4/9/13

பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் Poomani as a Teacher and Anjaadi as a Text Book


1
என்னுடைய வாசிப்பனுபவம் மிகக் குறுகியது. கல்லூரி நாட்களில் ஜெயகாந்தனை மிகவும் விரும்பி வாசித்துள்ளேன். மதுரையில் அவர் பேசுகின்றாரென்றால், அந்தக்கூட்டங்களுக்கு தவறாமல் சென்றுவிடுவேன். என்னுடைய சமூகப் பார்வையை கட்டமைத்ததில் அவருக்குப் பங்குண்டு. பின் கோபல்ல கிராமம் படித்துவிட்டு, இடைசெவலுக்குச் சென்று, கி.ரா.வை ஆசைதீர தரிசித்துவிட்டு வந்தேன். கடந்த ஆண்டு நான் விரும்பி வாசித்த புத்தகம் காவல்கோட்டம். நிறைய வாசிக்க வாய்ப்பிருந்த ஆசிரியப் பணியிலிருந்தாலும், எனக்குத் தேவையானதை மட்டும் வாசிக்கும் கஞ்சத்தனமிக்கவனாகவே நான் இருந்துவந்துள்ளேன். ஆங்கிலத்தில் என் பாட சம்பந்தப்பட்ட நூல்களைத் தவிர, பிறவற்றில் என் வாசிப்பனுபவம் மிகக் குறுகியது. தியானப் பயிற்சியும் களப்பணியுமே எனக்கு பலவற்றைப் புரியவைத்தது. மகரிஷி மகேஷ் யோகி, ஓஷோ, ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் எழுத்துக்களை ஆங்கிலத்திலே வாசித்துள்ளேன். தியானப் பயிற்சியால் இவர்களை நான் புரிந்துகொண்டதற்கும், எனக்கு அறிமுகமான சிலர் புரிந்து கொண்டதற்கும் வித்தியாசங்கள் இருந்ததை உணர்ந்துள்ளேன். ஜெயமோகன் அவர்களை நான் விரிவாகப் படிக்காவிட்டாலும், படித்த அளவு அவரை என்னால் உள்வாங்கமுடிந்தது. அவரைப் உள்வாங்க தியானப் பயிற்சி உதவும். வாசிப்பது கொஞ்சமாக இருந்தாலும், அது எனக்குள் மாற்றத்தை உண்டாக்குமளவிற்கு நெகிழ்ச்சியானவனாக இருந்து வந்துள்ளேன் என்பதுதான் உண்மை.
பூமணியின் எழுத்துக்களை அவ்வளவாக நான் படித்ததில்லை. அவருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயமோகன் அவர்கள் தனது இணைய தளத்தில் அவரைப்பற்றி எழுதியபோதுதான், நான் பூமணியின் “வெக்கை” படித்த நினைவு வந்தது. வெக்கை என்னை ஒரு மாதிரியாக படுத்தியது என்று கூட சொல்லாலாம். அந்த படுத்தலை உதறிவிடாமல், என்னுள் கரைத்துக்கொண்டேன். வெக்கையின் கதைக்களம் எனக்கு மறந்துவிட்டதென்றாலும், கி.ரா.வைப் போன்று பூமணியையும் எனக்கு நெருக்கமானவாராக உணர்ந்தேன். ஜெயமோகன் எழுத்துக்கள் பூமணி மீதான அபிமானத்தை என்னுள் வளர்த்துவிட்டன. இந்தநிலையில் தான் என் மாணவர் வினோத் “அஞ்ஞாடி” வாங்கித்தந்து என்னை படிக்கவைத்தார்.
பூமணியை அதிகம் வாசிக்காமலயே, அவர் மீதிருந்த அபிமானத்தால்தான், அஞ்ஞாடி எனக்கு கனமற்றதாகத் தெரிந்தது. வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம் என்று சிலர் எழுதுவதைப் படித்திருக்கின்றேன். அதை “அஞ்ஞாடி” எனக்கு நிறைவாகத் தந்தது பூமணிக்கு நன்றி.
ஒரு எழுத்தாளன் தன் ஆளுமையை எழுத்தில் வெளிப்படுத்துகின்றான். அஞ்ஞாடி முழுவதும் எந்தவித ஆர்ப்பாட்டமோ, அலட்டலோ இல்லாமல் பூமணி அவ்வளவு இயல்பாக, தான் பார்த்த, தான் வாழ்ந்த சமூகத்தின் மீது வாஞ்சையுடன் வெளிப்படுகின்றார். அது வாழ்வின் மீது தீராக் காதல் கொண்டவர்களாலேயே முடியும். அஞ்ஞாடி பக்குவமடைந்த மனதின் வெளிப்பாடு. அது பக்குவமடைந்த மனதின் வெளிப்பாடு மட்டுமல்ல, படிப்பவர்களையும் பக்குவப்படுத்த எழுதப்பட்ட பாடப் புத்தகம். பாடப் புத்தகங்களில் எழுத்தாளனின் ஆளுமை வெளிப்படக்கூடாதுதான். அதனால்தான், தான் சித்தரிக்கும் கதாபாத்திரங்களின் ஆளுமைகளிலிருந்தே நமக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சூட்சுமத்தை பூமணி கையாண்டுள்ளார்.
