7/29/11

மன்னார் வளைகுடா தந்த ஞானம் - V

கீழமுந்தல், இராமநாதபுர மாவட்டம், மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள ஒரு சிறிய கடலோர மீன்பிடி கிராமம். ஒரு பங்கேற்புப் (Participatory Appraisal) பயிற்சியின் போது அங்கே ஆரம்பக் கல்வியின் வரலாற்றைப் பற்றி ஒரு கலந்துரையாடலில் (Focus group) ஈடுபட்டிருந்தோம்.

இன்று 200 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்தாலும், 75 குடும்பங்கள் வாழ்ந்த, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே அரசு அங்கு ஒரு ஆரம்பப் பள்ளியை ஏற்படுத்தி, ஆசிரியர் ஒருவரையும் நியமித்தது. கீழமுந்தல் சாயல்குடியில் இருந்து 15 கிலோமீட்டர், வாலிநோக்கத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சாயல்குடிக்கும் வாலிநோக்கத்திற்கும் சரியான போக்குவரத்து இல்லாதிருந்த போது கீழமுந்தலுக்கு மட்டும் எப்படிப் போக்குவரத்து இருந்திருக்கும்?. அங்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அங்குதான் வீடெடுத்துத் தங்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் எல்லா வீடுகளும் கூரை வீடுகள்தாம். சுவர்கள் கூட மண் சுவர்களல்ல. எல்லாம் தென்னந்தட்டியினால் மறைக்கப்பட்டது. மின்சாரம் கிடையாது. நிலத்தடி நீர் இப்போது போல் அல்லாமல் உபயோகிக்கும் அளவுக்கு இருந்தது பெரிய ஆறுதல்.

கீழமுந்தலலில் தங்கிப் பணியாற்ற எந்த ஆசிரியர் தான் முன்வருவார்?. வரும் ஆசிரியர்களும் ஓரிரு மாதங்களில் யாரையாவது பிடித்து மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். இல்லை வார விடுமுறைகளுக்கு ஊருக்குச் செல்லும்போது, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர்ச்சியாக விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். அரசு அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒருகாலத்தில் இராமநாதபுரம் மாவட்டமே தண்டனைக்குரிய இடமாக இருந்தபோது, கீழமுந்தல் போன்ற இடங்களில் எந்த செலவாக்குமில்லாத அதிகாரி, ஆசிரிய அனாதைகளைத் தான் நியமிப்பார்கள். கீழமுந்தல் அரசுப்பணியை பொறுத்தமட்டில் கழுமரம்.

கீழமுந்தலிலே தங்கி அர்ப்பணிப்போடு பணியாற்றிய சில ஆசிரியர்களை அவர்கள் நன்றியுடன் இப்பொழுதும் நினைவு கூறுகிறார்கள். எல்லா ஆசிரியர்களாலும் அப்படி இருக்க முடியாதே?. தொலைதூர இடங்களிலிருந்து ஆசிரியர்களைப் போட்டால் பிரச்சனைகள் தொடரும் என்பதைப் புரிந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், அருகாமை கிராமங்களில் ஆசிரியப் பயிற்சி முடித்தவர்களைப் பணியிலமர்த்த ஆரம்பித்தார்கள். நடந்தோ சைக்கிளிலோ வந்த இந்த ஆசிரியர்களின் பணிக்குப்பின் பள்ளி ஓரளவு தொடர்ச்சியாகச் செயல்பட ஆரம்பித்தது.

போக்குவரத்துவசதி இல்லாததால் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு சாத்தியமில்லை. 10 மணிக்கு பள்ளி திறப்பது. 4 மணிக்கு பள்ளி மூடுவது என்ற வரைமுறை ஏதுமில்லை. அருகாமை கிராமங்களில் ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்களைத் தொடர்ச்சியாக பணிபுரிய அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. அவர்களைப் பழி வாங்கும் நோக்கோடோ, இல்லை வேறு ஆசிரியர்களைப் பழிவாங்கும் நோக்கோடோ கீழமுந்தலுக்கு பணி மாறுதல் செய்துவிடுவார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன் வண்டித்தடமாக இருந்த பாதை, பிறகு சாலையாக மாற, சாயல்குடிக்கு சைக்கிளில் சென்று வர முடிந்தது. சில ஆசிரியர்கள், சாயல்குடியில் தங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து சென்றார்கள். சாயல்குடியிலிருந்து சைக்கிளை மிதிக்கவே சக்தியைச் செலவழித்துவிட்டு, கீழமுந்தல் பள்ளிக்கு வந்ததும் தூங்கிவிடுவார்கள். பள்ளிக்கூடம் “ஏதோ” செயல்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

பிறகு பஸ் வசதி வந்தது. தினப்படி மூணு தடவை. சாயல்குடியிலிருந்து வாலிநோக்கத்திற்குச் செல்லும் பேருந்து காலை 10½ மணிக்கு வரும். மதியம் 12½ மணிக்கு வரும். மாலை 3½ மணிக்கு திரும்பும். சாயல்குடியில் தங்கியிருந்த ஆசிரியர்கள் 10½ மணிக்கு வருவார்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வகுப்பெடுக்க 11 மணி ஆகிவிடும்.. மாலை மூன்று மணிக்கு பள்ளியை மூடிவிட்டு 3½ மணி பஸ்சுக்கு கிளம்பிவிடுவார்கள்.

