7/29/11

மன்னார் வளைகுடா தந்த ஞானம்- IV

இலங்கைத் தமிழர்கள் பால் எனக்கு உயர்வான எண்ணமே இருந்து வந்திருக்கின்றது. அது எதனாலென்று எனக்கும் புரியவில்லை? இலங்கை வானொலி தனது வர்த்தக ஒலிபரப்பால் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருந்தபோது, அதைக் கேட்டு வளர்ந்ததாலா? கல்லூரியில் படித்த போது இலங்கையிலிருந்து கிடைத்த பேனா நண்பர்களின் நல்ல தமிழ்க் கடிதங்களா? ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து கடத்தப்பட்டு வந்த பொருட்களை நாம் விரும்பி உபயோகித்ததாலா? பின்னாளில் மன்னார் வளைகுடாப் பகுதி மீனவர்கள் “இலங்கை மீனவர்கள் உபயோகித்த படகுகள் மற்றும் வலைகள் தரமுள்ளதாக இருக்கும் என்று சொன்னதாலா? மொழியின் பொருட்டும், இனத்தின் பொருட்டும் சொல்லனாத் துயரங்களை தாங்கி நின்ற அவர்களின் நெஞ்சுரத்தினாலா? .
நாம் (இந்தியா) பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற காலகட்டங்களில், இலங்கை தனது உள்நாட்டுப் பிரச்சினைகளால் தேக்கமடைந்தது. உள்நாட்டுப் போரினால் உலுக்கியெடுக்கப்பட்டாலும் கல்வி, சுகாதாரம் போன்ற அளவீடுகளில் நம்மை விட இன்றளவும் சிறப்பாகச் செயல்படுகின்றார்கள். உயர்ந்தே இருக்கின்றார்கள். என்னதான் போரிட்டுக் கொண்டாலும் அந்த தேசத்திற்கென்று ஒரு பொதுப் பண்பு இருக்கின்றது. அதை அவர்கள் தங்கள் குடியிருப்புகளை சுத்தமாக வைத்திருக்கும் பாங்கிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். கொழும்பு நகரமும், என் பஸ் பயணத்தின் போது பார்த்த நகரங்களின் சாலைகளும் தூய்மையாக இருக்கின்றது. பேருந்துப் பயணத்தின் போது உணவுக்காக நிறுத்துமிடங்களிலுள்ள உணவகங்களின் பொதுக் கழிப்பிடங்களும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலையில் நம்மவர் நடத்தும் மோட்டல்களைப்போல் பயணிகளைக் கொள்ளையடிப்பதில்லை.
கொழும்பு நகரத்தில் “பெட்ட” என்ற தெருவியாபாரிகள் அதிகம் இருக்கும் இடத்திற்கும் சென்றிருந்தேன். அங்கேயிருக்கும் இரு சின்ன காய்கறிமார்கெட்டில் ஏறக்குறைய 200 வியாபாரிகள் 4*3 என்ற அளவில் கடை பரப்பியிருந்தார்கள். 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட சுற்றுச்சுவர் இல்லாத தெருவோரச் சந்தை, குப்பை கூளங்களில்லாமல் பளிச்சென்றிருந்தது. பெட்ட முழுமையும் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்தாலும் சுத்தமாகக் காட்சியளிக்கின்றது. சுற்றுச் சூழலை நாம் சரியாகப் பராமரிக்க முடியாததற்கு, இன்னும் எத்தனை காலம் மக்கள் தொகைப் பெருக்கததை காரணம் காட்டுவோமோ தெரியவில்லை?.
இலங்கைத் தமிழர்களுக்கு இனவுணர்வு இருக்குமளவு ஒரு தேசியக் குணமும் இருக்கின்றது. அவர்கள் நம்மைவிட எல்லாவகைகளிலும் உயர்ந்திருந்ததால்தான் அவர்கள் நீதியின் பொருட்டு நெடிய இன்னல்களைத் தாங்கிக் கொள்ள முடிந்திருக்கின்றது. இலங்கைத் தமிழர்களின் உயர்வான சமூக கலாச்சாரப் பின்னனிதான் அவர்களுக்கு உன்னதமான தலைவர்களைக் கொடுத்திருக்கின்றது.
நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல ஜாதிக் கலவரங்களின் போது தமிழ் நாட்டில் எதையும் இழக்காதவர்கள் எல்லாவற்றையும் இழந்தtது மாதிரி காட்டியதும், எல்லாவற்றையும் இழந்த இலங்கைத் தமிழர்கள் அதைப்பற்றி பெரிதுபடுத்தாமலிருப்பதும் இரு வேறுவிதமான பண்பாட்டுத் தளங்கள் இருப்பதைக் காட்டுகிறது. “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவனுக்கொரு குணமுண்டு” என்பது நம்மை விட இலங்கைத் தமிழருக்கே பொருந்தும். இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றி நான் அதிகம் வாசித்தது கிடையாது. அதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தவனும் கிடையாது. எனக்குக் கிடைத்த அனுபவமெல்லாம் மதுரையில் இலங்கைத் தமிழகதிகள் சிலருடன் பேசியதும், இலங்கையில் சில சாதாரண தமிழ்க் குடும்பங்களோடு உரையாடியதிலிருந்தும் புரிய வந்ததுதான்.
தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழகதிகளை விட பிற நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நாம் காட்டிவரும் சில சலுகைகளை ஒப்பிடும் போது வெளிநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் அதிகம். ஈழததமிழகதிகளின் முகாமை நாம் எப்படி வைத்திருக்கின்றோமென்பதை நேரில் பார்த்தால்தான் புரியும். இலங்கைப் பிரச்சினையை நம்முடைய இனமானக் காவலர்கள் சொந்த நலனுக்காக அரசியலாக்கிவிட்டர்கள்.
மதுரையில் இலங்கைத் தமிழகதிகளுக்காக முதலில் பெரியார் நகர் ஒதுக்கப்பட்டது. பெரியார் நகர் உலகவங்கி உதவியுடன் ஆசியாவின் மிகப் பெரிய குடிசை மாற்று இடமாற்றச் சேவை (resettlement project). ஆனால் தோற்பதகென்றே திட்டமிடப்பட்டது போலும். It is a biggest policy failure. வைகை நதிக்கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடிசைவாசிகளுக்கென்று கட்டப்பட்ட பெரிய குடியிருப்பு. அதில் யாரும் குடியேற முன்வராததால், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கென்று ஒதுக்கப்பட, தரமற்ற முறையில் கட்டப்பட்ட அந்த வீடுகளும் சிதிலமடைய அவர்களை ஆனையூர் முகாமிற்கு மாற்றினார்கள்.
ஆனையூர் குடியிருப்பு ஹவுசிங் போர்டின் தோல்வியடைந்த திட்டம். இலங்கைத் தமிழர்கள் பங்களாதேஷ்காரர்கள் மாதிரி சட்டவிரோதமான குடியேற்றக்காரர்களல்ல. வறுமையின் நிமித்தமோ, இந்தியாவில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகையின் நிமித்தமோ இங்கு வரவில்லை, வேறு நாடுகளுக்குப் போகமுடியாத அவசரம். வேறு நாடுகளுக்குச் செல்லும்போது அந்தக் கலாச்சாரத்தோடு தங்களால் ஒன்றிட முடியாது என்ற தயக்கம், குடும்பமாக, ஒட்டுமொத்தமாக வெளியேறமுடியாது என்ற நிர்பந்தத்தாலுமே தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழ்மொழி பேசுபவதாலும், தங்கள் தாய்மொழி வாயிலாக அவர்களுக்கு பரிச்சயமான வழிபாட்டுத்தலங்கள், வரலாற்று இடங்கள், தலைவர்கள் இங்கே இருப்பதாலும் பெரிய அளவில் கலாச்சார அதிர்ச்சியிலிருந்து தப்பிக்கின்றார்கள். அதுவே அவர்களுக்கு நிம்மதியைத் தருகின்றது.
ஆனையூர் அகதிகள் முகாமில் பெரியவர்கள் புலம்புவது மாதிரி, “கற்ற கல்விக்கும், அவர்கள் பின்பற்றும் பண்பாட்டிற்கும் எங்கட நாட்டில் தொடர்பிருக்கும், ஒரு பட்டதாரியென்றால், அதற்குரிய திறமையுடனும், பண்புடனுமிருப்பான்., எங்க பிள்ளைகளெல்லாம் இங்கு வந்து படித்து விட்டார்கள். பட்டம் பெற்று விட்டார்கள், ஆனால் எங்களின் உண்மையான பண்பை இழந்துவிட்டார்கள்”.. இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ள விரைவான வழி.. அவர்களின் மரண அறிவித்தல்கள்தாம். அவரவர் வசதிற்கு ஏற்றபடி, ஒருவரின் மரணத்தை அவரின் வம்சாவழி விளக்கத்தோடு குறிப்பேடாக அச்சிட்டுக் கொடுக்கும் அவர்களின் பழக்கம் போற்றத்தக்கது.
இந்திய அமைதிப்படை இலங்கையில் தமிழ்ப்பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதால்தான், ராஜீவ்காந்தி படுகொலை என்ற வரலாற்றுத் துயரம் ஏற்படக் காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது. (விடுதலைப் புலிகளை நேசிக்காத இலங்கைத் தமிழர்கள் கூட விடுதலைப் புலிகளின் ஒழுக்கத்தை சிலாகித்தே பேசுகிறார்கள்) இராணுவம் ஒரு பகுதியில் முகாமிட்டிருக்கும்போது சில அத்துமீறல்கள் அரங்கேறும் என்பது உலகெங்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இந்திய அமைதிப்படை அத்துமீறுவதற்காகவே அனுப்பப்பட்டதுபோன்று தெரிகின்றது. இலங்கைத் தமிழர்களின் ஒழுக்க உணர்வுதான் அவர்களை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கவேண்டும்.
