Showing posts with label Dayalan. Show all posts
Showing posts with label Dayalan. Show all posts

11/22/19

எனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து


பத்து வருடங்களுக்கு முன் (29.4.2009) ஆவணப்பகிர்வு தளங்களில் (document sharing sites) பதிவேற்றப்பட்ட "Introduction to Professional Social Work" என்ற என் பாடக்குறிப்புகளடங்கிய ஆவணத்தை, வடிவ மாற்றம் (layout improvement) செய்ய நினைத்த நண்பர் தயாளன், அதைப் பதிவிறக்கம் செய்ய முற்பட, பதிவிறக்கம் செய்ய முடியாமல் போகவே, அந்த ஆவணத்தின் பிரதியை அனுப்புமாறு கேட்டிருந்தார். இலவசமாகப் பயன்படுத்தப் பதிவேற்றப்பட்ட ஆவணங்களை, அதிக வாசகர்கள் பார்வையிடுவதையும், பதிவிறக்கம் செய்வதையும் பார்க்கும் ஆவணப் பகிர்வு (Document Sharing) இணைய தளங்கள் அதற்குக் கட்டணம் வசூலிக்கும் தவறான நடைமுறை ஒரு புறம். அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள பதிவேற்றம் செய்யப்பட்டதை, சந்தா செலுத்துபவர்கள் (membership) மட்டுமே பதிவிறக்கம் செய்யலாம், மற்றவர்கள் பார்க்க, படிக்க  மட்டும் செய்யலாம் என்று மறைமுகக் கட்டுப்பாடுகளை விதிப்பது மறுபுறம்கற்பனைக்கெட்டாத அறிவுப் புரட்சியை உண்டாக்கிய விக்கிபீடியா தளத்தையும், அதன் நிறுவனர்களான Jimmy Wales மற்றும் Larry Sanger க்கும் மானுட சமுதாயம் எவ்வளவு தூரம் கடமைப்பட்டது என்பதை உணரவேண்டும். விக்கி என்ற ஒரு மென்பொருளை, அவர்கள் காப்புரிமை செய்து, வணிகரீதியாகப் பயன்படுத்த நினைத்திருந்தால், இன்று உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவேளை அவர்களும் இணைந்திருப்பார்கள். வணிகம் கடந்த ஒருநிலை இணையத்திலிருப்பதால்தான் அது வளர்கிறது. நாமெல்லோரும் இணையத்தை நமக்கானாதாக உணரமுடிகிறது. இந்த நன்றியால்தான், என் வாழ்நாள் முடிவதற்குள் ஒரு பத்துக் கட்டுரைகளாவது தமிழ் விக்கிபீடியாவில் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. பார்க்கலாம்.
தயாளன் 

நண்பர் தயாளன் கேட்ட ஆவணத்தை அனுப்பிவிட்டு, அதில் அவர் மாறுதல் செய்ய விரும்புவதாகத் தெரிவித்திருந்ததால், அந்த ஆவணத்தின் word file அவருக்கு அனுப்பினால் மேலும் உபயோகமாக இருக்குமே என்று என் கணனியில் தேடினால், அது கிடைக்கவில்லை. தான் பணியில் சேர்ந்த காலம் முதல் அந்த பாடத்தைக் (Introduction to Professional Social Work) கையாண்டு வந்த பேரா. JCD ஓய்வு பெற்றபின், அந்தப் பாடத்தை நான் கையாள ஆரம்பித்தேன். Introduction to Professional Social Work தான் MSW பாடத்திட்டத்தின் அஸ்திவாரம். எனக்கென்னவோ மாணவர்கள் உள்வாங்கும் முகமாக அது கையாளப்பட்டதில்லை. மற்ற பாடங்களில் காண்பிக்கப்பட்ட அக்கறை அதில் காட்டப்படவில்லை என்ற எண்ணத்தால், என் திறமைக்கெட்டியவரை தயாரித்த பாடக்குறிப்புகள். அந்தப் பாடத்தில் எனக்குத் தொடர் வாசிப்பு இருந்ததில்லையாதலால், நான் வாசித்தறிந்தவரை, எனக்குப் புரிந்தவரை தயார் செய்த குறிப்புகள். Building is strong but Basement is weak என்ற வடிவேலுவின் நகைச்சுவை,  நம் செயல்களுக்கும் பொருந்தும்தானே. அந்த ஆவணத்தை இற்றைப்படுத்தி (update) மேலும், மேலும் செழுமையாக்க, எளிமையாக்க நினைத்ததுண்டு. அது MSW முதல் பருவத்தில் தொடங்கும் முதல் பாடம். அது சமூகப்பணியின் பாயிரம் போன்றது. சரியான பாயிரமின்றி கற்கத் தொடங்குபபவர்கள், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப்படுவார் என்பது தமிழ் இலக்கிய விதி. அந்த ஆவணத்தில் பல இடங்களில் மேலதிக விளக்கங்களும் படங்களும், அடைப்புக் குறிகளுக்குள் கலைச் சொற்களுக்கான தமிழ் பொருளும் இருந்தால் நன்றாக இருக்குமென்று பணியிலிருக்கும்போதே விரும்பினாலும், அதை நான் செய்யவில்லை. ஆனால் இன்று அதன் உள்ளடக்கத்தில் அல்ல, வடிவமைப்பில் மாறுதல் செய்தால் இன்னும் படிக்க இலகுவாக இருக்குமே என்று நண்பர் தயாளன் முன்வந்தது என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. என்னுடைய ஆர்வத்தைவிட, என்னுடைய மாணவர்களின் இப்படிப்பட்ட ஆர்வமே என்னைத் தேங்கவிடாமல் இன்றளவும் ஓடவைத்திருக்கிறது.
 