ஆசிரியர்களிடம் முன் தகவல் சொல்லாமல் எந்த மேலதிகாரியும் Inspection க்கு வரமுடியாது என்பது ஆசிரியர்களுக்கு ஆறுதல். ஆசிரியர்களைக் குறை சொல்லமுடியாது. 10½ மணிக்கு முன்னால் அவர்களால் வரமுடியாது. 3½ மணி பஸ்ஸை விட்டால் அவர்களால் போகவும் முடியாது. “அரசாங்கம் பள்ளியைக் கொடுத்தது. ஆசிரியர்களைக் கொடுத்தது. எங்க பிள்ளைகளும் படித்தார்கள். ஆனால் எங்க பிள்ளைகளின் படிப்பென்பது ரெம்பக் காலம் நாங்க கோவணத்த அவிழ்த்த நேரத்தின்படி (ஜெனனம்) தான் அமைந்தது”.

பஸ் போக்குவரத்து அதிகரிக்க அதிகரிக்க 9.30 மணிக்கு பஸ். வந்தது. 10 மணிக்குப் பள்ளி திறந்தார்கள். 5 மணிக்கு திரும்பச் செல்ல பஸ். 4 மணிக்கு பள்ளியை சாகவாசகமாக மூடிவிட்டு பஸ் நிறுத்தத்தில் ஆசிரியர்கள் எங்களோடு உட்கார்ந்து கொண்டு ஊர் விஷயங்கள் நாட்டு நடப்புகள் பேசினார்கள். அன்யோன்யம் உருவானது.

பிறகு மின்சாரமும் வந்தது. மின்சாரம் வந்ததால் பிள்ளைகள் இரவு நேரத்தில் படிக்க முடிந்தது. ஊர்க்கடைகளில் பேப்பர், பேனா, பென்சில், இரப்பர், நோட்டுகள் விற்க ஆரம்பித்தார்கள்.

கல்விக்கு ஏதுவான சமூகச் சூழ்நிலைகள் வேண்டும். கட்டிடங்களாலும் ஆசிரியர்களாலும் ஓரளவு கல்வியைத் தரமுடியும். மின்சாரம் கற்பதற்கான காலத்தைக் கூட்டும். போக்குவரத்து வசதிகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பை விரிவுபடுத்தும். அது சில செளகாரியங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். இது எதுவுமே இல்லாமல் படிபடி என்று சொல்வதும், து... ஏகலைவன் படிக்கவில்லையா? தெருவிளக்கில் படித்து முன்னேற வில்லையா? மேதையாகவில்லையா? அப்துல் கலாம் படிக்கவில்லையா? என்று முன்னுதாரணம் காட்டுவதெல்லாம் விதண்டாவாதம். எதுவுமிலாமல் படிக்கலாம்தான். முடியாது என்றில்லை. . அதெல்லாம் கீழமுந்தல்காரர் சொன்ன மாதிரி நாள் நேரம், நட்சத்திரம் பார்த்து கோமனத்தை அவிழ்த்திருந்தால் மட்டுமே, பெற்றோர்கள் படுக்கையில் கூடியிருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

அனைவருக்கும் கல்வி என்பது ஒரு ஏதுவான சூழ்நிலையிலேதான் (Enabling Environment) சாத்தியப்படும். கல்வி பற்றி அரசின் சரியான கொள்கை முடிவுகள், அரசு ஆசிரியர்களைக் கையாளும் முறை (பணிமாறுதல் உட்பட), ஆர்வமான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அக்கறை, கட்டமைப்பு வசதிகள் குழந்தைகளுக்கான குறைந்தபட்ச மருத்துவ வசதிகள் எல்லாமும் வேண்டும். எதுவுமில்லாமல் சாதிப்பதென்பது ஒரு குழந்தையின் முன்வினைப்பயனால் மட்டுமே சாத்தியமாகலாம்.

ஒரு குழந்தையின் கற்றலாற்றல் என்பது அவர் பெற்றோர் படுக்கையில் கூடும் நேரத்தைப் பொறுத்து அமைவதில்லை. அது ஒரு Enabling Environment (ஏதுவான சூழ்நிலையினால்) வருவது. என்று கீழமுந்தல்காரர்கள் எங்கள் மூளையில் ஞான விளக்கேற்றினர்கள்

2 comments:

VIJAYA said...

Great insight .......
A Community Development perspective .... always you are proving yourself and your passion towards your profesion.. feel happy to be always under ur shade.
regards

Vijaya

S.Rengasamy said...

Thanks for your encouraging comments