2
கழுகுமலை, சிவகாசிக் கலவரங்களின் போது முக்கிய கதாபாத்திரமான ஆண்டி உயிரோடிருப்பதாகக் காட்டப்படுவதால், அஞ்ஞாடி ஏறக்குறைய 150 வருடகால வாழ்வியலைப் படம்பிடித்துக் (ஒருசில சம்பவங்கள் தவிர) காட்டுவதாகக் கொள்ளலாம். இந்த 150 வருடத்தில்தான் எத்தனை மாற்றங்கள். மனிதர்களைப் பலிவாங்கிய வலிமிகுந்த போராட்டங்கள். சுதேசி ஆள்வோர்களும் சரி, விதேசி ஆள்வோர்களும் சரி மாற்றத்திற்கான நியாயங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமலிருந்த பாராமுகப் போக்கு. கோயிந்தன் போன்றவர்கள் முன்னெடுத்த மாற்றத்திற்கான முஸ்தீபுகள். ஆனால் இந்த மாற்றங்களையெல்லாம் கடந்து, பூமணி செதுக்கியிருக்கின்ற கதாபாத்திரங்கள், இதிகாச கதாபாத்திரங்களைப் போல காலம் கடந்து நிற்கின்றன. நிற்கும்.
Resilience என்ற வார்த்தைப் பிரயோகம் சமூகப் பணியாளர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. அதை இடர்ப்பாடுகளை தாங்கி நிற்கும் வலுவுள்ள, நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய நிலை என்று சொல்லலாம். Resilient Families மற்றும் Resilient Communities ஐ கட்டமைப்பதுதான் சமூகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால். ஆண்டி-கருப்பி என்ற ஆளுமைகள் தங்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் எப்படி இடர்ப்பாடுகளைத் தாங்கி நிற்கும் வலுவைத் தருகின்றார்கள் என்பதுதான் அஞ்ஞாடி வெளிப்படுத்தும் வாழ்வியல் நெறி. ஆண்டியின் குடும்பம் மட்டுமல்ல, கலிங்கலூருணி மக்கள் கூட அவர்களோடு தொடர்புடைய அனைவரின் resilience-க்கும் உதவுகின்றார்கள். பஞ்சம் பிழைக்க வந்த சண்முக நாடாரின் குடும்பத்திற்காகட்டும், சுந்தர நாயக்கர் மற்றும் ஆண்டாள் என்ற நாயக்கர் பெண்மணிக்காகட்டும், கருத்தையா தன் கூட்டாளிகளுக்கு செய்துகொடுக்கும் ஏற்பாடுகளில் அது வெளிப்படுகின்றது. இதையெல்லாம் செய்வது மிகச் சாதாரண மனிதர்கள்தாம். இதையெல்லாம் இப்படிஇப்படி செய்யவேண்டும் என்று விரிவான ஆய்வுகளுக்குப்பின் பரிந்துரைக்கின்ற கனமான பாடப்புத்தகங்கள் சொல்லும் உத்திகளையெல்லாம் போகிற போக்கில் வெளிப்படுத்தி, நம்மையெல்லாம் அஞ்ஞாடி கதாபாத்திரங்கள் அசர வைக்கின்றார்கள். சிந்திக்கத் தூண்டுகின்றார்கள்.
அஞ்ஞாடி ஆண்டி-மாரியின் நட்பில் தொடங்கும் ஒரு வாழ்வோவியம். அவர்கள் பள்ளர்–வண்ணார் என்பது ஒரு அடையாளம்தான். ஆனால் அந்த அடையாளத்தின் மீது கட்டமைக்கப்படும் மதிப்பீடுகள்....வண்ணாக்குடி, கழுதைகள், வண்ணாந்துறை பற்றி எழுதும்போதெல்லாம் பூமணி விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார். கம்மந்தரிசில் கழுதைகளை மேய்த்துக்கொண்டிருந்த மாரி என்று முதல் பக்கத்தில் தொடங்கும் பூமணி, இறுதியில் 990 ஆம் பக்கத்தில், கலிங்கலில் வாழ்ந்த மாரியின் வம்சவரலாறு என்றுகூட குறிப்பிடாமல், கலிங்கலில் பட்டமாண்ட அல்லத்தானின் வம்சவரலாறு என்று சொற்பிரயோகம் செய்யும் போது, பூமணியின் மனது புரிய வருகின்றது.