நண்பர் தயாளனுக்காக Introduction to Professional Social Work - word file ஐ என் கணனியில் தேடும் போது, அது கிடைக்கவில்லை. அதற்கு மாறாக, நண்பர் வினோத் அம்பேத்கார், தான் படித்த காலத்தில் எடுத்த புகைப்படங்களின் கோப்பைப் பார்க்கநேர்ந்தது. சில பாடங்கள், சில வகுப்புகள், சில மாணவர்களை ஆகர்ஷிக்கும் என்பதற்கு, MSW பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த Introduction to Livelihood Promotion என்ற பாடமே சான்று. எளிய மக்களின் ஜீவனோபாய முறைகளை அறிந்துகொள்ள வினோத் அம்பேத்கார் பலரையும் சந்திப்பார். உரையாடுவார். அந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார். புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அதைப் புகைப்படங்களாகவும் எடுத்துவந்து என்னிடம் பகிர்ந்துகொள்வார். பெரும்பாலோர் கையிலிருக்கும் கேமிராக்கள் அழகானவற்றை நோக்கியே திரும்பும். ஆனால் எளிய மக்களை நோக்கி கேமிராவைத் திருப்புவதற்கு உள்ளார்ந்த சமூக அக்கறை வேண்டும். அது வினோத்திடம் அப்பொழுதே இருந்தது கண்டு நான் வியந்துள்ளேன்.
வினோத் அம்பேத்கார்
வினோத் என்னுடன் பகிர்ந்திருந்த 150 படங்களுக்கு மேல் என் கணனியில் இருந்தது. எல்லாமே எளிய மக்கள் தாங்கள் ஜீவிப்பதன் பொருட்டு செய்யும் பல்வேறு செயல்கள். அந்தப் படங்கள் ஒவ்வொன்றையும் விளக்க முற்பட்டாலே அது ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுமளவு நீளும்தான். எளிய மக்கள் செய்யும் வேலை, விற்கும் பொருள்கள், அந்த பொருட்களின் நுகர்வோர் என்பதிலிருக்கும் value chain, sector analysis, யோசித்தாலே, விளங்கிக் கொண்டாலே பிரமிப்பே மிஞ்சும். அப்படி பிரமித்து, அதைப்பற்றி சிந்தித்த ஒரு மாணவரும் இருந்திருக்கிறார் என்பது எனக்குப் பின்னாளில் தெரிய வந்தது. படித்து முடித்து விட்டு, போட்டித் தேர்வுகளுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்த மகேஷ் கார்த்திக் என்ற மாணவர், ஒரு கட்டத்தில் பல போட்டித்தேர்வு ஆயத்த மையங்களுக்கு, அதுவும் economics subject கற்பிக்கும் resource person ஆக சென்று வருவதாகச் சொன்னார். "என்னங்க நீங்கள் இளங்கலை வகுப்பில் கூட economics படித்ததில்லையே, economics பாடத்திற்கு எப்படி resource person ஆகப் போகிறீர்கள்" என்று அதிர்ச்சியடைந்து கேட்டபொழுது, "Economics படித்ததில்லைதான். ஆனால் livelihood படித்திருக்கிறேனே. அதைப் பின்னணியில் வைத்துதான் எல்லாப் பொருளாதாரக் கோட்பாடுகளையும் விளக்குகிறேன். என்னுடைய இந்த அணுகுமுறையால், பல போட்டிதேர்வு ஆயத்த மையங்கள் இதற்காகவே என்னை விரும்பி அழைக்கிறார்கள்" என்றும் சொன்னார். ஒரு கருத்தாக்கத்தை ஒவ்வொரு மாணவரும் அவர்களவில் புரிந்துகொண்டு அதை எப்படி மலரச் செய்கிறார்கள் என்பதை அறியும் போது பெருமையாக இருந்தது. நான் கற்றுத்தந்த பாடங்களில் எனக்கு நம்பிக்கை குறையும் போதெல்லாம், நம்பிக்கைகளை உயிர்பித்து என்னை நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொண்ட மாணவர்கள் பலர்.

