. அசவுரியங்கள் இருந்தாலும், வீடற்றவர்களுக்கு அது மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே எண்ணியிருந்தேன். உலக வங்கி கடனல்லவா? தனியார் கட்டுமான நிறுவனங்கள் மாதிரி வண்ண தகவலறிக்கைகள் தயார் செய்திருந்தார்கள். அந்த அறிக்கைகள் சிலவற்றை பத்திரமாக பல ஆண்டுகள் பாதுகாத்தும் வைத்திருந்தேன். பெரியார் நகருக்கு மீண்டும் சென்றுவர நினைத்தாலும் அது சாத்தியமாகவில்லை. என்னுடைய அக்கறையும், சமூகப் பொறுப்பும் ஆசைப்பட்டதோடு நின்றுவிட்டது. குடிசை மாற்று வாரிய அதிகாரிகளைவிட, ஒரு கல்லூரி ஆசிரியரின் பொறுப்பின்மை குறைந்ததா என்ன?

2000 வீடுகள். அப்பொழுதே நூறு கோடி ரூபாய் முதலீடு. ஆசியாவின் மிகப் பெரிய மாற்றிடக் குடியிருப்பு (resettlement project) என்ற பெருமை. 2000 வீடுகளிலும் மக்கள் குடியேறியிருந்தால், வீட்டிற்கு ஆறு பேர் வீதம் 12000 மக்கள் குடியேறி, அது Township அந்தஸ்தை பெற்றிருக்கும். இன்று சேர்முகத்தாய் வாசன் கல்லூரி அருகில் என்று அடையாளம் சொல்லப்படுவது மாறி, வைக்கம் பெரியார் நகர் அருகிலுள்ள கல்லூரி என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.
நகரத்தை விட்டு சற்று தள்ளி, நாற்பது ஐமபது வீடுகளைக் கட்டும் கட்டுமான நிறுவனங்கள் கூட தங்கள் குடியிருப்பை ஜீவனுள்ளதாக்கி, அதைச் சுற்றி மேலும் முன்னேற்றம் ஏற்படும்படியாக மாற்றிக்காட்டி விடும்போது, 2000 வீடுகளைக் கொண்ட மிகப் பெரிய குடியிருப்புத் திட்டத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்ட குடிசைமாற்று வாரிய அதிகாரிகளின் திறமையை என்னவென்று பாராட்ட?
அவனியாபுரம் பெரியார் நகரிலிருந்து வந்த என் மாணவர் வினோத் அம்பேத்காரிடம் “அங்கு ஒருநாள் போய்விட்டு வரவேண்டுமே” என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். சென்ற 11.3.2013 அன்று, 24 வருடங்களுக்கு பின் வைக்கம் பெரியார் நகருக்குச் சென்றேன். அவனியாபுரத்திலிருந்து பெரியார் நகருக்கு செல்லும் பாதை அப்போது இருந்ததைவிட இப்போது மோசமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. பெரியார் நகர் ஊர்த் தலைவரான முத்துச்சாமி ஐயா அவர்கள், எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஆரம்பம் முதல் அங்கு குடியிருப்பவர்.
“கட்டிய ஐந்தாறு மாதத்திலே பாதிவீடுகள் ஈழக்களியான மண்வாகால் கீழிறங்கவும், விரிசல் விடவும் ஆரம்பித்தன. வந்து சென்ற பஸ்களும் பின் முறையாக வரவில்லை. வேறு போக்கிடம் இல்லாமல் அங்கு குடியேறிய சொற்ப குடும்பங்களுக்கும் நரக வேதனைதான். 500 ரூபாய் கட்டி வீட்டைப் பெற்றுக்கொண்டவர்களும், வீடுகளின் விரிசலைப் பார்த்து,தலைக்கு வந்தது தலைப்பாகையோடு முடித்துக் கொள்ளலாமென்று தவணை கட்டுவதை நிறுத்திவிட்டார்கள். பெரும்பாலான வீடுகளை ஒதுக்கீடு செய்துவிட்டபின், குடிசைமாற்று வாரியமும் அங்கிருந்த அலுவலகத்தை மூடிவிட்டது”.