பட்டமாண்ட பாளயக்காரர்களெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் மறைந்துபோக, வேறு எந்த ஆதாரங்களுமில்லாத ஒரு வண்ணார் குடும்பம், CPR என்று சொல்லப்படும் Common Property Resources மட்டும் பயன்படுத்தி கிளைவிட்டுப் படர்வது பல பாடங்களை நமக்குக் கற்றுத் தருகின்றது. இதுவரை CPR பற்றி மிகப் பெரிய ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள் சொல்லமறந்ததை எல்லாம் அஞ்ஞாடி சொல்லிச் செல்கின்றது. சலவைத் தொழிலுக்கும், sustainable Development க்கும் தொடர்புகளிருப்பதை களப்பணியினின் மூலம் அறிந்துகொண்டவன். இன்று வரை அவர்களில் பெரும்பாலோர் Common Property Resources ஐ நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். நகரத் தெருக்களின் மரநிழலிலோ, கட்டடங்களின் உயரத்தால் நிழல் விழும் இடங்களிலோ நின்று தொழில்செய்து கொண்டிருக்கும் அயர்ன் வண்டிக்காரர்கள் அதற்கு நல்ல உதாரணம். எந்த ஒரு சேவைத் தொழிலாளியும் - வீட்டு வேலைக்காரர்கள், எலெக்ட்ரீசியன், பிளம்பர் உருவாக்க முடியாத நம்பகத்தன்மையை அவர்கள் சமூகத்தில் உருவாக்கி வைத்துள்ளனர். அவர்கள் எங்கிருந்து வருகின்றார்கள் என்று தெரியாமலே, விலையுயர்ந்த துணிகளை அவர்களிடம் தேய்க்கக் கொடுக்கின்றார்கள். அந்த நம்பிக்கையை அவர்கள் சீர்குழைத்ததாக இதுவரை எந்தப் புகாருமில்லை. இமயத்தின் கோவேறு கழுதைகளை அடுத்து நான் படித்தவரை, வண்ணார்களின் வாழ்வியலை இவ்வளவு கரிசனத்தோடு தமிழ் எழுத்தாளர்கள் யாரேனும் கையாண்டிருக்கின்றார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
மருது சகோதரர்களுக்கும்- ஊமைத்துரைக்கும் இடையிலிருந்த நட்பைவிட, ஆண்டிக்கும்- மாரிக்கும், ஆண்டிக்கும்-பெரிய நாடாருக்கும் இடையே நிலவிய நட்பு நமக்கு ஒரு பாடம். பாளயக்காரர்களின் நட்பை நம்மால் பாவிக்க(Imitate)/பின்பற்ற முடியாது. ஆனால் நாம் நினைத்தால் ஆண்டி-பெரிய நாடாருக்குமிடையே, சுந்தர நாயக்கர்- மாடப்பனுக்குமிடையே, ஆண்டாள்- நெத்திலி வேலம்மாள் இடையே ஏற்பட்ட நட்பை நம்மால் பின்பற்ற முடியும்.
சிவகாசி கலவரத்தில் தன் கணவன் தங்கையாவைப் பறிகொடுத்துவிட்டு, கழுகுமலைக்குத் தன் இருகுழந்தைகளுடன் திரும்புகின்றாள் பெரிய நாடாரின் பேத்தி தெய்வானை. தோளில் கிடக்கும் மகள் இறந்துவிட்டதுகூட அவளுக்குத் தெரியவில்லை. களைத்து, சோர்வுற்று வரும்போது எதிரில் தென்பட்ட ஆட்டுக்காரனிடம் வழிகேட்கிறாள்.
“கழுகுமலை எங்கிருக்குய்யா”
“மேக்க தொலவட்டாச்சே.போறதுக்குள்ளே இருட்டீருமே”
“தெக்க என்ன ஊரு இரிக்குது”
“கலிங்கலூருணி”
“தூரமா”
“எட்டிப்போனா செத்த நேரத்திலே போயிரலாம்”
.....கலிங்கலுக்கு தெய்வானை நடையை விடுகிறாள். ஆண்டிப்பாட்டையா வீட்டிற்கு செல்கின்றாள். ஆண்டிக்குடும்பன் அடைக்கலம் தந்து ஆதரிக்கின்றான். காலம் கடக்கின்றது. கலிங்கலில் நாடார் தெரு உருவாகின்றது. அல்லல் படுவோருக்கு அபயமளிக்க தெய்வீக சக்தியால்தான் முடியுமென்று நம்முடைய இதிகாசங்கள் நம்மை நம்பவைத்துவிட்டது, மாறாக சாதாரண மனிதர்களாலும் அதைச் செய்யமுடியும் என்று பூமணி காட்டும்போது, அபயமளிப்பதற்கு தெய்வ சக்தியோ, தியாகமோ தேவையில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது என்று பூமணி நம்பிக்கை ஏற்படுத்தும்போது, நமக்கும் மனிதனாக, ஆண்டியைப் போல ஆக ஆசைவருகின்றது.
(சத்திரப்பட்டி) சுந்தர நாயக்கர் - மாடப்பக்குடும்பன், மாடனின் மனைவி முத்தம்மா, மகள் சீனித்தாய் இவர்களைச் சுற்றி பின்னப்படும் பாசவலை போன்று எல்லோரையும் பின்னிக்கொண்டால் இவ்வுலகில் எவ்வளவு சமாதானம் உண்டாக்கியிருக்கும். சுந்தர நாயக்கர் தன் மனைவியால் அவமானப்படுத்தப்படுவதாக நினைக்கும் போதெல்லாம், மாடப்பனின் ஆறுதல் வார்த்தைகள், ஒரு குடும்பனின் வார்த்தைகளாக அல்லாமல் ஒரு குருவின் உபதேசமாகவல்லவா வருகின்றது.