எங்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேரா. கண்ணன் அவர்களின் மகன், விபத்திற்குள்ளாகி, நினைவு திரும்பாமால், ஏறக்குறைய 4 மாதங்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதையும், அதனால் பேரா. கண்ணன் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த மனஉளைச்சல் மற்றும் தாங்கொணா சிகிச்சைச் செலவுகளையும் குறிப்பிட்டு, முன்னாள் முதல்வர் பேரா.NNR அவர்கள், பேராசிரியரின் மகன் குணமடைய வேண்டி பிரார்த்தித்துக் கொள்ளுமாறு முதலில் MISS CD என்ற வாட்சப் குழுவில் வேண்டியிருந்தார். அந்தச் செய்தியைப் பார்த்த நண்பர் தயாளன், "சார்! ஒரு நேரம் குறிப்பிட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்தால், இன்னும் பயனுள்ளதாக இருக்குமே" என்று எடுத்துக்கொடுக்க, "அந்த நேரத்தை நீங்களே குறிப்பிட்டு, வேண்டுகோள் விடுங்கள் என்று பேரா.NNR சொல்ல, அதன்படி பார்ப்பவர்கள் எல்லாம் பிரார்த்திக்கத் தூண்டும்படியான ஒரு flyer தயாரித்து தயாளன் பகிர, அது மதுரை சமூக அறிவியல் கல்லூரி சார்ந்த முன்னாள், இந்நாள் மாணவர்களின் வாட்சப் குழுக்களில் பகிரப்பட, நூற்றுக்கணக்காண மாணவர்களை உள்ளன்போடு அப்பிரார்த்தனையில் ஈடுபட வைத்தது தயாளன் வடிவமைத்திருந்த அந்த (flyer) சுற்றறிக்கையால்தான் என்பதை என்னால் உணரமுடிந்தது.