“உலக வங்கியிடம் வாங்கிய கடனை அடைக்கவேண்டுமே. அப்பொழுது இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஆயிரம் குடும்பங்கள் மாதம் 150 ரூபாய் வாடகைக்கு அங்கே பணையம் வைக்கப்பட்டனர். இப்படியாக அரசுப் பணத்தை ஒரு துறையிலிருந்து மறுதுறைக்கு சுழற்சி செய்து விட்டார்கள். அவர்கள் வந்த பிறகு குடியிருப்பு கொஞ்சம் கண்டுகொள்ளப்பட்டது. அகதிகளாக ஒரிரண்டு ஆண்டுகள் அங்கிருந்தவர்களும், இங்கே இருப்பதைவிட சிங்களவன் குண்டுக்கு பலியாவதுமேல் என்று இலங்கைக்கு திரும்பிவிட, பெரியார் நகர் மீண்டும் அரசுப் பார்வையிலிருந்து விலகியது. 2000 வீடுகள் கட்டப்பட்டதில் ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர எல்லா வீடுகளும் சிதிலமடைந்து விட்டன. இப்போதுள்ள வீடுகள் எல்லாம் குடியிருப்போர்களால் மீண்டும் எடுத்துக் கட்டப்பட்டவையே”.
தரமற்ற வீடுகளைக் கட்டியதாக ஒப்பந்தகாரர் மீது ஒப்புக்காக போடப்பட்ட வழக்கு, ஒரு நபர் கமிஷன், அவ்வப்போது உண்மை அறிய வரும் அரசு அதிகாரிகள்- இதன் வெளிப்பாடு “எங்கோ தவறு நடந்துவிட்டது. பணத்தைக் கட்டுங்கள் என்று உங்களை (குடியிருப்போரை) கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பணத்தைக் கட்டாமல் குடியிருப்பவர்களின் பெயர்களுக்கு மனை உரிமை (வீடுகள் இடிந்துவிட்டதால்) வழங்கவும் முடியாது” என்று யாரும் யாரையும் நிர்பந்திக்கமுடியாத நிர்வாகச் சிக்கல். தாய்க்கிராமமான சாமநத்தம் ஊராட்சியின் வாக்கு வங்கியே பெரியார் நகராதலால், சில வசதிகள் வந்து சேர்ந்துள்ளன.
கண்மாயில் மீன் வளர்க்கின்றோம் என்ற பெயரில் கழிவு நீரைக் கொண்டுவந்து நிரப்பியிருப்பதால் வருடம் பூராவும் கொசுத்தொல்லை. குடிநீர் விலைக்கு வாங்கித்தான் குடிக்க வேண்டியிருக்கின்றது”.
அவர்கள் சொல்லும் பிரச்சனைகள் எல்லாம் இந்தியாவின் பல குடியிருப்புகளில் உள்ளதுதான் என்று சமாதானமடைய முடியவில்லை. காரணம் பெரியார் நகர் தானாக உருவான குடியிருப்பல்ல. அது நூறு கோடி ரூபாயில் திட்டமிடப்பட்ட ஒரு மாற்றுக் குடியிருப்பு. சரியாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் நகரமாக, ஒரு sattelite city யாக வளர்ந்து பரிணமித்திருக்கும். அந்த வாய்ப்புக்கள் சுத்தமாக அழித்தொழிக்கப்பட்டு, பார்வைக்கே பரிதாபமாக காட்சியளிக்கின்றது.