“நாளெல்லாம் ஒரே மாதிரி இருந்தே முடியுமா சாமி” (பக் 911) ”காலத்துக்கு தக்க மாரிக்கிறனும் சாமி” “எல்லாம் நல்லா நடக்குதா சந்தோசம்னு பெருந்தன்மையா நெனைச்சுக்கிறனும் சாமி” (பக்.920). மனதை வருடும் இதமான வார்த்தைகள் அதுவும் ஒரு வாலிபனிடமிருந்து வருகின்றது என்பதுதான் மிகப் பெரிய பாடம்.
அதே மாதிரி கலிங்கல் நெத்திலி வேலம்மாள் – வேப்பங்காடு ஆண்டாள் உறவைச் சொல்லவேண்டும். துயருரும் ஒருவர் தன்னிடம் கொட்டித்தீர்ப்பதை யாரிடமும் சொல்லக்கூடாது. Principle of Confidentiality என்பது சமூகப் பணியாளர்களும், Counsellars ம் கடைபிடிக்க வேண்டிய தர்மம். படபடவென்று பேசும் கதாபாத்திரமாக நெத்திலி வேலம்மாள் காட்டப்பட்டாலும், விதவையான ஆண்டாள் உணர்ச்சிகளோடு தோற்று கர்ப்பம் தரிக்க அதைக் கலைப்பதற்கு நெத்திலி உதவினாலும், அதை ஆண்டாளின் பலகீனம் என்றோ, இழுக்கியல்புடையதாகவோ (not attaching any stigma with the people who are suffering) நினைக்காமல் உதவுவதும், அந்த உதவியை சாக்காக வைத்து சலுகைகள் பெறமுயற்சிக்காததும், அந்த இரகசியங்களை காப்பாற்றுவதும் – நெத்திலி வேலம்மாள் சமூகப்பணி பயில்பவர்களுக்கு மிகப் பெரிய முன்னுதாரணம்.
பருவமடைந்த குழந்தைகளை உளவியல் ரீதியாக எப்படி கையாளவேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றோம். ஆனால் வெளிஉலகத் தொடர்பில்லாத ஆண்டியும் கருப்பியும் தங்கள் மகள் வீரம்மாளின் காதலை அங்கீகரிக்கும் போது, படிப்பென்ன மயிர் படிப்பு, Knowledge is structured in consciousness என்ற யோக ஞானத்தின் விளக்கமாக அவர்கள் வாழ்ந்ததை உணரமுடிகின்றது.
நம்முடைய ஞாபகசக்திக்கு சவால்விடுமளவு எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையோட்டத்தில் தேவைப்படுகின்றார்கள். தன் திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம், கருத்தையா பிற சண்டியர்கள் கலிங்கலைக் கொள்ளையடிக்காமல் தடுத்து நிறுத்துவது. புளுகுனியாக, பொறுப்பற்ற இளைஞனாக கோயிந்தன் காட்டப்பட்டாலும், தேங்கிக்கிடக்கும் ஒரு சமூகத்தில் கலாச்சார ரீதியான மாற்றங்களுக்கு வித்திடுவது படிப்பவர்களை நிச்சயமாக சிந்திக்க வைக்கும்.
கொத்துக்கொத்தாக பஞ்சத்திலும், நோயிலும், கலவரங்களிலும் மக்கள் மடிவது நம்முள் பலகேள்விகளை எழுப்பினாலும், அதற்கான விடைகளை நோக்கி சற்றாவது நாம் முன் நகர்ந்திருப்பதாகவே எனக்குப் படுகின்றது. ஆனால் தன் மகன் மாரிமுத்துவின் பாராமுகத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பொம்மக்காள், உவர்க்காட்டுத் தோட்டத்தின் தெலாக்கல்லில் தூக்குப் போட்டுக்கொள்ளும் சர்க்கரை நாடார், தொழுநோயாளியான மரியான் உபதேசியாருக்கு மரணத்திற்குபின் கிடைக்கும் மரியாதை, மரணத்திற்கு முன் கோவிந்தனின் மனநிலை - இந்தச் சம்பவங்கள் எழுப்பும் கேள்விகளுக்கான விடைகள் இன்றளவும் நம்மிடம் இல்லை. அதற்கான விடைகளை நாம் தேடுகின்றோமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் அஞ்ஞாடி சிலவிடைகளை தொட்டுக்காட்டிச் செல்கின்றது. அது என்ன?