மக்கள் பங்கேற்பைப் பற்றிய பாடத்தை நான் பலவருடங்கள் கையாண்டுள்ளேன். ஆனால் சில விசயங்களில் என் மாணவர்களின் பங்கேற்பைக் கூட பெறமுடியாது தவித்துள்ளேன். ஒரு செயலில் மக்களைப் பங்கெடுக்க வைப்பதென்பது பெருங்கலை. அது மானுட இயல்பு, மானுட எதிர்பார்ப்பு, அதை உணர்ந்து சொல்லப்படும் ஒரு செய்தி, அந்த செய்தி சொல்லப்படும் விதம் என்று பலவற்றின் கூட்டுச்சேர்க்கை. ஆனால் எங்களால் (நண்பர் NNR)  வேண்டிக்கொள்ளத்தான் முடிந்தது. பார்வையிடப்படாமல் பலராலும் கடந்து செல்லப்படும் நிலையிலிருந்த வேண்டுகோளை, அழகாக வடிவமைமைக்கப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பார்க்க வைத்து, பல நாடுகளிலிருக்கும் முன்னாள் மாணவர்களையும் அப்பிரார்த்தனையில் பங்கெடுக்க வைத்தது தயாளன் வடிவமைத்திருந்த அந்த flyer தான் என்பதை மறுக்கவியலாது. நான்கு மாதங்களாக நினைவு திரும்பாமல் துயரத்திற்குள்ளான நிகழ்ச்சி. பலரும் அறிந்திருந்தாலும் அவர்களவில் வேண்டிக்கொண்டு கடந்த நிலையில் பலரையும் ஒன்றிணைத்தது, பங்கேற்கச் செய்தது பெரிய செயல். ஒரு கருத்து எடுத்துச் சொல்லப்படும் விதத்தில் எடுத்துச் சொல்லப்பட்டால் பலரின் பங்கேற்பு சாத்தியமே என்று பங்கேற்பு முறைகளின் மீது (Participatory Methods) எனக்கிருந்த நம்பிக்கையை தயாளன் வலுப்படுத்தினார் என்றால் மிகையாகாது
இங்கிலாந்தைச் சேர்ந்த பேரா. Malcom Payne பிரபலமான சமூகப்பணிக் கல்வியாளர். சமூகப்பணியின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் புத்தகங்களை சமூகப்பணித் துறை நூலகங்களில் பார்க்கலாம். புத்தகங்களாக வெளியிடப்படுவதற்கு முன் அதன் வரைவுகள் (drafts) சிலவற்றை Scribd தளத்தில் பகிரும் வழக்கம் அவருக்கிருந்திருக்கிறது. அவரின் ஆவணங்கள் என்னுடைய ஆவணத் தயாரிப்பிற்குப் பெருமளவு உதவியிருந்தது. ஆனால் அவர் பகிர்ந்திருந்த ஆவணங்கள், எந்தவித
ஜோடனையுமற்று தட்டச்சு செய்யப்பட்டதைப் போல காணக்கிடைக்கும். பல ஆண்டுகள் அந்தத் தளத்திலிருந்தாலும் அது வாசகர்களை அவ்வளவாகக் கவரவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டின. ஆனால் அவர் கருத்துக்களைக்  கடன்வாங்கித் தயாரிகிக்கப்பட்ட எனது ஆவணங்களுக்கு அதிக வாசகர்கள் கிடைத்தது, அதனுடைய மேலான தர்த்திற்காக அல்ல. மாறாக அதை நான் சற்று
சிரமமெடுத்து வடிவமைத்திருந்ததால்தான். Presentation matters என்பார்களே அதுபோல. தயாளன் முயற்சி, Introduction to Professional Social Work  ஆவணத்தை இன்னும் பலர் பார்க்கத் தூண்டலாம். அந்த அஸ்திவாரத்தை மேலும் வலுப்படுத்த சிலரைத் தூண்டலாம்.

பணியாற்றிய காலத்தில் மட்டுமல்ல, இப்பொழுது இக்குழுவில் செயல்படுபோதும் எனக்கு பல நேரங்களில் அலுப்பு தட்டும். எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வருவதுண்டு. அஞ்சால் அலுப்பு மருந்து சாதாரண மக்களின் அலுப்பை நீக்குவதுபோல, என்னுடைய மாணவர்களின் சில செயல்கள் என் அலுப்பை நீக்கிவிடும். செய்யணும், இன்னும் அதிகமாகச் செய்யணும் என்ற உற்சாகத்தை தந்துவிடும்.என் சுயநலத்தின் பொருட்டாவது, என் சோர்வைப் போக்கிக்கொள்ளவாவது, இவர்களுடன், இவர்கள் குழுமியிருக்கும் இந்த MISS CD வாட்சப் குழுவுடன் தொடர்ந்து உரையாடவேண்டும். ஏனெனில் எனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து என் மாணவர்களிடமே இருக்கிறது.