பெரியார் நகரின் கட்டுமானப் பணிகளை முன் நின்று கவனித்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஒன்றும் ஏப்பை சாப்பைகளல்ல. அப்பொழுது செயற்பொறியாளராக இருந்தவர் பெயருக்குப் பின்னால் BE, ME, MBA பட்டங்களை பார்த்ததாக நினைவு. Civil Engineering படித்த பொறியாளர்கள்தாம் கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்திருப்பார்கள். அவர்களுக்குத் தெரியாத என்ன? மண்வாகைப் பொறுத்துதான் அஸ்திவாரம் அமைக்கப்படவேண்டுமென்று. எப்படி ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் வீடுகள் பழுதடையும்படியாகவும், கட்டிமுடித்து 20 ஆண்டுகளுக்குள் எல்லா வீடுகளும் இடிந்து மன்னாகப் போகும்படியாகக் கட்டினார்கள் என்று தெரியவில்லை. குடிசை மாற்று வாரியத்திலே Community Development க்கு என்று தனிதுறையும் (Department), பணியாளர்களும் இருக்கின்றார்கள். அன்றாட வாழ்வாதார மையங்களிலிருந்து, மக்களை அப்புறப்படுத்தி மாற்றிடம் கொடுக்கும் போது அவர்கள் என்னென்ன சிரமத்திற்கு உள்ளாவார்கள், அதை எப்படிக் கையாளவேண்டும் என்பதைத் முன்கூட்டியே திட்டமிட்டு, அதை திட்டச் செலவில் சேர்த்திருக்கலாமே? பொறியாளர்களால் வீடுகளைத்தான் கட்டமுடியும். அவர்கள் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்பதால் தானே, உலக வங்கியின் வற்புறுத்தலின் பேரில் Community Development என்ற துறையே குடிசைமாற்று வாரியத்தில் உருவானது. யோசித்துப் பார்த்தால் எல்லோரும் சேர்ந்துதான் 2000 குடும்பங்களின் நம்பிக்கையைத் தகர்திருக்கின்றார்கள்.
வினோதினி, வித்யா போன்ற இளம் பெண்களின் மீது ஆசிட் ஊற்றப்பட்டது அக்கிரமம். ஆசிட் ஊற்றப்படுவதற்கு முன்னாலிருந்த அவர்களின் தோற்றபொலிவுவையும், ஆசிட் ஊற்றியபிறகு அவர்கள் பொலிவிழந்து உருக்குழைந்ததைப் பார்ப்பவர்கள், ஆசிட் ஊற்றியவர்களின் மீது கடுங்கோபம் கொள்வது நியாயமே. நான் பெரியார் நகர் உருவான பொழுது அது பொலிவுடனிருந்ததைப் பார்த்தவன். அந்த திட்டத்தைப் பற்றிய அழகான வண்ணமிகு தகவல் அறிக்கைகளை, ஒரு வளரிலம் பையன் சினிமா நடிகைகளின் படத்தை, தன்னுடைய நோட்டுப்புத்தக பக்கங்களுக்கிடையே மறைத்து வைத்து பார்ப்பதைப்போல பல ஆண்டுகள் பார்த்துக்கொண்டிருந்தவன். மீண்டும் பெரியார் நகரைச் சென்று பார்த்த போது எனக்கென்னவோ ஆசிட் ஊற்றப்பட்ட வினோதினி, வித்யாவின் முகங்களே நினைவுக்கு வந்தன.
2000 குடும்பங்களின் நம்பிக்கை மீது ஆசிட் ஊற்றிவிட்டு, அந்த குற்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லாமல், 40 கோடி ரூபாயில் அங்கே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, மீண்டும் பெரியார் நகரை எடுத்துக் கட்டப் போவதாக குடிசை மாற்று வாரியம் முன்வந்ததாம். “ஐயா! இட நெருக்கடியான இடங்களில் அடுக்கு மாடிகளோ, புடுக்கு மாடிகளோ கட்டிக்கொடுங்கள். நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு வீட்டு மனை உரிமை மட்டும் கொடுத்தால் போதும்” என்று கோபப்பட, ஆசிட் கேனை தூக்கிக் கொண்டு, குடிசை மாற்று வாரியம் ராஜாக்கூர் சென்று விட்டதாம். ராஜாக்கூரில் எப்படியெல்லாம் ஆசிட் ஊற்றியிருக்கின்றார்கள் என்பதை ஒருநாள் நானும், வினோத்தும் பார்த்துவர நினைத்திருக்கின்றோம்.

1 comment:

kavignar said...

outbursting of natural emotions. good expressions. So; many malpractices from top to end in our State and central govt. administrations. Actions speaks more than words.