3
ஏதாவது சம்பவத்தையோ, மனிதர்களையோ நினைவுகூறும் போது, “அதுமாதிரி இப்ப எங்கே பார்க்கமுடியுது, அந்த மாதிரி மனுசங்க இப்ப எங்கே இருக்காங்க” என்று கடந்த கால விருப்புணர்வு (nostalgic feeling) மிகும்போது, அந்த சம்பவங்களும், மனிதர்களும் நடைமுறை சாதியமற்றவைகள் என்ற கருத்தே அதிலிருந்து மறைமுகமாக வெளிப்படுகின்றது. கடந்தகால மிகையுணர்வு நிகழ்காலச் சம்பவங்களைப் புரிந்துகொண்டு செயலாற்ற தடையாய் இருந்துவிடுகின்றது. மாறாக அந்த மாதிரியான சம்பவங்கள் காலம் கடந்தும் தொடர்கின்றது, அந்த மாதிரியான மனிதர்கள் இன்றும் நம்முடன் வாழ்கின்றார்கள் என்ற உணர்வு மேலோங்கும்போதுதான், அதிலிருந்து, அவர்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள தயாராகின்றோம். “அஞ்ஞாடி” குறிப்பிடும் சம்பவங்களாகட்டும், சித்தரிக்கும் கதாபாத்திரங்களாகட்டும், காலத்தைக்கடந்து வெவ்வேறு வடிவங்களில் நம்மைத் தொடர்கின்றன. அதை பூமணி எழுத்தாக்கிக் காட்டும் போது, அதை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, “ஓ! அதுமாதிரி தானே இதுவும், அவர்கள் மாதிரிதானே இவர்களும்” என்று நமக்கு புரியவரும் போது, “அஞ்ஞாடி” புதினம் என்ற நிலையிலிருந்து மேலுயர்ந்து நம்மைப் பக்குவப்படுத்தும் பாடப்புத்தகமாகின்றது. நாம் பாடம் கற்றுக்கொள்ள தோதாக அஞ்ஞாடியில் எத்துணை சம்பவங்கள். எத்துணை மனிதர்கள்.
ஆண்டியின் மனைவி கருப்பி கதைப்படி ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டவள். ஆனால் அவள் குழந்தைகளைக் கையாளும் முறை, நூற்றாண்டுப் பழமைக்குப் பதிலாக இன்றுகூட பார்க்க முடிந்த செயலாகத்தான் இருக்கின்றது.
கருப்பி பிள்ளைகளை வளர்த்த விதத்தை பூமணி விளக்குகின்றார்.
“அவள் தன் பேரனை என்னமாக வளர்த்தாள்”......ஒருதடவை பேரனை தலைக்குமேலே தூக்கி அண்ணாந்து கொஞ்சும் போது சரியாக அவள் வாயில் மோண்டுவிட்டான். அவள் பதட்டப்படவில்லை. மோண்டு முடிக்கும் வரை வாயைத் திறந்து காட்டிவிட்டு கொப்புளித்துத் துப்பினாள்”
அதைப் பார்த்த ஆண்டி “நீயென்ன எறும மாட்டுப் பெறவியா” என்று திட்டுகின்றான்.
அதற்கு கருப்பி “ஒனக்கு ஒண்ணும் தெரியாது. புள்ளையை படக்குன்னு எடுத்தா மோத்திரத்தை அடக்கீரும்”
இன்னொரு சம்பவம்...
ஒரு நல்ல நாளன்று கும்பா நெறைய நெல்லுச்சோற்றில் பருப்பாணம் ஊற்றி ஆசையாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். பேரன் (பொய்யாளி) நின்றாமானைக்கி கும்பாவில் மோண்டுவிட்டான். அதைப்பார்த்த சொக்கம்மா (கருப்பியின் மருமகள்) “சனியனே ஒனக்கு மோத்திரக் குடுக்கை அந்துபோச்சா” என்று ஓடிவந்து பொய்யாளியை அடிக்கின்றாள்.
அடிதாங்காமல் அழுத பேரனை மடியில் வைத்து அமர்த்தியபடி, அந்த சோற்றை கருப்பி பிசைகின்றாள். சாப்பிட்டு முடித்துவிட்டு அழுது ஓய்ந்திருந்த பேரனைப் பார்க்கின்றாள். ‘பருப்புக்கு கொஞ்சம் உப்பு கூடிப் போச்சுடா” என்கிறாள்.
வலிக்கும் வரை அன்பு செலுத்து (Love Until it Hurts) என்று மதர் தேரெசா பற்றிய புத்தகத்தின் அட்டையப் பார்த்துள்ளேன். வலிக்கும் வரை வேண்டாம். அருவருப்பில்லாமல் இருந்தாலே போதுமே. அன்புக்கு அருவருப்பு கிடையாது.
சில ஆண்டுகளுக்கு முன், தவழ்ந்து திரிந்த எங்கள் வீட்டுப் பாப்பா, தட்டில் வைத்திருந்த பட்டாணியை எடுத்து முழுங்கி விட்டது. தட்டில் வைத்திருந்த பட்டாணியை காணவில்லை என்று தேடியபோது, நான்கைந்து மணிநேரம் கழித்து, அது பாப்பாவின் வயிற்றிலிருந்து ஜீரணமாகமுடியாமல் கழிச்சலாக வெளிவந்தது. பட்டாணியை விட்டுவிட்டு கழிச்சலை மட்டும் வீட்டு நாய் நாக்கிவிட்டுச் சென்றுவிட, கொத்தான பட்டாணி எண்ணை தடவிய பளபளப்புடன் வராண்டாவில் கிடந்திருக்கின்றது. அதைச் சுத்தம் செய்யுமுன், உறவாடிவந்த அம்மையார் அப்பட்டணிகளை எடுத்து தின்ன ஆரம்பித்தார். அதைப் பார்த்து பதறிப் போய், “அதையெடுத்து ஏன் தீங்குறீங்க. அது பாப்பாவோட பீயில் வந்தது” என்று அலற, அவரோ மிக நிதானமாக, “பாப்பா பீயிலே வந்ததுதானே. ஏதோ பாலிடால் தடவுனது மாதிரி ஏன் இந்த அலறு அலறீங்க” என்றாரே பார்க்கலாம்.