11/12/19

ஒரு சொம்புத் தண்ணீர்.....ஒரு சிறு பொறி...போதும்

MISS CD மாணவர்களின் கள அனுபவங்களை ஆவணப்படுத்த, அம்மாணவர்களடங்கிய வாட்சப் குழுவில், ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட போது, 2008,2009,2010 ஆகிய ஆண்டுகளில், முதலாம் பருவ மாணவர்களின் ஒரு கள (Slum Visit) அனுபவ அறிக்கைகள் கணனிமயமாக்கப்பட்டு, அதுவே பின் இணையமயமாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதால், சம்பந்தப்பட்ட மாணவரும், அவருடைய களப்பணி மேற்பார்வையாளர் மட்டுமே அதுகாறும் பார்த்திருந்த அந்த அறிக்கைகளை (ஆவணங்களை), ஏறக்குறைய 35,000 பேர்கள் பார்த்தும், 650 பேர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகக் (Slideshare Analytics) குறித்து, ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருந்தேன். மாணவர்கள் அப்பொழுது சமர்ப்பித்திருந்த, இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்த ppt ஆவணங்களின் link ஐயும் பகிர்ந்திருந்தேன்.
அதைப் பார்த்த நமது நண்பர் தயாளன்,  பத்து வருடங்களுக்கு முன்னர் பதிவேற்றப்பட்ட அந்த ppt கள், அதிலிருக்கும் படங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து, அதை மதுரையின் காலப்பெட்டகமாக உணர்வதாகக் குறிப்பிட்டார். மேலும், அப்பொழுது powerpoint மென்பொருளில் இருந்த வசதிகளை (tools) விட, தற்போது அதிக வசதிகள் தரப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த ppt களுக்கு விளக்கம் (script) எழுதி, குரல் இணைத்து, காணொளியாக்கினால் அது இன்னும் பலரைச் சென்றடையுமென்றும், அதைத் தானே செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். ஒரு சின்ன பொறி. அவரை மேலும் சிந்திக்க வைத்து, செயல்படத் தூண்டியிருக்கிறது.

அதே போன்று, சென்ற வருடம் CD மாணவர்களின் கூடுகையின் போது, நண்பர் முத்துசாமி IPS அவர்கள், அவருடைய ஜூனியரான பெருமாளைப் பற்றி விசாரிக்க, பெருமாள் அகால மரணமடைந்த செய்தியைத் தெரிவித்தோம். பெருமாள் அனைவராலும் நினைவுகூற இயலாத, எளிமையான, படித்த காலத்தில் அடையாளமற்றவராக இருந்தவர்தான்.  ஆனால் எங்களில் சிலருக்கு, முத்துசாமி உட்பட, அவர் பிரியமானவர். கூடுகையின் போது நடந்த கலந்துரையாடல்களில், பணகுடி எனும் நண்பர், Prime Minister Jeevan Jothi Yojana, (PMJJY - 330 ரூபாய்), Prime Minister Suraksha Bima Yojana (PMSBJ 13 ரூபாய்) காப்பீடு திட்டங்களை CD மாணவர்கள் தங்கள் பணிகளில் எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்று ஒரு பொறியைத் தட்டிவிட்டார். ஒரு சொம்புத் தண்ணீரை ஊற்றினார். அது பெருமாள் போன்ற நண்பர்களை இந்தக் காப்பீடு திட்டத்தில் சேர்த்திருந்தால், அவரின் குடுபத்தாருக்கு 2 இலட்சம் ரூபாய் உதவி கிடைத்திருக்குமே என்று எண்ணத்தை முத்துசாமி மனதில் விதைத்தது. அதுவே நண்பர் முத்துசாமி அவர்களைத் தன் சரகத்தில் பணியாற்றிய ஏறக்குறைய 1200 காவலர்களுக்கு, அந்த இரண்டு காப்பீடுகளையும் உறுதி செய்ய வைத்து, தேசிய முன்னுதாரம் படைக்கக் காரணமாயிருந்தது. அதைத் தொடர்ந்து Freedom Fund என்ற சர்வதேச தொண்டுநிறுவனத்தில் பணியாற்றும் நண்பர் பாலமுருகன், அவர்கள் பணியாற்றும் 400 கிராமாங்களில், 50 ஆயிரம் பேர்களுக்கு காப்பீடு உறுதி செய்யக் குறிக்கோள் நிச்சயித்து, இதுவரை 20000 பேர்களுக்கு அந்தக் காப்பீடு வசதிகளை கொண்டுசேர்க்க உத்வேகம் அளித்திருக்கிறது. கூடுகையின் போது காப்பீடு திட்டங்களைப் பற்றி விதைக்கப்பட்ட பொறி, CD மாணவர்களைப் பற்றிக்கொண்டு, ஆயுஷ்மான் பாரத், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் என்று பலரையும் சிந்திக்க வைத்து செயல்படத் தூண்டி, பலருக்கும் சமூகப் பாதுகாப்பு கவசத்தைத் தந்தது மட்டுமல்ல, அது பல நண்பர்களின் தொடர் செயல்பாடாகவும்  மாறியிருக்கிறது.