35 வயதடைந்த, தற்போது கொழும்பில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தமிழ்ப்பெண்மணியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. நம்மை பிடிக்காத பகைவர்கள் கூட நம்மிடம் பச்சாதபம் காட்டுவார்கள். ஆனால் அந்தத் தமிழ்ப்பெண், இந்திய அமைதிப்படை வீரர்களால் அவருடைய பெண்ணுறுப்பில் அறுவைச் சிகிச்சை செய்யுமளவிற்கு கூட்டாக துவம்சம் செய்யப்பட்டிருக்கின்றார். அதனால் அவரின் குடும்பம் அடைந்த இன்னல்கள்...இப்படி அவர்களின் சோகக் கதைகள் சொல்லிமாளது.
இந்திய இராணுவத்தின் உதவியில்லாமல், சிங்கள இராணுவத்தினரால் விடுதலைப்புலிகளை அழித்திருக்க முடியாது என்ற கருத்தை பலர் சொல்ல படித்திருக்கின்றேன். ஆனால் கடைசிப் போரின் போது முல்லைத்தீவு பக்கமிருந்து தப்பித்து வந்த 75 வயது முதியவர் மிகவும் வெகுளியாக “தாடிக்காரன் (சீக்கியர்) செத்துக் கிடந்ததைப் பார்த்தேன். தாடிக்காரனுக்கு அவ்விடம் என்ன வேலை? என்று என்னிடம் கேட்டபோது, நாம் கேள்விப்பட்டவற்றை நம்பத்தான் வேண்டியிருக்கின்றது.
இதற்கெல்லாம் சொல்லப்படும் காரணங்கள் நாம் செய்யாவிட்டால் சீனாக்காரனோ, பாகிஸ்தான்காரனோ செய்திருப்பார்கள் என்பதுதான். அவர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவே இலங்கை அரசுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதாக நியாயப்படுத்தப்படுகின்றது. இந்த இராஜதந்திர அணுகுமுறையால் இந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழர்களூக்கு உதவி கிடைக்கும் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது புரியவில்லை. இந்தியா என்பதில் நானும் நீங்களும் கூட அடக்கம்தான். ஏனெனில் இலங்கையில் நம்மை அறிமுகப்படுத்தும்போது, “இவர் இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றார்” என்றே அறிமுகப்படுத்துகிறார்கள்.
இலங்கைத் தமிழர்கள் நம்மைப் (தமிழ்நாட்டை) பல விசயங்களில் சார்ந்திருப்பது உண்மைதான். ஆறுகோடிக்கும் அதிகமான மக்களை, நுகர்வோரைக் கொண்ட பெரும் சந்தையை வைத்துக் கொண்டு நம்மால் பலவற்றை செய்யமுடியும். சினிமா தயாரிப்பு, புத்தகப் பதிப்பு, மதம் மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்திய பொருளுற்பத்தி முறைகளை நம்மால் செய்யமுடியும். அதை இலங்கைத் தமிழர்கள் அப்படியே உபயோகிப்பதுதான் புத்திசாலித்தனமான பொருளியல் அணுகுமுறை. அதற்காக அவர்கள் நம்மைச் சார்ந்திருப்பதாக் கருதினால், அவர்களைவிட நாம் உயர்வானவர்களாக் கருதினால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் ஒரு மாவட்ட ஜனத் தொகையைவிட குறைவான எண்ணிக்கையுள்ள இலங்கைத் தமிழர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரச் செறிவிற்கும் செய்த பணி மகத்தானது. அதுவே அவர்கள் நம்மைவிட ஆற்றலில் உயர்ந்தவர்கள் என்பதற்கான அத்தாட்சி.
இலங்கையின் மீதும், இலங்கைத் தமிழர்களின் மீதும் எனக்கு இயற்கையாக ஏற்பட்ட அபிமானம், என்னுடைய இலங்கைப் பயணத்தால் இன்னும் அதிகரிதிருக்கின்றது. மீண்டும், மீண்டும் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் பயண ஆர்வத்தால் ஏற்பட்டதல்ல. அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருப்பதாக எனக்குப் படுகின்றது.

1 comment:

SIV said...

ஐயா, அங்கே நிகழும் சிங்களவர் குடியேற்றம், வன்கொடுமைகள் பற்றி ஏதும் தகவல் இல்லையா?
இலங்கையை பற்றி நீங்கள் கூறுபவையெல்லாம் ரொம்ப பாஸிடிவாக இருக்கிறதே?