கருப்பிகள் என்றைக்கு செத்தார்கள். அவர்கள் செத்தார்கலென்றாள், அஞ்ஞாடி பாசையில், “வொக்காளி இந்த ஓலகம் என்ன மயித்துக்காகுறது”. அவர்கள் காலம் தோறும் வாழ்கின்றார்கள். யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு வீட்டிலும் கருப்பிகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இரண்டு மூன்று கருப்பிகள் ஒருசேர ஒருவீட்டிலிருந்தால் அது பல்கலைக்கழக அந்தஸ்து A+ தரச் சான்றிதழ் பெறுகின்றது.
அடுத்து ஆண்டியைப் பற்றி ஒரு சித்தரிப்பு.
ஆண்டியின் விதைப்பில் பழுதிருக்காது. கருப்பி கையிலும் பழுதிருக்காது. அவர்கள் விதைத்தால் பயிர்கள் எக்காளமிட்டு முளைக்கும். அவர்களின் கைராசியும் நேர்த்தியும் அப்படி.
தங்கள் நிலத்தில் விதைத்துக் கொடுக்க அயலூர்களிலிருந்தும் ஆண்டியைத் தேடி வருவார்கள். இன்ன சாதிக்காரர்கள் என்றில்லை. அவனும் சுணங்காமல் போவான். ஆண்டி எந்த ஊருக்குப் போனாலும் வாய்நிறைய மரியாதை கிடைக்கும். மேல்சாதிக்காரர்கள் கூட அவன் விதைப்பைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.
போகிற ஊர்களிலெல்லாம் “வெள்ளாமையெல்லாம் எப்படீருக்கு” என்று ஆண்டி அக்கறையாக விசாரிப்பான்.
“புள்ளீகளைப் பத்தி வெசாரிக்கிற மாதிரியில்ல வெள்ளாமையைப் பத்தி விசாரிக்கான். அவன் என்ன கஞ்சிக்கில்லாத வெங்கம் பயலா. ஈரனேர்ச் சம்சாரி. ஏகப்பட்ட நிலம். வாழைப்பழம் போல மாடுகள். கெதியான விவசாயம். சொந்த வேலையைப்போட்டுவிட்டு ஊரானுக்கு வெதச்சிக் கொடுக்கனும்னு வேதவதியா?
விதைபுக்காக ஆண்டிக்கோ, கருப்பிக்கோ யாராவது கொத்துக்கூலி கொடுக்கவந்தால் வசவு நாறிவிடும். அடுத்தவர்கள் காட்டில் விதைப்பது பிரியத்தினால். அது அவர்களைப் பிடித்தாட்டிய கிறுக்கு.
தன்னார்வத்தில் செயல்பட்ட அற்புதத் தம்பதியினர் The couple together were great volunteers.
சிலவருடங்களுக்கு முன் ஒரு கலந்துரையாடலுக்காக, நிதி ஒதுக்கீடு இல்லாத ஒரு informal discussion-க்காக தமிழ் நாடறிந்த மதுரை பேராசிரியர்கள் இருவரை தொடர்புகொண்டோம். தமிழ் இலக்கிய/கலாச்சாரப் பின்னணியில் சமூகப்பணி கல்வியைப் புரிந்துகொள்ள செய்யப்பட்ட முயற்சி. அவர்களை எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். நாங்கள் அழைத்துக்கொண்டு வருகின்றோம் என்று ஆர்வமுடன் சொல்லிச்சென்ற மாணவர்கள் வாடிய முகத்துடன் திரும்பினார்கள். என்னவென்று கேட்க, அவங்க ரெண்டு பேரும் சொல்லிவைத்த மாதிரி இரண்டாயிரம் ரூபாய் “கொத்துக்கூலி” கேட்கின்றார்கள் என்று சொல்ல வேறு இரண்டு பேராசிரியர்களை (Prof. EKR of Yadhava College and Prof. PothiReddy of American College) அழைத்து வந்தோம். தன்னார்வத்துடன் செயல்படும் மனிதர்கள் இருக்கின்றார்கள்.
இதைவிட மனதை நெகிழ வைத்த சம்பவம்.