Dr. Narayana Raja - Dayalan 
இன்று (12.11.2019) நமது நண்பர், முன்னாள் முதல்வர் நாராயண ராஜா அவர்கள், பேரா. கண்ணன் அவர்களின் மகனுக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றியும், கடந்த 125 நாட்களாக நினைவற்று இருப்பதைப் பற்றியும்  முதலில் CD குழுவில் பகிர்ந்து, கண்ணன் சாரின் மகன் நலமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று மாணவார்களை வேண்டிக்கொண்ட செய்தியைப் பார்த்து, அவரிடம் நான் தொடர்பு கொள்ள, எனக்கு முன்னே அவரைத் தொடர்பு கொண்ட தயாளன் அவர்கள், ஒரு நேரம் குறித்து நமது வாட்சப் குழுவில் உள்ள நண்பர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். நேரம் குறிப்பிட்டு தயாளனே அதை அறிவித்தால், அந்த நேரத்தில் எல்லோரும் பிரார்த்திக்கலாம் என்று குழு முடிவெடுத்தது. பிரார்த்தனை முடியும் மட்டும், பேரா. கண்ணன் அவர்களின் மகன்
நலமடைய வேண்டி பகிரும் செய்திகளைத் தவிர வேறு செய்திகளைப் பகிரவேண்டாம் என்று குழுவில் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். தயாளன் அதற்கான நேரத்தை பின்னர் அறிவித்தார். 
நண்பர் தயாளன் அவர்களிடமிருந்து உருவான ஒரு சிறு பொறி, மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்ந்த அனைத்துக்குழுக்களிலும் பகிரப்பட, பல நாடுகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான நமது மாணவர்களை, விக்னேஸ்வரன் நலமடைய பிரார்த்திக்க ஒன்றிணைத்திருக்கிறது. இந்த நல்ல வாய்ப்பை உருவாக்கிய நண்பர்கள் நாராயண ராஜா, தயாளன் அவர்களை தலை வணங்கி பாராட்டுகிறேன். இந்தக்கோணத்தில் சிந்திக்கும் மாணவர்களை CD குழு பெற்றிருப்பது குறித்து பெருமை. கூட்டுப் பிரார்த்தனைக்கு வழிவகுத்ததோடு அல்லாமல், Faith healing என்ற சிகிச்சை முறையை சமூகப்பணியாளர்கள் அங்கீகரித்து, அது  NASW நிறுவனம் வெளியிட்ட சமூகப்பணியாளர்களின் அதிகாரபூர்வமான The Social Work Dictionary  அகராதியில் இந்தக் கருத்து இணைக்கப்பட்டிருக்கிறது. அதை நான் மொழிபெயர்த்திருந்த சமூகப்பணி பொருளாகராதியின், android app குறுஞ்செயலியின் வாட்சப் பகிர்வுக்காக வடிவமைத்திருந்த சொல்லறிவோம் பொருளறிவோம் link ஐயும் தயாளன் பகிர்ந்திருந்தார்.
https://bit.ly/2QnQwAs

நீங்கள் தளும்பத் தயாராக நிறைந்துள்ளீர்கள். ஒரு சொம்புத் தண்ணீர் போதும் நீங்கள் சுற்றிலும் வழிந்தோடி, வறண்டு போயிருக்கும் எளிய மக்களின் வாழ்வு மலரும்படி அவர்களின் மனதை ஈரமாக்குவீர்கள் என்று CD மாணவர்களிடம் நான் சொல்வதுண்டு. கூடுகையின் போது ஊற்றப்பட்ட  ஒரு சொம்புத் தண்ணீர் முத்துசாமி, பாலமுருகன் போன்றோரை வழிந்தோட வைத்தது, இன்று பலரின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றியிருக்கிறது.
.
இன்று நண்பர் நாராயண ராஜா மற்றும் தயாளன் உருவாக்கிய சிறு பொறி நம் எல்லோரையும் விக்னேஸ்வரனுக்காக பிராத்தனை செய்ய வைத்திருக்கிறது. 

நம்முடைய நம்பிக்கையால் பேரா. கண்ணன் மகன் நினைவு திரும்பி எழட்டும். அவர் எழுந்து அவரிடமிருந்து இது மாதிரியான ஆயிரம் பொறிகள் உருவாகட்டும்.