கிழக்கு பதிப்பக பத்ரியவர்களுடன் எனக்கு சின்னதாக அறிமுகம் உண்டு. உங்களை மாதிரியான நபர்கள் எங்கள் மாணவர்களிடையே பேசினால் அவர்கள் மேலான செயல்களுக்கு தூண்டப்படுவார்கள் என்று அவரை கல்லூரிக்கு அழைத்தேன். மதுரைக்கு வேறு வேலையாய் வரும்போது மாணவர்களைச் சந்திப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்படி அவர் மதுரைக்கு வந்தபோது “பத்ரியுடன் ஒருநாள்” என்று தலைப்பிட்டு நிகழ்ச்சி நடத்தினோம். அது மாணவர்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சியாக அமைந்தது. நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்காக “தேங்காய் முடி” (பொன்னாடை போர்த்தியது) வழங்கினோம். நாங்கள் என்ன சொல்லிக் கொடுக்கின்றோம், அதை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆலோசனை சொன்னார். ரயில்வே ஸ்டேஷனில் விட்டு வருகின்றோம் என்றதைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் அவரே ஆட்டோ பிடித்துச் சென்றார். அடுத்த சில தினங்களில் அவர்களுடைய System Engineer ஐ சென்னையிலிருந்து அனுப்பிவைத்து, மிகக் குறைந்த செலவில் கல்லூரி கணணிகளுக்கு இணையவசதி எப்படி ஏற்படுத்தலாம் என்று ஆலோசனை சொல்ல அனுப்பினார். அடுத்து கிழக்கு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.மருதன் அவர்களை அனுப்பி வைத்து, எங்களுடைய அனுபவங்களையெல்லாம் ஆவணப்படுத்தி உலகின் பார்வைக்குக் கொண்டுசெல்ல முடியுமா? என்பதை அறிந்துவர அனுப்பினார். எங்களுக்கு ஒரு செலவும் இல்லை.
ஆண்டியையும் கருப்பியையும் பிடித்தாட்டிய கிறுக்கு அவரையும் பிடித்து ஆட்டுவதை உணர்ந்த இன்னொரு சந்தர்ப்பம். ஆண்டியைவிட பத்ரி இன்னும் மோசமான கிறுக்கு என்பதை பூந்தமல்லிக்கருகிலுள்ள ஜமீன் கொரட்டூர் என்ற கிராமத்தில் அவர் College of Engineering, Guindy, NSS மாணவர்களுடன் செலவிட்ட நேரத்தையும், மற்றதையும் சொல்லலாம். ஆண்டியை மற்றவர்கள் குறிப்பட்டது மாதிரி, வேலைவெட்டி இல்லாதவரா பத்ரி. ஒரு பிரியம். சமூக ஆர்வம்.
அஞ்ஞாடி கதைப்படி ஆண்டி இறந்துவிட்டார்தாம். ஆனால் ஆண்டியைப் போன்ற ஆத்மாக்கள், ஊரெல்லாம் “நல்லது விதைத்துக் கொடுக்க” நம்மிடையே இருக்கின்றார்கள். கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் பல ஆண்டிகளை நாம் பார்க்கலாம். விதைத்துச் செல்வதில் மட்டும் அவர்களுக்கு அலாதிப்பிரியம். அறுவடையை நாம் அனுபவித்துக்கொள்ளலாம்.
அஞ்ஞாடி முழுக்க காலம் கடந்துநிற்கும் கதாபாத்திரங்கள்தாம். ஆண்டியின் கொள்ளுப் பேரனாக கோயிந்தன் என்று ஒரு கதாபாத்திரம். மாற்றங்களை மிக மெதுவாக எதிர்கொள்ளும் கலிங்கலில் சடசடவென மாற்றங்களைக் கொண்டுவருகின்றான். சிறுசுகளையும், பெருசுகளையும் கிராப் வெட்டிக்கொள்ள வைக்கின்றான். பெருசுகளின் “பொட்டணத்தை” மறைக்க கோவணம் கட்டவைக்க தந்திரம் செய்து சாதிக்கின்றான். சவுரிமுடி ரகசியத்தை தெரிந்துகொண்டு குளுவன் செவிட்டில் அறைந்து துரத்திவிட்டு அதைப் பற்றி ஜம்பமடிக்காமல் அமைதிகாக்கின்றான். ஊரில் முதன்முதலாக மடமும், வேப்பமரத்தடியில் உட்கார்ந்துபேச மேடையும் கட்டுகின்றான். இளைஞர்களை ஒன்றிணைத்து கூட்டு முயற்சியில் ஈடுபடுகின்றான். கலிங்கலில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும், விதைக்கின்றான். முன்னேற்றப் பணியாளர்களைப் பற்றி பேசும் போது “அவர்கள் முன்னேற்றப் பணியை மகிழ்ச்சிக்குரியதாக்கினார்கள்” என்று ஒரு அறிஞர் குறிப்பிடுவார். (They made development work as a pleasurable one). அது மாதிரி கோயிந்தன் எந்த கோட்பாட்டு வட்டதிற்குள்ளும் சிக்காமல், கலிங்கல் உருள மசகாகின்றான்.
கோயிந்தன் வாய் கூசாமல் சாமிகளைக் கிண்டலடிப்பான். அப்படியொரு குணம். “சாமியைக் கும்புட்டாத்தானே மழ பேயும்” என்பவரிடம் “அப்ப இத்தனை வருஷம் கும்புட்டதெல்லாம் பொய்யா” என்று எதிர்க்கேள்வி போட்டு மடக்குவான்.
ஆனால் அதே நேரத்தில், சத்திரப்பட்டி சக்கிலியக்குடி முனியசாமி மீது மூத்திரம் மோண்டு கொண்டிருந்த கலிங்கல் ஆட்டுக்காரச் சிறுவர்களை ‘ஏலே அகராதி புடிச்ச அறுதச் சிறுக்கி புள்ளீகளா” என்று அவர்கள் மீது கல்லெறிந்து விரட்டுவான்.
“அதை சாமியா என்னன்னு நெனச்சீக. மழைன்னும் பாக்காம வெயிலன்னும் பாக்காம பாவம் அது பாட்டுக்கு ஒத்தியிலே நிக்குது. அதைப் போயி பாடு காங்கீகளே. நாளைக்கு மேச்சாதிக்காரப் பசங்க வந்து ஓங்க சாமி மேல பேண்டுவச்சா என்ன செய்வீக”
“பேண்ட குண்டிய அறுத்து நாய்க்குப் போட்ருவோம்” என்று மோண்டவன் அதட்டலாகச் சொல்ல, “ஒன் மானிய அறுக்குற ஆளில்லங்கிற துமுருள பேசுற. தைரியமான எளவட்டங்கன்னா அங்கயே நில்லுங்க. அத்தன பேரு குஞ்சியவும் அறுத்து காக்காய்க்கு போடுறனா இல்லையான்னு பாரு” என்று கோவத்தோடு கத்துவான்.
கோவணத்தைக் கெட்டிக்கோ, குஞ்சியத்தான் பொத்திக்கோ” என்று பயல்கள் பொச்சைப் பொத்தியபடி ஓடிவிடுவார்கள்.
கோயிந்தனுக்கு சகலரிடமும் இருந்த சௌஜன்யம் கடந்த கால நிகழ்வல்ல. இன்றைக்கும் பல குடியிருப்புகளில் காணக் கிடைப்பதுதான். அதை சமூக மூலதனம் என்கின்றார்கள். இவர்களெல்லாம் ஊருக்கு ஊறுகாயாகவும், வீட்டிற்கு வேப்பங்காயாகவும் இருப்பவர்கள். ஊருக்கு ஒரு கோயிந்தன் இருந்தாகவேண்டும் என்பது சமூகவிதி. இல்லையென்றால் அது ரெவின்யூ பாஸையில் பேச்சற்ற கிராமமாகிவிடும். அவர்களில்லாமல் ஊரில்லை. முன்னேறிய ஊர்களிலெல்லாம், யாரையும் கேட்கவேண்டாம், என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கின்றேன், அங்கே ஒன்றுக்கும் மேற்பட்ட கோயிந்தன்கள் இருப்பார்கள்.
இன்னும் தொடரும்
படங்கள் நன்றி
 http://vidhaanam.wordpress.com, http://solpudhithu.wordpress.com, http://seyakumaar.wordpress.com
,

4 comments:

J.Prabakar said...
This comment has been removed by the author.
Prabakar J, Kappikulam said...

நான் அஞ்ஞாடி நாவலைப் படிக்கவில்லை. சிறிய புத்தகங்கள் படித்துதான் பழக்கம். இந்த வாசிப்பனுபவம் என்னை அந்த நாவலைப் படிக்கத் தூண்டுகிறது. இது போல வாடிவாசல் என்ற நாவல் பற்றியும் வாசிப்பனுபவத்தை படித்தறிந்தேன். இனி நாவல்களைப் படித்தால் நிறைய அனுபவங்கள் கிடைக்கும்.
உங்களோடு கற்ற கள அனுபவங்களை உண்மையாக்கும் விதமாக, மேம்படுத்தும் விதமாக இந்த வாசிப்பனுபவம் இருக்கும் என நம்புகின்றேன்.

sons of soil said...

மீண்டும் ஒருமுறை உங்களிடம் மாணவனாக பயில வேண்டும்

Rathnavel Natarajan said...

அல்லல் படுவோருக்கு அபயமளிக்க தெய்வீக சக்தியால்தான் முடியுமென்று நம்முடைய இதிகாசங்கள் நம்மை நம்பவைத்துவிட்டது, மாறாக சாதாரண மனிதர்களாலும் அதைச் செய்யமுடியும் என்று பூமணி காட்டும்போது, அபயமளிப்பதற்கு தெய்வ சக்தியோ, தியாகமோ தேவையில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது என்று பூமணி நம்பிக்கை ஏற்படுத்தும்போது, நமக்கும் மனிதனாக, ஆண்டியைப் போல ஆக ஆசைவருகின்றது. = அஞ்ஞாடி பற்றி அற்புதமான விமர்சனம். திரு பூமணி நம்மை அந்த களத்துக்கே கூட்டிச் செல்கிறார். பஞ்சம் என்றால் நாமும் ஆகாயத்தைப் பார்க்கிறோம். கழுதை தண்ணீரில் இழுத்துப்பட்டு செல்லும் போது நாமும் வேதனைப் படுகிறோம். எனது இனிய முகநூல் நண்பர்கள் இந்த பதிவை கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஆழ்ந்து படிக்க கேட்டுக் கொள்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Srinivasan Rengasamy = சார், உங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன். திரு உதயசங்கர், எழுத்தாளர், கோவில்பட்டி அவர்களிடம் போன் செய்து ஒரு நாள் திரு பூமணி அவர்களை சந்திப்போம் என்று கேட்டிருக்கிறேன்.